இந்த நம்பிக்கைக்கு காரணம் என்ன? பொருளாதாரத் தேக்க நிலையின் மோசமான கட்டத்தை தாண்டி விட்டோம் என்பதற்கான அறிகுறி தென்படுகிறது என்பது உண்மையே. பருவ மழை திருப்திகரமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கியத் துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு, உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு துறைகளில், கடந்த செப்டம்பர் மாதம் எட்டு சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய மாதம் இது வெறும் 3.7 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில், மேற்கூறிய 8 துறைகளின் பங்கு 38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, தொழிற்கூடங்களின் உற்பத்தி கணிசமாக உயர்வதற்கான வாய்ப்பும் பிரகாசம் அடைந்துள்ளது.