நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒழிக்கப்படுமா ஊழல் பெருச்சாளிகள்!

நாடு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி 62 ஆண்டுகளைக் கடந்து, உலக அரங்கில் ஒரு தனித்துவத்தைப் பெற்றுள்ள போதிலும், சில ஊழல் அரசியல்வாதிகளாலும், உயர் அதிகாரிகளாலும் நாட்டின் பெருமைக்கு இழுக்கு ஏற்ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:17 pm

வே.சுந்தரேஸ்வரன்

நாடு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி 62 ஆண்டுகளைக் கடந்து, உலக அரங்கில் ஒரு தனித்துவத்தைப் பெற்றுள்ள போதிலும், சில ஊழல் அரசியல்வாதிகளாலும், உயர் அதிகாரிகளாலும் நாட்டின் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டு வருவதுதான் தேசப்பற்றாளர்களின் மனத்தை வாட்டுகிறது.

 80 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் ஊழல் தொடருமேயானால் அதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.

 ஊழல்களின் எண்ணிக்கை அதிகமாகிறதோ, இல்லையோ ஊழல் பண மதிப்பில் மட்டும் சில லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. இது ஊழலின் வளர்ச்சியை அல்லவா காட்டுகிறது? உலகமயம், தனியார் மயம், தாராளமயத்தைக் சுவீகரித்துக் கொண்டதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையாக இந்தியா மாறி வருகிறது. கூடவே, ஊழலும் பல்வேறு வடிவங்களில் பெருகி வருகிறது.

 அண்மைக்காலமாக லஞ்ச, ஊழல் வழக்குகளில் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈடுபடுவது அதிகரித்து வருவது மக்கள் ஆட்சியின் மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாகவே உள்ளது.

 முன்னாள் முதல்வர்கள் பி.எஸ். எடியூரப்பா, அசோக் சவாண், மது கோடா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, கனிமொழி எம்.பி. என அரசியல் கட்சி முக்கியப் பிரமுகர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பதைக் கேள்விப்படும்போது அரசியல் கட்சிகள் என்றாலே ஊழல் செய்வதற்கான ஓர் அங்கீகாரம் பெற்ற அமைப்போ என்ற எண்ணத்தை சாமான்ய மக்களுக்கும் ஏற்படுத்திவிட்டது!

 அரசியலில் தூய்மையாகவும், இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டியவர்கள் ஊழல் பெருச்சாளிகளாக அறியப்படும்போது நாளைய சமுதாயம் நலம்மிகு சமுதாயமாக உருவாகுமா என்ற அச்சம் எழச் செய்கிறது.

 தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கும், குற்ற வழக்குக்கும் உள்ளாகும் நபர் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்படும்போது தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடைவிதித்தாலே ஊழலற்ற சமுதாயம் உருவாக ஏன் வாய்ப்பு ஏற்படாது?

 அக். 31 தொடங்கி இம்மாதம் 5-ம் தேதி வரை ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் நாடெங்கிலும் அரசு - அரசுசார் துறை அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வோர் அரசு ஊழியராலும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுக்கப்பட்டுள்ளது.

 இவையெல்லாம் ஏதோ சம்பிரதாயம்போல் ஒருவாரத்துடன் முடிந்துவிடுவதாக உள்ளதே தவிர, இந்த விழிப்புணர்வு வாரத்தால் மனமாற்றம் அடைந்த ஊழியர்கள் எத்தனை பேர்? அதனால் பயன்பெற்ற பொதுமக்கள் எத்தனை பேர் என்று யாராவது கூற முடியுமா?

 ஏதோ தீபாவளி, புத்தாண்டுக் கொண்டாட்டம் போன்று ஒரு வாரம் ஊழல் விழிப்புணர்வு பற்றி பேசிவிட்டு, உறுதிமொழி எடுத்துவிடுவதோடு சரி, அதற்குப் பின்னரும் எத்தனை ஊழியர்கள் அதே மனநிலையுடன் உறுதியோடு பணியாற்றுகின்றனர்?

 "பொய் சொன்னால், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டால், பிறரை ஏமாற்றினால், பிறர் பழிச்சொல்லுக்கு ஆளானால் நரகம்தான் போவான், துயரத்தில் வீழ்ந்து இறப்பான்' என்று மூத்தோர் சொல்வதுண்டு.

 பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இதைப் பற்றியெல்லாம் எடுத்துரைத்து தவறான பாதைக்கு அவர்கள் செல்லாமல் இருக்கவும் செய்தார்கள். இதற்கு ஆன்மிகக் கருத்துகளை ஒரு கருவியாகவும் பயன்படுத்தினர். ஆனால், இன்றைக்கு கடவுள் நம்பிக்கையைக் கேலி பேசும் வகையில் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

 மேலைநாட்டு நாகரிக வாழ்க்கைதான் சிறந்தது போன்று சித்திரிக்கப்படுகின்றன. ஆடம்பரப் போக்கு நிறைந்த மேலைநாட்டுக் கலாசாரத்துக்கு மாறும் சூழலில் இன்றைய குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். இதுகூட நாளைய தலைமுறை ஊழல்களில் ஈடுபடுவதை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பை ஏன் ஏற்படுத்திக் கொடுக்காது? வளரும் தலைமுறையினரை மாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் இன்றைய பெற்றோருக்கும், பெரியோருக்கும் உண்டு என்பதை மறக்கலாகாது. குழந்தைகளுக்குப் பெற்றோர் கூறும் அறிவுரைதான் நாளைய நல்ல குடிமக்களாக அவர்களை உருவாக்கும்.

 ஊழல் பெற்றோர்கூட தன் மகனை நல்லவனாக வளர்க்க முடியும். தனி மனித ஒழுக்கமே ஒட்டுமொத்த சமூகத்தின் ஒழுக்கம். இதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயலாற்றினால் ஊழல் பெருச்சாளிகளை ஒழிப்பது கடினமா என்ன? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.