பல நூற்றாண்டு காலமாக உணவுக்காகவும், உயர்வானதாகவும், விரும்பியும், செய்யப்பட்டு வந்த உழவுத் தொழிலைத் தற்கால இளைஞர்கள் கெளரவக் குறைச்சலாகக் கருதிப் புறக்கணித்து வருகின்றனர். அதோடு உழவுத் தொழில் செய்பவர்களிலும் பலர் விவசாயம் கட்டுப்படியாகவில்லை கடன்தான் மிஞ்சுகிறது என்று அதிருப்தியடைகின்றனர்.
தன் சந்ததியினர் உழவுத்தொழிலைச் செய்யாமல் வேறு ஏதாவது வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைத்து அவர்களை அதற்கேற்ப உருவாக்கி விடுகின்றனர். இதேநிலை நீடித்தால், வரும் காலங்களில் விவசாயம் செய்யாமல் நிலங்களைத் தரிசாகப் போட்டுவிட்டு அல்லது போகின்ற விலைக்கு விற்றுவிட்டு நகரங்களுக்குச் சென்று வேலைதேடி குடியேறுகிற ஓர் அவலநிலைதான் ஏற்படும்.
இந்த நிலை ஏற்பட்டால் கடுமையான உணவுப்பொருள் தட்டுப்பாடும், வேலைவாய்ப்பின்மையும் நகரங்களில் நெருக்கடியும் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.
இந்தியாவின் பிரதான தொழிலாகக் கருதப்படும் விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு, வேறு பல தொழில்களின் மூலம் அனைவருக்கும் வேலை வாய்ப்பை நிச்சயமாக உண்டுபண்ண முடியாது. மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டிற்கு உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதென்பது இயலாத காரியம் என்றே சொல்ல வேண்டும்.
அரசு எவ்வளவுதான் உழவுத் தொழிலை ஊக்கப்படுத்தப் பல்வேறு திட்டங்களைத் தீட்டினாலும் தற்கால இளைஞர்கள் உழவுத் தொழிலை விரும்பி அதை முழு ஈடுபாட்டுடன் செய்தால் மட்டுமே விவசாயம் மேன்மை அடையும்.
அரசு கொடுக்கும் மானியத்தையும், வங்கிகள் கொடுக்கும் கடனையும், எதிர்பார்த்து விவசாயம் செய்வதும், அரசு எப்போது கடனைத் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்த்திருப்பதும் ஆரோக்கியமானதல்ல.
நம் முன்னோர்கள் காலம் காலமாகச் செய்து வந்த கால்நடைகளைச் சார்ந்த இயற்கை விவசாயம், தொழு உரமிடுதல், பசுந்தாள் உரமிடல், நிலத்திலும், களத்திலும் எஞ்சும் கழிவுகளை நிலத்திற்கே உரமாக இடுதல், பல பயிர்களை மாற்றி மாற்றிப் பயிர் செய்தல், சிறு தானியங்களைப் பயிர் செய்து அதனை உணவாகவும் உண்ணுதல், இதுபோன்ற இன்னும் எத்தனையோ இயற்கை முறைகளைப் பின்பற்றி விவசாயம் செய்துவந்தனர்.
இதனால் ரசாயன, பூச்சிகொல்லி மருந்துகளுக்குச் செலவிடும் கணிசமான தொகை மீதமானது மட்டுமன்றி நிலம் உயிர்த்தன்மை பெற்று, மண்புழுக்களும், நன்மை செய்யும் பூச்சிகளும் பல்கிப்பெருகின; நிலம் பண்பட்டு நல்ல விளைச்சலையும் காணமுடிந்தது. அத்துடன் நச்சில்லாத நல்ல உணவுப் பொருள்களையும் பெற முடிந்தது.
இவ்வாறாகச் செய்யப்படும் தற்சார்புடன் கூடிய உழவுத்தொழிலின் மூலம் கணிசமான ஒரு தொகையையும் ஆண்டுதோறும் சேமிக்க முடிந்தது. இயற்கை பொய்க்கின்ற சில சமயங்களில் அந்தச் சேமிப்பு அவர்களுக்குக் கைகொடுத்தது. கடனையோ மற்ற சலுகைகளையோ எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படவில்லை.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோரின் அனுபவ உரைகளாலும் செயல் விளக்கத்தாலும் விழிப்படைந்த தற்கால விவசாயிகளில் சிலர் இயற்கை விவசாயம் செய்து நல்ல பலனும் நிறைவும் பெற்று வருகின்றனர்.
அதைக் காண்கின்ற அருகில் உள்ள விவசாயிகளும் அந்த முறையினைப் பின்பற்றி நல்ல மகசூல் எடுத்து வருகின்றனர். வரும் காலங்களில் இயற்கை விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கவேச் செய்யும்.
படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் வேறு வேலைக்காக அலைந்து திரியாமல் ஆரோக்கியமான உழவுத் தொழிலை விரும்பிச் செய்யக்கூடிய காலம் வெகு சீக்கிரம் வரத்தான் போகிறது. அது மட்டுமன்றி வள்ளுவன் சொன்னதுபோல்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்: அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் - 1031).
-மக்கள் உழவுத்தொழிலைச் செய்யாமல் பிற தொழில்களைச் செய்ய விரும்பி அலைந்துதிரிந்து முடிவில் ஏரால் உழுதொழிலைச் செய்பவர்களின் பின்செல்வர்.
ஆதலால் உழவுத்தொழிலே உயர்வானது என எண்ணுகின்ற ஒரு நிலை ஏற்படும். ஒரு நல்ல விவசாயி தன் சந்ததியினரும் தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் நல்ல விவசாயம் செய்ய வேண்டும் என்றே எண்ணுவான்.
உழவுத்தொழிலைச் விரும்பிச் செய்யக்கூடிய ஆண்களும், பெண்களும், நல்ல ஆரோக்கியமான உடல்வாகும் தயாள குணமும், தன்னம்பிக்கையும் உடையவர்களாக இருப்பதை இன்றும் காணமுடிகிறது. இதைவிட பெரிய செல்வம் வேறு என்னவாக இருக்கமுடியும்?
பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் உழவுத்தொழிலை மேம்படுத்திட தங்களின் பங்களிப்பாக பாரம்பரியமிக்க இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் பண்ணைகளுக்கே நேரில் சென்று நேர்த்தியாக நேர்காணல் நடத்த வேண்டும். விவசாயத்தில் ஆர்வம் உண்டு பண்ணும் வகையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து தினமும் ஒரு மணி நேரமாவது ஒளிபரப்பினால் விவசாயிகள் பயனடைவது மட்டுமல்லாமல் படித்து வேலையின்றி உள்ள எண்ணற்ற இளைஞர்களில் பலர் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து விவசாயத்தை விரும்பிச் செய்திட முன்வருவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

