‘The Soldier, above all other people, prays for peace, for he must suffer and bear the deepest wounds and scars of war’- General Douglas MacArthur.
என்கிற வாசகங்கள், சென்னைக் கோட்டையிலிருந்த அமைதிப்படைத் தலைமையகத்தில், லெப்டினன்ட் ஜெனரல் எ.எஸ். கல்கத் இருக்கையின் பின்னே தொங்கும் அட்டையில் இடம்பெற்றிருந்தது. இவ்வாசகம் ராணுவ வீரர்களிடையே பிரபலமான வாசகமாகும். அது எந்த நாட்டு ராணுவமாக இருந்தாலும் பொருந்தும்.
"இலங்கையில் உள்ள தமிழர்கள் அபாயத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காக்க நாம் செல்கிறோம் என்று எங்கள் வீரர்களுக்கு நாங்கள் சொன்னோம். ஆனால், திடீரென்று யாருக்காக நாங்கள் போராடப் போனோமோ, அவர்களுடனேயே நாங்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது' (அர்ஜுன் கத்தோஜ்.எக்கானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி கட்டுரையில்) என்று இந்திய ராணுவத்தின் அதிரடிப் படைக்குத் தளபதியாக இருந்தவர் கூறியிருக்கிறார்.
ஆனால், அமைதிப் படையினர், இலங்கையின் தமிழர் பகுதிகளில் தரையிறங்கியதும் குடிமைப் பொருள்களை வழங்கும் வேலையிலும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி சீரமைப்பிலும் ஈடுபட்ட நிலையிலும், அவர்களிடம் எந்திரத் துப்பாக்கிகள் இருந்தன. டாங்கிகள் போன்ற தளவாடங்களும், ராக்கெட்டுகளும் அதை இயக்குகிற லாஞ்சர்களும்கூட முகாமில் இருந்தன. கூடவே ஒலி, ஒளிபரப்பு சாதனங்களும் முகாம்களில் பொருத்தப்பட்டிருந்தன. இவ்வகையில் பார்க்கும்போது அவ்வீரர்களுக்குப் போரிடவும் நேரும் என்ற உண்மை தெரிந்துதான் இருக்கும். போர் என்றால், அதில் ஈடுபடுகிற வீரனுக்கு ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் குறிப்பிட்டவாறு,
"போர்வீரன், மற்றவர்களைவிட மேலானவனாக இருந்தபோதிலும், அமைதியை விரும்பியபோதிலும், அமைதியை நிலைநாட்ட என்று சொல்லப்பட்ட யுத்தங்களின்போது அவன் துன்பங்களும் துயரங்களும், ஏன் ஆழமான காயங்களும் பெறுவதில் இருந்துத் தப்பிக்க முடியாது' என்பது உண்மையாகத்தான் இருக்கும். இந்திய அமைதிப்படையின் வீரர்களுக்கும் அதுவே நேர்ந்தது.
அமெரிக்கர்களுக்கு ஒரு வியட்நாம், ரஷியர்களுக்கு ஓர் ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு ஓர் இலங்கை என்ற உதாரணம் நின்று நிலைத்துவிடும்படியாகக் கிட்டத்தட்ட 31 மாதங்கள் இலங்கையின் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டிருந்தது இந்திய அமைதிப்படை. தமிழர் பகுதிகளில் அறிவிக்கப்படாத யுத்தத்தைத் தொடர்ந்ததன் மூலம் 1115 பேரை இழந்து, ஆயிரக்கணக்கான வீரர்கள் படுகாயமுற்று, நான்கு பிராந்தியங்களில் முகாமிட்டிருந்த 48 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்திய-இலங்கைப் பிரச்னையில் இந்திய ராணுவம் சிக்கிக்கொண்டதை வெளிப்படையாக ராணுவத்தில் உள்ளவர்கள் பேச முடியாது. பேசினால் விசாரணை வரும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது ("சண்டே' வார இதழ்:14-20 மே 1990).
ஆனால், உளவுப் பிரிவுத் தகவல் சிலவற்றை அதே சண்டே இதழ் வெளியிட்டிருக்கிறது. உளவுப் பிரிவுத் தகவல்படி, "5,000 பேராக இருந்த விடுதலைப் புலிகளை 1,500 ஆகக் குறைத்துவிட்டது என்றும், இதில் 850 பேர் வவுனியாக் காட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், 170 பேர் யாழ்குடாவிலும், 100 பேர் கிளிநொச்சியிலும், 150 பேர் திருகோணமலையிலும், 250 பேர் மட்டக்களப்பிலும் மறைந்து கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டதாகவும்' தெரிய வருகிறது.
அதுமட்டுமன்றி, "அமைதிப்படையினர் 1,200 புலிகளைக் கொன்றதாகவும் காயமுற்றோர் எண்ணிக்கை 850 என்றும், சரணடைந்தவர்கள் 263 பேர் என்றும் அதே உளவுப் பிரிவுத் தகவலில்' கூறப்பட்டுள்ளதாகவும் சண்டே இதழ் வெளியிட்டுள்ளது.
இதன் பின்னர் புலிகள் புதிய ஆட்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும் அதே உளவுத் தகவலில் குறிப்பு உள்ளது.
விடுதலைப் புலிகள் குறித்து இந்தியத் தளபதிகள் கூறுவது என்ன?
*"வவுனியா காட்டில் புலிகளைத் தேடியபோது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைக்க வேண்டியிருந்தது. கண்ணி வெடிகள் இருக்கலாம் என்ற கவனத்தில் நடக்கும்போது மரங்களையும்கூட போராயுதங்களாக, புலிகள் பயன்படுத்தினர்' என்கிறார் லெப்டினன்ட் கர்னல் பி.சி. காடோச்.
*"வன்னிக் காட்டில் எங்களது முதல் எதிரி புலிகளே அல்ல; அங்கு நிலவிய வெப்பம், வறண்ட காற்றுதான். இதனால் ஏற்பட்ட வறட்சியால் தாகம் எடுத்தது. குடிக்க நீரில்லை, நீர் நிலைகளும் வறண்டுவிட்டன. வீரர்கள் தாகத்தால் தவித்தனர்.
*லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் தனது அனுபவத்தை எழுதும்போது, "பிரபாகரனை உயிருடனோ, உயிரற்ற நிலையிலோ பிடிக்காதது ஏன் என்று கேட்கிறார்கள். ஒரு தனிமனிதரை மட்டும் தனிமைப்படுத்திப் பாதுகாப்பதோ அழிப்பதோ, இதுபோன்ற சூழ்நிலையில் இயலாத செயலாகும். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. இதில், அப்பட்டமான உண்மை என்னவென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இளையதலைமுறைத் தலைமை சிறப்பாக உருவாகியுள்ளது என்பதுதான். பிரபாகரனே இல்லாவிட்டாலும் இளைய தலவைர்கள் வரிசையாக முன்வந்து, போரைத் தீவிரமாக நடத்துவார்கள். புலிகள் இயக்கம் ஒருபோதும் கலைந்து விடாது' என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் (தமிழீழம் சிவக்கிறது-பழ.நெடுமாறன்).
*மட்டக்களப்பில் பணியாற்றிய பிரிகேடியர் சிவாஜி பட்டேல், "பிரபாகரன் ஒரு மாவீரர். அவரின் ராணுவத் தந்திரங்கள் திகைக்க வைக்கின்றன. அவர் தனது போராளிகளுக்கு இத்தகைய பயிற்சியை எப்படி அளித்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
*யாழ்ப்பாணத்தில் அதிரடிப்படைத் தளபதியாக இருந்த அர்ஜுன் காத்தோஜ், "மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றிருக்கும் விடுதலைப் புலிகள் போன்ற கட்டுக்கோப்பான இயக்கங்களை எந்த ராணுவமும் எளிதில் வெற்றிகொள்ள முடியாது. கல்வியில் நூறு சதம் பெற்ற யாழ்ப்பாண இளைஞர்களை மூளைச் சலவை செய்து புலிகளின் இயக்கத்தில் சேர்க்க முடியாது. இளைஞர்கள் விரும்பியே அவ்வியக்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள். யாழ் பல்கலை அவர்களுக்கு நாற்றங்கால் மாதிரி. அங்கு படித்து, புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் தயாரிப்பில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.
இந்தக் குறிப்புகள் மேலும் நீளும். இவ்வாறெல்லாம் கூறிய அமைதிப்படை வீரர்களும், உயர் அதிகாரிகளும் இலங்கையை விட்டு 1990-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி கிளம்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


