நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 112: எம்.ஜி.ஆர். வெளியிட்ட அஞ்சலி!

மாத்தையாவிடம் ஒப்படைக்கப்பட்ட தளபதிகள் புலேந்திரன், குமரப்பா மற்றும் முக்கிய உறுப்பினர்களான அப்துல்லா, ரகு, தவக்குமார், நளன், அன்பழகன், பழனி, ஆனந்தகுமார், ரெஜினால்ட், கரன், மிரேஷ் ஆகியோரின் உடல்களில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:51 pm

மாத்தையாவிடம் ஒப்படைக்கப்பட்ட தளபதிகள் புலேந்திரன், குமரப்பா மற்றும் முக்கிய உறுப்பினர்களான அப்துல்லா, ரகு, தவக்குமார், நளன், அன்பழகன், பழனி, ஆனந்தகுமார், ரெஜினால்ட், கரன், மிரேஷ் ஆகியோரின் உடல்களில் மிக மோசமான இரத்தக் காயங்களுடன் இருவர் உடல்கள் இருந்தன.

அவை குமரப்பா, புலேந்திரன், உடல்கள்தான். ஏராளமான காயங்கள். அவர்கள் உயிர்போன பின்னும் சிங்கள வெறியர்களின் ஆத்திரம் தீரவில்லை. கொத்திக் குதறிப் போட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து மாத்தையா, பழ. நெடுமாறனிடம் மேலும் கூறியதாவது:

""12 தோழர்களின் உடல்களைப் பார்த்த எங்கள் தலைவர் பிரபாகரன் கலங்கினார். இளம் வயதிலிருந்து அவர்களோடு பழக்கம். துக்கம் மேலோங்க அது வெஞ்சினமாக மாறிற்று. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு எங்கள் தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன. இனி எங்களையும், எங்கள் மக்களையும் பாதுகாக்க இந்திய அமைதிப் படையை நம்பிப் பயனில்லை. நாங்கள் ஆயுதம் தூக்கினோம். எங்கள் பாதுகாப்புக்காகத்தான் இவ்வாறு செய்தோம். இரு அரசுகளும் எங்களை அழிப்பது என்று முடிவெடுத்தபோது நாங்கள் மானமுடன் வாழவும் சாகவும் ஒரே வழி போராட்டம்தான். அடிமைகளாகக் கொல்லப்படுவதைவிடப் போராடி இறப்பது எவ்வளவோ மேல் என உறுதி பூண்டோம்'' என்றார் மாத்தையா.

ஜெயவர்த்தனா விரும்பியது இதைத்தான். இந்திரா அம்மையார் பயிற்சி கொடுத்தார். ஆயுதம் கொடுத்தார். எனவே இந்திராவை எதிரியாகக் கருதினார் ஜெயவர்த்தனா. ஆனால் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் மாற்றுக் கருத்துக்கிடையே நட்பு பூண்டார்; ஒப்பந்தம் போட்டார். தான் செய்ய வேண்டிய வேலையை இந்தியப் படையிடம் தள்ளிவிட்டார். இந்திரா காந்தியின் மொழியில் சொல்வது என்றால் ஜெயவர்த்தனா என்கிற கிழட்டுக் குள்ளநரியின் ராஜதந்திரம் வென்றுவிட்டது.

இந்தச் சம்பவம் என்பது தற்செயல் அல்ல. "செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து இலங்கை கடற்படை, இந்தியக் கப்பல் படையுடன் சேர்ந்து ரோந்து சுற்றப் போகிறோம்' என்று தீட்சித், ஹர்கிரத் சிங்கிடம் செப்டம்பர் 11 அன்று கூறியதை இங்கே நினைவில் கொள்வது தகும்.

அதுமட்டுமின்றி 17 புலிகளை, சிங்களக் கடற்படையினர் சுற்றி வளைத்தபோது, அந்தச் செய்தியை ஹர்கிரத் சிங், தீட்சித்திடம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது அவர் சிறிய விடுமுறையில் இந்தியாவில் இருந்தார். இதைக்கேட்டபோது தீட்சித் சொன்னது, "நான் கொழும்பு திரும்பியதும் இதுகுறித்து உயர்ந்த பட்ச நடவடிக்கை எடுக்கிறேன்' என்பதாகும்.

அக்டோபர் 3-ஆம் தேதி லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் சென்னையிலிருந்து கொழும்பு சென்றார். அங்கு அவரும் தூதுவர் தீட்சித்தும் ஜெயவர்த்தனாவைச் சந்தித்து வற்புறுத்தியும் எதுவும் நடக்கவில்லை. மாறாக, ஹர்கிரத் சிங்கை திருகோணமலைக்கு உடனே சென்று அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிட்டார்.

புலேந்திரன் கைதால் அங்கு பிரச்னை எழும் என்ற கணிப்பில் பிறந்த உத்தரவு அது. மறுநாள் தீபிந்தர் சிங் கொழும்பிலிருந்து திருகோணமலை வந்து ஹர்கிரத் சிங்கிடம், "இலங்கை அரசு 17 பேரையும் விடுவிக்க மறுக்கிறது' என்று கூறியதாக அவர் தனது நூலில் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இதே சம்பவத்தை தீட்சித் தான் எழுதிய நூலில் வேறு விதமாக எழுதியிருப்பதாக ஹர்கிரத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தீட்சித் கூறியிருப்பதாவது, "பலாலி விமான தளத்தில் போராளிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கச் சொன்னதாகவும், அக்டோபர் 2,3-ல் இதுகுறித்து மேஜர் எதுவும் பேசவில்லை என்றும், அன்றாடம் எழுதும் ‘ரஹழ் க்ண்ஹழ்ஹ்’-ல் இதுகுறித்து எழுதவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே தீபிந்தர் சிங் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு, போராளிகளை எக்காரணம் கொண்டும் கொழும்புக்கு அனுப்பக் கூடாது என்று சொன்னதாகவும், தான் தில்லியில் இருப்பதாகவும் தெரிவித்ததாக அந்நூலில் எழுதியுள்ளதாக ஹர்கிரத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் குறித்து ஹர்கிரத் சிங் தனது நூலில் மேலும் கூறுகையில், "ராஜதந்திர அலுவல் முறையில் ஏற்பட்ட தோல்வியால் இவ்வாறு திசை திருப்பப்படுகிறது. 17 போராளிகளைப் பாதுகாக்கவில்லை என்பது சரியல்ல. நான் எனது மேல் அதிகாரியிடம் போராளிகள் கொழும்பு செல்வதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினேன். அதுமட்டுமின்றி இந்தியத் தூதுவர் உடனே கொழும்பு சென்று, இலங்கை அரசுத் தரப்பில், உயர்மட்டத்தில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்களில் முரண்பாடுகள் உண்டென்றாலும் ஈழத்தமிழர் பிரச்னையில் "இந்திய மேலிடத்தின்' பொதுவான அணுகுமுறை என்னவென்பது இதன்மூலம் புரிய வரும்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழ் மக்களின் போராட்டங்களைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார் என்பதற்கு ஓர் உதாரணம் திலீபன் மறைவுக்கு அவர், விடுத்த இரங்கல் செய்தியாகும்.

அவரது இரங்கல் செய்தியில், "திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட குடிக்காமல் 26.9.87-இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று புலேந்திரன், குமரப்பா மரணத்துக்கும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில், ""தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும் இலங்கைக் கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்து இருக்குமானால் அவர்களுள் 12 பேர் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்து இருக்காது.

இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில் வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது.

இந்தக் கடினமான பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காணத் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன். தமிழக அரசு இதுபற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்'' (11.10.1987 செய்தித்தாள்கள்) என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை இந்திய அரசைச் சங்கடத்தில் ஆழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.