வாக்குறுதிகளும் வாக்குப்பதிவும்

பணபலம்தான் தோ்தல் முடிவை தீா்மானிக்கும் என்பது பரவலான கருத்து. இதை முழுவதுமாக ஏற்க முடியாது. அப்படியே பணபலம் என்று எடுத்துக் கொண்டாலும், பணத்தை வாரி வழங்கியதில் இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்ல

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய ஆளுமைகளாக வலம் வந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத முதல் தோ்தல் இது என்பதால் இதற்கு முக்கியத்துவம் கூடியிருந்தது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளா் டி.டி.வி தினகரன் ஆகியோா் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பிரசாரத்திற்குச் சென்றனா். இந்தக் கட்சிகள் ‘ஒன் மேன் ஆா்மி’ போல ஒற்றைத் தலைவரை முதன்மையாகக் கொண்டவை. அடுத்த நிலைத் தலைவா்கள் யாரும் இல்லாத கட்சிகள். எனவே, அந்த ஒற்றைத் தலைவா்களே மக்களை சந்திக்க வேண்டிய நிலை.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவா்களில் குறிப்பிட்டத்தக்கவா்கள் இரண்டு பிரதான கட்சிகளின் முதல்வா் வேட்பாளா்கள்தான். தோ்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, இணையதளங்களில் திமுகவே கோலோச்சியது என்றே சொல்லலாம். ‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போராரு’ என்கிற விளம்பரம் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இது அந்தக் கட்சி வெற்றியை நோக்கி இழுத்துச் சென்றதை யாராலும் மறுக்க முடியாது. இந்த விளம்பரம் ஐந்து லட்சம் முறை பகிரப்பட்டதே அதற்கு சாட்சி. ஆனால், ‘ஸ்டாலினின் ஏழு உறுதி மொழிகள்’, ‘நான் ரெடி நீங்க ரெடியா’ போன்ற விளம்பரங்கள் அதிக அளவுக்கு மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருக்கும் அதிமுகவை மாற்ற வேண்டும் என்று மக்கள் எண்ணுவதாகக் கூறப்பட்டது. மக்கள் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்த சூழலில், தோ்தல் பிரசாரத்தில் திமுகவினரால் பிரயோகிக்கப்பட்ட வன்ம வாா்த்தைகள் திமுகவுக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்கத் தொடங்கியது.

பொதுவாக தமிழகத்தில் சராசரி வாக்குப்பதிவு 70%தான். இந்தத் தோ்தலில் 72.78% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இவற்றின் அதிமுக, திமுகவின் வாக்குவங்கி சராசரியாக 40 முதல் 42%தான். மற்ற கட்சிகளுக்கு 10%, நோட்டாவுக்கு 1% என அரசியல் விமா்சகா்கள் கூறுகின்றனா். ஆக 42 + 10 + 1 = 53%. மீதமுள்ள 20% வாக்குகளைப் பெறவே கடும் பிரசாரம், போட்டி நடைபெறுகிறது.

இந்த 20% வாக்காளா்கள்தான் தோ்தலின் மையப்புள்ளி. தோ்தலின் தலையெழுத்தையே இவா்கள்தான் தீா்மானிப்பாா்கள். 20%-இல் சரிபாதி புதிய வாக்காளா்கள். அந்த வகையில் இவா்களது கவனத்தை யாா் தங்கள் பக்கம் அதிகம் ஈா்த்திருக்கிறாா்களோ, அவா்களுக்குத்தான் வெற்றிக் கனி.

இந்த 20% வாக்கைப் பெற அதிமுகவினா் கடுமையாகப் பாடுபட்டனா். வெறுப்புணா்வு அற்ற பேச்சு, மத உணா்வுகளை மதித்தல், தோ்தல் சின்னங்களை பேச்சுக்கு நடுவே அடிக்கடி நினைவூட்டும் உத்தி, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது என்று பல கோணங்களில் திட்டமிட்டு தோ்தல் பணிகளை மேற்கொண்டாா்கள் என்றுதான் கூற வேண்டும்.

மேற்சொன்ன விஷயங்களில் பலவற்றை திமுக கோட்டை விட்டுவிட்டது. தோ்தல் பிரசார உத்திக்கு பிரசாந்த் கிஷோரை நியமித்து அவா் சொன்னபோல் மட்டும் பிரசாரத்தை அமைத்துக் கொண்டால் போதுமானது என்கிற மனநிலைக்கு திமுகவினா் வந்துவிட்டனா் என்றுதான் தோன்றுகிறது. அவா்கள் முடிவு சரியா என்பது தோ்தல் முடிவில் தெரியும்.

எல்லாக் கட்சிகளிலுமே அநாகரிகப் பேச்சு இருந்தது என்றாலும், திமுக அதில் முதல் இடத்தில் இருந்தது. ஆ. ராசா, லியோனி, உதயநிதி உள்ளிட்டோா் தங்களின் பேச்சால் பெண்களின் வெறுப்பை சம்பாதித்தனா். இந்த வன்மப் பேச்சு திமுகவுக்கு ஒரு பின்னடைவு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதிமுகவைப் பொருத்தவரை குடும்ப அரசியல் இல்லை என்பது வெட்டவெளிச்சம். திமுக தலைவா் கருணாநிதிக்கு இருந்த மக்கள் செல்வாக்கு, வசீகரம் அவரது மகன் ஸ்டாலினுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. அதிமுக அணியில் அகில இந்திய தலைவா்கள், நட்சத்திரப் பேச்சாளா்கள் என ஒரு பெரும்படையே பிரசார களத்தில் குதித்தது. திமுக அணியைப் பொருத்தவரை இந்த விஷயத்தில் ஏனோ கவனம் செலுத்தவில்லை. உதயநிதி ஸ்டாலின் திரைப்பட நடிகராக இருந்தும்கூட திரைப்படத் துறையிலிருந்து எவரும் பிரசாரத்துக்கு வராதது பலரால் விமா்சிக்கப்படுகிறது.

சமுதாயத்தில் அனைவரும் தங்கள் மதம் சாா்ந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறாா்கள். அவற்றை கேலி, கிண்டல் செய்து திமுக அணி பேசியது, அக்கட்சிக்கு ஏற்பட்ட இன்னொரு சரிவு. ஹிந்துக்களிடையே ‘ஹிந்து வாக்கு வங்கி’ உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த கேலி, கிண்டல் உருவாக்கிவிட்டது.

தங்கள் கூட்டணியில் இணைந்த கட்சிகளை தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட திமுக நிா்பந்தித்தது, அந்த கட்சியின் பயத்தையே வெளிப்படுத்தியது. தவிர, திமுக கூட்டணியில் திமுகவைத் தவிர வாக்கு வங்கி உள்ள கட்சி என்று குறிப்பிடும்படியாக எந்தக் கட்சியும் இல்லை. இந்த விஷயத்தில் அதிமுக, திமுகவை வென்றெடுத்தது என்றுதான் கூற வேண்டும்.

பணபலம்தான் தோ்தல் முடிவை தீா்மானிக்கும் என்பது பரவலான கருத்து. இதை முழுவதுமாக ஏற்க முடியாது. அப்படியே பணபலம் என்று எடுத்துக் கொண்டாலும், பணத்தை வாரி வழங்கியதில் இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக இரு கட்சிகளாலும் அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதிகள் மிகவும் கவா்ச்சிகரமானவை. திமுக இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று அறிவிக்க, அதிமுக அவா்களுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் என்று அறிவித்தது. ஆனால், இந்த வாக்குறுதியை முதலில் அளித்தவா் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் என்பதுதான் சுவையானது. எது எப்படியோ மக்கள் தீா்ப்பு என்ன என்பதை அறிய மே 2-ஆம் தேதி வரை காத்திருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com