
பிரபல நடிகர் ஸ்ரீயின் நிலைமை குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகர் எனப் பெயரெடுத்தவர் ஸ்ரீ.
இறுதியாக, இவர் நடித்த இறுகப்பற்று திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் ஸ்ரீயின் கதாபாத்திரமும் பேசப்பட்டது.
அதன்பின், ஸ்ரீ நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இன்றைய இளம் நடிகர்களில் நம்பிக்கைக்குரியவராக மாறியவர் தற்போது இன்ஸ்டாகிராமில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றுவதுடன் ஆபாசமான விடியோயையும் வெளியிட்டார்.
இதைக் கண்ட ரசிகர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்ததுடன் ஸ்ரீக்கு சரியான உளவியல் சிகிச்சை தேவை என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் காமெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, இறுகப்பற்று படத்தில் நடித்தற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் ஸ்ரீக்கு சம்பள பாக்கி வைத்ததால்தான் இந்த நிலைமைக்கு அவர் ஆளானாதாக அவரின் நண்பர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால், ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனர் எஸ். ஆர். பிரபுவை ரசிகர்கள் கடுமையாகத் தாக்கி எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து பதிவொன்றை வெளியிட்ட எஸ். ஆர். பிரபு, “ஸ்ரீயின் நலன் குறித்து எங்களுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது. நீண்ட நாள்களாக அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நாங்கள் உள்பட அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்கிறோம். இதற்கிடையே, இத்தனை ஊகங்கள் உருவாகி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
ஆனால், ஸ்ரீயை மீட்டெடுத்து அவரை மீண்டும் பழைய உடல்நலத்துக்குக் கொண்டு வருவதே முதல் நோக்கமாக இருக்கும். மேலும், உண்மை என்னவெனத் தெரியாமல் கருத்துகளை, கதைகளை எழுதுபவர்களும் ஸ்ரீயின் பாதிப்பைப் பயன்படுத்தி என்னை தாக்கும் உயிரினங்களும் முதலில் தங்களைக் கவனிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.