பொதுநலவாதியைத் தேர்ந்தெடுப்போம்!

 நாட்டின் 15-வது மக்களவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தியத் திருநாட்டின் 110 கோடி மக்களுக்கான, 534 பிரதிநிதிகளைத் தேர்வு செய்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த தேசத்தை ஒப்
Updated on
2 min read

 நாட்டின் 15-வது மக்களவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தியத் திருநாட்டின் 110 கோடி மக்களுக்கான, 534 பிரதிநிதிகளைத் தேர்வு செய்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த தேசத்தை ஒப்படைக்கப் போகிறோம்.

 இதுவரை இருந்த பிரதிநிதிகள் என்ன செய்தார்கள்? அவர்கள் நமது பிரதிநிதிகளாகத்தான் மக்களவையில் செயல்பட்டார்களா? என்ற கேள்விகள் எழுந்தால் விடைகளுக்கு பஞ்சம் ஏற்படுவது இயல்பு.

 எத்தனையோ விவாதங்களுக்கு இடையே இணையதளத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

 ""மக்களவை உறுப்பினரின் மாத ஊதியம் ரூ. 12,000. அலுவலகச் செலவுக்காக ரூ. 14,000. மக்களவைக் கூட்டத்தின்போது நாளொன்றுக்கு படி ரூ. 500. முதல் வகுப்பு ரயில் கட்டணம் முற்றிலும் இலவசம். ஆண்டுக்கு 40 முறை விமானப் பயணம், உடன் ஓர் உதவியாளருடன்.

 தில்லியில் தங்கும் விடுதி இலவசம். வீட்டுக்கு 50,000 யூனிட் வரை மின்சாரம் இலவசம். 1,70,000 தொலைபேசி அழைப்புகள் இலவசம். இன்னமும் படிகள், கழிவுகள் உண்டு.

 ஒட்டுமொத்தமாக ஒரு மக்களவை உறுப்பினருக்கு ஆண்டொன்றுக்கு ஆகும் செலவின் மொத்த மதிப்பு ரூ. 32 லட்சம். ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்தால் ஒருவரின் செலவு ரூ. 1.60 கோடி வரை வரும்.''

 யாரோ அடையாளம் தெரியாத ஒருவர் உட்கார்ந்து கூட்டிக் கழித்துப் பார்த்து (நமது மொழியில் சொல்ல வேண்டுமானால் "வேறு வேலை வெட்டியின்றி(?)') இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

 இந்தத் தொகை மிதமானதுதான் அல்லது அதிகம், குறைவு என்ற வாதம் இப்போது தேவையற்றது. அதேநேரத்தில், யார் இதையெல்லாம் கூட்டிப் பார்த்தது? அவருக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கலாமோ? என்றெல்லாமும் யோசிக்கத் தேவையில்லை.

 நாம் தேர்ந்தெடுக்கும் நபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தச் சூழலுக்குப் பொருத்தமான வாதமாக இருக்கும்.

 அரசு மருத்துவமனையில் கிடைக்கும் சிகிச்சையைப் போல ஏனோதானோவென்று யாராவது ஒருவரைத் தேர்வு செய்வதும் சரியல்ல. இப்போதைய செலவுக்கு பையை நிரப்பிவிட்டவருக்கு வாக்கு என்று கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு வாக்களித்துவிடவும் கூடாது.

 நல்லவராக மட்டுமல்ல - வல்லவராகவும், திறமையானவராக மட்டுமல்ல - சாதுர்யமானவராகவும், தொகுதிக்காக மட்டுமல்ல - ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்காகவும், சுயநலனுக்காக அல்ல - பொது நலனுக்காக பாடுபடும் ஒருவரைத் தேர்வு செய்தல் மிகவும் முக்கியம்.

 "இதுக்கெல்லாம் ஏதுங்க நேரம்?' என்று கேட்பது அபத்தம். ஒரு வேளைச் சோற்றுக்காக காய்கறிக்காரரிடம் பேசிப் பேசி, காய்களை நசுக்கி, நுனியை உடைத்து, அழுத்திப் பார்த்து வாங்கும் நாம், நமக்காக ஒருவரைத் தேர்வு செய்வதில் நேரம் ஒதுக்கி நமக்குள்ளாகவே வாதித்திட்டுக் கொண்டும், நண்பர்களிடம் விவாதிப்பதிலும் தவறேயில்லை.

 என் ஒருவரின் வாக்கு மட்டும் என்ன செய்துவிட முடியும்? ஜெயிக்கிற கட்சிக்கே எனது வாக்கு! என்றும் தேர்தல் நேரங்களில் சில அசரிரீகள் கேட்பது வழக்கமாகிவிட்டது.

 ஒவ்வொருவரின் வாக்கும் சேர்ந்தால்தான் ஓராயிரம் வாக்குகள், ஒரு லட்சம் வாக்குகள்.

 வெவ்வேறு சிந்தனையோட்டம் கொண்டோருடன் இதுதொடர்பாக "லேசாக' வாதிடலாம். சில நியாயங்கள், சில சிறுபிள்ளைத்தனங்கள், சில கோரங்கள் வெளிப்படலாம். வாதங்களை நமக்குள்ளாவே ஒரு முறை அசைபோட்டு பின்னர் தேர்வு செய்வோம் ஒருவரை.

 அவரிடமுள்ள சாதக, பாதகங்களை, நல்லவை, கெட்டவைகளைப் பட்டியலிட்டு ஒவ்வொன்றுக்கும் "பிளஸ், மைனஸ்' குறியிட்டு மதிப்பெண்ணிடுவோம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், "தேறுபவரே' இப்போதுள்ள நிலைக்கு சீர்மிகு வேட்பாளர்.

 ஒன்றை மட்டும் நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும், சிறந்த நாடாளுமன்றவாதியை இத்தனை புறையோடல்களுக்கு மத்தியில் உருவாக்க முடியுமா என்ற சந்தேகத்தை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com