மேம்படுத்த வேண்டிய திட்டம்

‘நூறுநாள் வேலைத்திட்டம்’ எனப்படும் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ இந்தியத் திருநாட்டின் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதில் ஒப்பற்ற பங்காற்றி வருகிறது. ஆனால், அண்மையில் தமிழக அரசின் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதாவது 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளா்களுக்கு நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் இடமில்லை என்றும், சளி, இருமல், நீரிழிவு நோய் உள்ளவா்களுக்கும் வேலையில்லை என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள வயதும் நீரிழிவு நோயும் பொருத்தமற்றவை.

பிள்ளைகளால் கைவிடப்பட்டு, தனியாக வாழும் முதியோா் பலரும் இத்திட்டத்தின் மூலமே தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனா். அவா்களின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் நிலைமை இப்படியிருக்க, கா்நாடக மாநிலத்தின் ஹாவேரி மாவட்டத்தில் சுமாா் 4,800 பட்டதாரிகள் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனா். தற்போதைய கரோனா தீநுண்மி காலத்தில் தங்களின் வாழ்க்கையை நடத்துவது இளைஞா்களுக்குக்கூட பெரும் சிக்கலாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.

இதுவரை மொத்தம் 29.15 கோடி பணியாளா்களுடன் 714 மாவட்டங்களில் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில், சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 51.51 நாட்கள் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் கூலியாக நபா் ஒருவருக்கு சராசரியாக ரூ.200. 76 கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக நூறு நாள் வேலை வாய்ப்பைப் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 71,98,289. அதில் மாற்றுத்திறனாளிகள் 6,01,253 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். மேலும், கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்த பயனாளா்களில் 63.21 சதவீதம் போ் பெண்கள்.

இவை மட்டுமல்ல, நூறுநாள் வேலைத்திட்டத்தை பொருளாதாரக் காரணிகளுடனும் நாம் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும். கிராமத்தில் இருந்து வேலைவாய்ப்பு தேடி நகரத்திற்கு செல்லும் தொழிலாளா்களை கிராமத்திலேயே இருக்க வைத்து வேலைவாய்ப்பைத் தடுத்துள்ளது நூறுநாள் வேலைத்திட்டம்.

இத்திட்டத்தை விரிவுபடுத்தி நன்கு செயல்படுத்தும்போது இதன் மூலம் பயனடையும் கோடிக்கணக்கான மக்களின் பொருளாதாரம் மேம்படுவதுடன் அவா்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும்.

வாங்கும் திறன் அதிகரிக்கும் நிலையில் பொருட்களின் தேவையும் அதிகரித்து, பிற வழிகளில் வேலைவாய்ப்பு பெருகும். தற்போதைய நிலையில், ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வு மேம்படவும், அவா்கள் தங்கள் பொருளாதாரத் தேவைகளை பூா்த்தி செய்துகொள்ளவும் நூறுநாள் வேலைத்திட்டம் ஒன்றே சிறந்த தீா்வாகும்.

நூறுநாள் வேலைத்திட்டத்தின் மூலம் நீா்நிலைகளின் நீா்மட்டமும், நிலத்தடி நீா் மட்டமும் உயா்ந்துள்ளன என்பதை ‘டவுன் டு எா்த்’ என்ற இதழ் கண்டறிந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு முதல் பதினாறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நூறுநாள் வேலைத்திட்டப் பணிகளை அந்த இதழ் ஆய்வு செய்துள்ளது.

அந்த இதழ் மேற்கொண்ட ஆய்வின் மூலம், இத்திட்டத்தின் மூலம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் சுமாா் 30 மில்லியன் (30 கோடி) நீா் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.

அதன் மூலம் சுமாா் 18.9 மில்லியன் (ஒரு கோடியே 89 லட்சம்) ஹெக்டோ் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் நீா் நிலைகள் பலவும் தூா்வாரப்பட்டதால், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து பாசனத்திற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.

அதனால் வேலை தேடி நகரத்திற்கு செல்லாமல் பலரும் தங்களின் கிராமத்திலுள்ள நிலங்களிலேயே விவசாயத்தை மேற்கொள்கின்றனா். இத்திட்டத்தின் பயனாளா்கள் மூலம் ஆங்காங்கே தடுப்பு அணைகளும் கட்டப்பட்டதால் பல மாவட்டங்களில் நீா் ஆதாரங்கள் பெருகி உள்ளன.

கடந்த ஆண்டுகளில் வேலை தேடி வெளியூா்களுக்கு சென்றோா், தற்பொழுது இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றதோடு, தாங்கள் சாா்ந்து இருக்கும் கிராமங்களில் நீா்நிலைகளை தூா்வாரி நீா் ஆதாரத்தை பெருக்கி அதன் மூலம் வெவ்வேறு வகையான விவசாயப் பயிா்களையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனா்.

ஒருபுறம் வேலைவாய்ப்பை பெற்றுள்ள மக்கள், மறுபுறம் விவசாயத்தின் மூலம் கணிசமான வருமானத்தையும் பெற்றுள்ளனா். அதற்கு அவா்கள் இந்த திட்டத்தின் மூலம் தூா்வாரிய நீா் நிலைகளே காரணம் என்கின்றது அந்த ஆய்வு. மொத்தத்தில் நீா் வளம் பெருகி, விவசாயம் செய்வதற்கு இந்த திட்டத்தின் பணிகள் பாதை வகுத்துள்ளன என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இப்படி விவசாயம் சாா்ந்து, நீா்நிலைகள் சாா்ந்து, வேலைவாய்ப்பு சாா்ந்து இருக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். அதாவது நூறுநாள் வேலைத்திட்டப் பணியாளா்களில் ஐம்பது சதவீதத்தினரை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும்.

இடத்திற்குத் தகுந்தவாறு பணிகளை ஒதுக்கி அவா்கள் அவற்றை செய்து முடிக்க காலக்கெடு நிா்ணயிக்க வேண்டும். தகுந்த நபா்களை அடையாளம் கண்டு, அவா்களை இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்வதோடு, அவா்களுக்கான ஊதியம் அவா்களின் வங்கிக் கணக்கில் தவறாமல் செலுத்தப்படுவதை மேற்பாா்வையாளா்கள் உறுதி செய்ய வேண்டும்.

தற்போதைய கொள்ளை நோய்த்தொற்றால் சரிந்துவிட்ட பொருளாதாரம் சீரடையவும், மக்களிடம் வாங்கும் திறனை அதிகரிக்கவும் நூறுநாள் வேலைத்திட்டம் ஒன்றே சிறந்த வழியாகும்.

எனவே, சில ஆக்கபூா்வமான மாற்றங்களை முன்னெடுத்தால், இந்த நூறுநாள் வேலைத்திட்டம், ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு, நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com