இளையராஜாவுக்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்?: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உருகிய எஸ்.பி.பி.

யாருக்காகவது புரியுமா இந்த இசை ஆக்கம் என்ன என்று...
இளையராஜாவுக்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்?: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உருகிய எஸ்.பி.பி.

இளையராஜாவின் திறமையைப் பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மறக்காமல் பேசிவிடுவார் பாடகர் எஸ்.பி.பி. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டபோதும் இந்தக் குணத்தை அவர் விடவில்லை. 

2017-ம் வருடம் மார்ச் மாதம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். ஆனால், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார் எஸ்.பி.பி.

பிறகு 2018 செப்டம்பர் மாதம், தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி மேடையில் பாடவுள்ளேன். ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது சரியல்ல. எந்தப் பாடலுக்கு அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் கூறவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இதெல்லாம் நடந்தாலும் அவர்மீது எனக்கு துளி மரியாதை குறையவில்லை. ஓர் இசையமைப்பாளராக எப்போதும் அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவதற்குத் தயங்கமாட்டேன் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஹைதராபாத்தில் பேட்டியளித்தார். 

இதன்பிறகு 2019 ஜூன் 2 அன்று இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி சென்னை செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணிம் கலந்துகொண்டு இளையராஜாவை வாழ்த்தி மேடையில் பல பாடல்களைப் பாடினார். ஒரே மேடையில் இளையராஜாவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் தோன்றி இசை நிகழ்ச்சி நடத்தியதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

இளையராஜாவுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டபோதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரைப் பாராட்ட எஸ்.பி.பி. தயங்கியதில்லை. 

2019 மார்ச் 10 அன்று, விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாடகர் எஸ்.பி.பி. கலந்துகொண்டார். ஹிருத்திக் என்கிற சிறுவன், நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம்பெற்ற ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் பாடலைப் பாடினார். மிக நன்றாகப் பாடிய ஹிருத்திக்கின் திறமையைக் கண்டு அந்த இடத்திலேயே ஆனந்தக்கண்ணீர் வடித்தார் எஸ்.பி.பி. இதன்பிறகு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 

சில விஷயங்கள் நான் பேசப்போகிறேன். அது யாருக்குக் கஷ்டமாக இருந்தாலும் சரி, சுகமாக இருந்தாலும் சரி. நான் பேசியாக வேண்டும். 

அடிப்படையில் நான் ஓர் இசைக்கலைஞன். இளையராஜாவைப் பற்றி பேசப்போகிறேன். எப்போதும் இளையராஜாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர் பாடலை நான் பாடினாலும் வேறு யார் பாடினாலும் பாட்டில் என்ன உள்ளது என்பதை மனமாரப் பாராட்டிப் பேசுவேன். இல்லையென்றால் நான் கலைஞனே கிடையாது. இப்போது இளையராஜாவைப் பற்றி அதிகமாகப் பேசுகிறாரே என்கிறார்கள். இளையராஜா பற்றி மட்டுமா நான் பேசுகிறேன்! விஸ்வநாதன் சார் பற்றியும் பேசுகிறேன். பசங்க (போட்டியாளர்கள்) பற்றியும் பேசுகிறேன். சில சிறப்பம்சங்கள் இருக்கும்போது பேசவில்லையென்றால் அது ஆதங்கமாகி, அது ஒரு நோயாகி, மனிதனை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிடும். பேசியே ஆகணும். இல்லையென்றால் நான் கலைஞன் கிடையவே கிடையாது.

யாரால் இப்படி ஒரு பாடலை (ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்) இசையமைக்க முடியும்? தயவுசெய்து சொல்லுங்கள் சார். இப்பாடலின் ஒவ்வொரு அங்குலமும் ஒவ்வொரு பகுதியும் கடினமான இசை ஆக்கமாகும். நீண்ட நாள் வாழவேண்டும் இளையராஜா. கடவுள் அவருக்கு நல்ல உடல்நலம் அளிக்கவேண்டும். அவர் நன்றாக இருக்க வேண்டும்.

இந்தப் பாடலைப் பாட எனக்கும் ஜானகி அம்மாவுக்கும் நிறைய நேரம் ஆனது. பாடலின் பல நுணுக்கமான விஷயங்களை அப்படியே பாட வேண்டும் என்று இளையராஜா பிடிவாதமாக இருந்தார். நாம் எதிர்பார்க்காத நோட்ஸ் எல்லாம் பாடலில் உள்ளது. 

நானும் பாடுகிறேன், நானும் இசையமைக்கிறேன். ஆனால், இன்ஸ்ட்ருமெண்டேஷன் மிக மிக முக்கியம். அது பல பேருக்குத் தெரியாது. எந்த இசைக்கருவிக்கு எந்தளவு வீச்சு உள்ளது, இந்த ஸ்கேலில் இந்த ஸ்ருதியில் எதைப் பயன்படுத்தினால் ஒலி நன்றாக இருக்கும் என்பது பற்றி இளையராஜாவுக்கு மிக நன்றாகத் தெரியும். அவருக்கு இன்ஸ்ட்ருமெண்டேஷனும் தெரியும். 

சுலபமான விஷயங்கள் மிகவும் கடினமானவை. இலைகளில்... காதல்... கடிதம்.... (என்கிற பாடல் வரியை எடுத்துக்கொள்ளுங்கள்), இது சுலபமல்ல என்பது இசைக்கலைஞர்களுக்குத் தெரியும். அந்த வரியை மிக அநாயசமாக இந்தச் சிறுவன் பாடியுள்ளான். வண்டு... எழுதும்... பூஞ்சோலை.... எல்லாம் செமி செமி நோட்ஸ் தான். விரல்களில்... மேனிமுழுதும்... இளமை வரையும் ஓர் கவிதை.... பார்த்தாலே... தள்ளாடும்... பூச்செண்டு...... (சரணத்திலிருந்து பல்லவி வரைக்கும் பாடுகிறார்)

இதற்கு இளையராஜாவுக்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்கவேண்டும்! இதைப் பத்தி யாராவது யோசனை செய்திருப்பார்களா, அங்கு உட்கார்ந்திருப்பவர்கள்! யாருக்காகவது புரியுமா இந்த இசை ஆக்கம் என்ன என்று? ரொம்ப அழகாகப் பண்ணியிருக்கிறார் என்று மட்டும்தான் சொல்வார்கள் என்று இளையராஜாவை மிகவும் பாராட்டிப் பேசினார்.

விடியோ (38.23 - 33.35 வரை)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com