ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

ஆர்.பி.சௌத்ரிக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் 100-வது படத்தில் நடிக்கவிருந்ததாக ரஜினிகாந்த் பேச்சு

News image

ஆர்.பி.சௌத்ரிக்கு ரஜினிகாந்த் அஞ்சலி - விடியோ க்ளிப்

Updated On :7 மே 2026, 1:33 pm IST

மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் 100-வது படத்தில் நடிக்கவிருந்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி (72), ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தில் பலியான நிலையில், சென்னை தியாகராய நகரில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களுடனான பேட்டியில் ரஜினிகாந்த் பேசியதாவது, "ஆர்.பி.சௌத்ரியின் படங்களில் நான் நடித்ததில்லை. இருந்தாலும்கூட, அவர் எனக்கு நெருங்கிய நண்பர்.

சமீபத்தில் 4 மாதங்களுக்கு முன்னர் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்குக்கூட அவர் வந்திருந்தார். அப்போது, அவர் 99 படங்களை எடுத்து விட்டதாகவும், 100-வது படத்தை எடுத்துவிட்டு ஓய்வு பெறவிருப்பதாகவும் கூறினார். அவருடைய 100-வது படத்தில் நான் நடிக்க, 3 கதைகள் வைத்திருப்பதாகவும் என்னைக் கேட்டார். அவரது படத்தில் நடிப்பதாக நானும் 100 சதவிகிதம் உறுதியளித்தேன்.

ஆர்.பி.சௌத்ரிக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

ஆர்.பி.சௌத்ரிக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

இதனிடையே, நிறைய இயக்குநர்களை ஆர்.பி.சௌத்ரி உருவாக்கியிருப்பதாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறினார். மேலும், இயக்குநர்கள் எல்லோரும் சேர்ந்து ஆர்.பி.சௌத்ரிக்கு ஒரு விழா நடத்த வேண்டும் என்றும் கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.

எத்தனையோ இயக்குநர்கள், டெக்னீசியன்களை ஆர்.பி.சௌத்ரி உருவாக்கியிருக்கிறார்; திரையுலகைக் காப்பாற்றியவர்.

99 படங்களை எடுத்த அவரின் எந்தப் படத்திலும் பெரிதளவில் பிரச்னை ஏதும் இருக்காது. பிரச்னை வந்தாலும்கூட, யாரால் பிரச்னை உருவானதோ அவரின் வீட்டுக்கு நேரில் சென்று, பிரச்னையை சுமூகமாக தீர்த்து விடுவார்.

அவர் எப்போதும் புத்துணர்ச்சியோடும் மகிழ்ச்சியாகவும் இருப்பார். அதன் காரணம் என்னவென்று கேட்டால், ரிஸ்க் எதுவும் எடுக்காததுதான் காரணம் என்று சொல்வார். அவர் ஓர் அருமையான ஆத்மா, அருமையான தயாரிப்பாளர். அவர் அகால மரணமடைந்தது வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்தார்.

தமிழ், மலையாளம், தெலங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி, சொந்த ஊரான உதய்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜோத்பூர் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் சாலையோரம் இருந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஆர்.பி. சௌத்ரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (மே 5) உயிரிழந்தார்.

ஆர்.பி.சௌத்ரி மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Tamil Superstar Rajinikanth pays tributes to producer RB Chaudhary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.