நீதிபதி மகனைத் தாக்கிய விவகாரத்தில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன் தர்ஷன் வீட்டின் முன்பு உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் காரை நிறுத்திவிட்டு, தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் அருகிலிருந்த டீக்கடையில் இருந்திருக்கிறார். வெகுநேரம் வீட்டின் முன்பு கார் நிறுத்தப்பட்டிருந்ததால், அதை எடுக்குமாறு தர்ஷன் கூறினாராம்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த நீதிபதியின் மகன், அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடா்பாக நீதிபதியின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார், தர்ஷன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இந்த வழக்குத் தொடா்பாக தர்ஷனை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதேவேளையில் தர்ஷன் கொடுத்த புகாரின்பேரில், நீதிபதியின் மகன் தரப்பு மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, போலீஸார் விசாரணை நடத்தினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தர்ஷன் கொடுத்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வாகன நிறுத்த தகராறு விவகாரத்தில் நடிகர் தர்ஷன் - நீதிபதியின் மகன் தரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கும் எதிராக பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: பஹல்காம்: தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுத் தலைவராக அலோக் ஜோஷி நியமனம்!