பழிவாங்கும் கதையில் பலியானவர்கள்.. ரெஜினா - திரைவிமர்சனம்

நடிகை சுனைனா நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகியுள்ளது ரெஜினா.
பழிவாங்கும் கதையில் பலியானவர்கள்.. ரெஜினா - திரைவிமர்சனம்
Published on
Updated on
2 min read


நடிகை சுனைனா நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகியுள்ளது ரெஜினா.

சிறுவயதிலிருந்து கொலை செய்யப்பட்ட தந்தையின் நினைவில் வாழ்ந்து வந்த ரெஜினாவுக்கு(சுனைனா) அவளைப் புரிந்துகொண்ட காதல் கணவர்(ஆனந்த் நாக்) அமைகிறார். வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கும்போது திடீரென ஒரு வங்கிக்கொள்ளையில் ரெஜினாவின் கணவர் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்படுகிறார். 

நிலைகுலைந்த ரெஜினா தன் கணவனைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என காவல்துறையில் தொடர்ந்து முறையீடு செய்கிறார். ஆனால், அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கணவனின் நினைவுகளால் துவண்டிருந்த ரெஜினா கொலையாளிகளை நாமே கண்டுபிடிக்கலாம் என முடிவுக்கு வருகிறாள். திட்டம்போட்டு அவர்களைத் தேடிச்செல்லும் ரெஜினா எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? அவர்களைப் பழிவாங்கினாளா? என்பதே மீதிக்கதை. 

காதலில் விழுந்தேன், மாசிலாமணியில் பார்த்து ரசித்த முகமா இது என்கிற அளவிற்கு சில காட்சிகளில் ஒட்டுமொத்த திரையையும் தன் வசம் வைத்திருக்கிறார் சுனைனா. கணவனை இழந்து உடைந்த ரெஜினாவுக்கும் பழிவாங்கும் ரெஜினாவுக்கும் இடையேயான வித்தியாசத்தை தன் நடிப்பில் மூலம் சிறப்பாக கடத்தியிருக்கிறார்.

பரபரப்பான எடிட்டிங் காட்சிகளில் சதீஷ் நாயரின் பின்னணி இசை படத்துடன் ஒன்ற உதவியிருக்கிறது. சாய் தீனா வரும் காட்சிகளில் சிறு பதற்றம் எழும்படியான ஒளிப்பதிவு, வசனம் ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.

’எதாவது தப்பா போச்சுன்னா ஏஞ்சல்ஸ், டீமன்ஸ் ஆகிடுவாங்க’ போன்ற சில வசனங்கள் கைகொடுத்திருக்கிறது.

ஆனாலும் தமிழ் சினிமாவில் பார்த்து சலித்துப்போன பழிவாங்கல் கதை. மையக் கதாபாத்திரமே நாயகி என்பதால் அவரைக் களத்தில் இறக்கி எதாவது வித்தியாசமாக காட்டுவார்கள் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 

ரிவெஞ்ச் திரில்லர் வகைப் படங்களில் அடுத்தடுத்த மர்மங்களே பார்வையாளர்களை அமர வைக்கும். ஆனால், இப்படத்தில் இயக்குநர் டோமின் டி சில்வாவின் திரைக்கதையால் நல்ல திரில்லராக வந்திருக்க வேண்டிய படம் ஒருகட்டத்தில் சோதிக்கிறது. குறிப்பாக, இரண்டாம் பாதி. முக்கியமான ’டுவிஸ்ட்’ காட்சியும் அதன் பலத்தை இழந்து நிற்கிறது.

நக்ஸலைட்டாக காட்டப்பட்ட பவா செல்லதுரை பெரிதாக திருப்புமுனையை ஏற்படுத்துவார் என நினைக்கும் நேரத்தில் திரைக்கதை சொதப்பலால் அவர் கதாபாத்திரம் முழுமை பெறாமல் திணறுகிறது. விவேக் பிரசன்னா, கஜராஜ் கதாபாத்திரங்களை இன்னும் உபயோகித்திருக்கலாம்.

மொத்தத்தில் ரெஜினா எப்படி? இதுபோன்ற பழிவாங்கும் கதைகளில் வில்லன்களை மட்டும் இலக்காக வைக்காமல் பார்வையாளர்களையும் இயக்குநர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com