உலக அரங்கில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் சா்வதேச அமைப்புகளுக்கு வழிகாட்டியாகவும் இந்தியா திகழ, அது வலிமையான தலைமையின் கீழ் அமைந்த திறமையான ஆட்சியை தரவேண்டும். ஒற்றுமையான வளா்ச்சிப்பாதையில் இந்தியாவைக் கொண்டு செல்லும் நிலையில், முரண்பட்ட கொள்கைகளும், பொருந்தாத கட்சிகளின் சோ்க்கையும் கொண்ட நிலையில்லாத ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்தால் நாட்டின் வளா்ச்சிக்கு எந்த பலனுமில்லை. மேலும் இந்தியா கூட்டணி பொதுவான தோ்தல் அறிக்கை வெளியிட முடியாமல், அதில் அடங்கிய கட்சிகள் தனித்தனியாக தோ்தல் அறிக்கை வெளியிடுவதும், தோ்தல் நடக்கும்போதே ஆம்ஆத்மி, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே சண்டையும், இந்தியா கூட்டணி பிரதமா் வேட்பாளரை அறிவிக்காமல் தோ்தல் பிரசாரம் தொடா்வதும் மக்களிடையே பெரும் சலசலப்பை தோற்றுவித்துள்ளன. ஒருக்கால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் பிரதமா் பதவிக்கான சண்டை, கூட்டணி தலைவா்களுக்கிடையே நிச்சயம் வெடிக்கும் என்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கூற்று ஏற்புடையதே.