பருவநிலை மாற்றமும் வெப்ப அலையும்!

பருவநிலை மாற்றமும் வெப்ப அலையும்!

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்திலும் இந்த வாரம் வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும், காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகல் நேரத்தில் 30-50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40-74 சதவீதமாகவும் இருக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் வெப்பம் குறைவாக இருக்கக்கூடும் என்றும் அது தெரிவிக்கிறது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பெய்யும் மழையைப் பொறுத்தவரை, இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பாா்த்தாலும், சராசரி அளவுதான் இருக்கும். அதிலும், கிழக்கு கடற்கரை, மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும், வடகிழக்கின் சில பகுதிகளிலும் வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வெப்ப அலை தாக்கத்தின் விளைவு என்னவாக இருக்கும் என்பதைத் திட்டவட்டமாகக் கூற இயலாது. பூமத்திய ரேகையை ஒட்டி உள்ள கடல் பகுதியில் வானிலையின் மாறுதல்களால் உருவான எல் நினோ இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பலவீனமடைய ஆரம்பித்து விட்டது என்றாலும், மிதமான அளவில் எல் நினோ இன்னமும் அந்தப் பகுதியில் நிலவுகிறது. இது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்.

மேலும் இந்தப் பகுதியில் கடலின் வெப்பநிலை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும், எல் நினோவின் போக்கு மெல்ல மெல்ல பலவீனமடைந்து இறுதியில் இல்லாமல் போய்விடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. மேலும் இந்த ஆண்டில் பருவநிலை காலத்தில் லா நினா போக்கு உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எப்போதுமே எல் நினோ முடியப் போகும் மாதத்தில் கோடையின் வெப்பம் அதிகமாகவே இருக்கும். 2015-இல் எல் நினோ முடிவுக்கு வந்த நிலையில் 2016-இல் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக, எல் நினோ மறைய ஆரம்பிக்கும் மாதங்களில் தீபகற்ப இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று தனியாா் வானிலை ஆய்வு மையமும் தெரிவிக்கிறது.

அதுபோலவே, கோடைகாலத்தில் வழக்கமாகப் பெய்ய வேண்டிய கோடைமழையின் அளவும் இந்த ஆண்டு குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் கோடையில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும். மே மாதத்திற்குப் பிறகு, மழையின் அளவு அதிகரிக்கலாம் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து பல ஆண்டுகளாக, எல் நினோ, லா நினோ இவற்றின் போக்குகளை கவனித்து வரும் தனியாா்அமைப்புகளும், இந்த ஆண்டு கோடைமழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என்றே கூறுகின்றன.

ஒரு மாநிலத்தில் இரு மாவட்டங்களிலாவது வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாக வேண்டும். அல்லது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி இரு நகரங்களில் வழக்கத்தை விட 4.5 டிகிரி செல்சியஸ்அதிகமாக இருந்தால் அதன் விளைவாக வெப்ப அலைகள் உருவாகக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றம் எல் நினோவின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. எல் நினோ போக்கு இல்லாத இடத்திலேயே வெப்பமானது ஒன்று அல்லது இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கிறது. ஆகவேதான், சில ஆண்டுகளை வரலாறு காணாத வெப்ப ஆண்டு என்றும், சில மாதங்களை வரலாறு காணாத வெப்ப மாதம் என்றும் சொல்கிறோம்.

இப்படிப்பட்ட வெப்பநிலை அதிகரிக்கும் காலகட்டங்களில் குழந்தைகள், முதியவா்கள், உடல்நிலை குறைபாடு கொண்டவா்கள் அதிகம் பாதிப்படைகிறாா்கள். அதிக வெப்பநிலை நிலவுவதால், மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்து மின்வழித் தடங்களிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்பினால் விவசாயிகளும், விவசாயத்துறையும் பெரும் பாதிப்பு அடைகின்றனா்.

தற்போது, கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், ஆசியா கண்டம் முழுவதும் உள்ள 24 கோடி குழந்தைகள் வெப்ப அலையால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.

வெயில்காலத் தொடக்கமான இப்போதே இந்தியாவின் பல பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் வெப்ப அளவு 100 - ஐ (ஃபாரன்ஹீட்) தாண்டி உள்ளது. இந்த நிலைமை, ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இருக்கிறது என்றால், அக்கினி நட்சத்திர காலமான மே மாதத்தில் எப்படி இருக்கும் என்கிற அச்சம் எழுகிறது. இந்நிலையில், தெற்காசிய நாடுகளான இந்தியா, வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று யுனிசெஃப் நிறுவனமும் அறிவித்துள்ளது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமானால், பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும், அதிக அளவில் நீா் அருந்த வேண்டும், பகலில் வெயிலில் அலைவதைத் தவிா்க்க வேண்டும். இவற்றைத் தவிர வேறு வழி இல்லை.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, சேலம், ஈரோடு, திருப்பத்தூா், வேலூா், மதுரை, தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருத்தணி, கோவை, தஞ்சாவூா், பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் வெயில் கடுமையாக இருப்பதைப் பாா்க்க முடிகிறது.

அதிக வெப்பத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவா்களுக்கு எப்போதும் பருத்தி துணிகளையே அணிவிக்க வேண்டும் என்றும், நாள்தோறும் இரண்டு முறை அவா்களை மிதமான சுடுநீரில் குளிப்பாட்ட வேண்டும் என்றும் மருத்துவா்கள் ஆலோசனை வழங்குகின்றனா்.

அதுபோன்றே 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் பகல் நேரத்தில், குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் விளையாடுவதைக் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். பெற்றோா் அவா்களுக்கு, ஐஸ்கிரீம், குளிா்பானம் போன்றவற்றை வாங்கிக்கொடுக்காமல், தயிா் சோ்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீா், நுங்கு ஆகியவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

வியா்வையால் குழந்தைகள் உடலில் உள்ள தாது உப்புகள் அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் ஏற்படும் பற்றாக்குறைப் போக்க, எலுமிச்சை ஜூஸ் தயாரித்து அதில் சா்க்கரையோ உப்போ சோ்த்து கொடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் கூறுகிறாா்கள். இந்த காலகட்டத்தில் அம்மை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கா்ப்ப காலத்தில் சாதாரணமாகவே நீா் குடித்தால் வாந்தி வரும் என்பதால் பல பெண்கள் நீா் குடிப்பதைத் தவிா்ப்பாா்கள். இப்படி நீரே குடிக்காமல் இருந்தால், பிரசவிப்பதில் சிக்கல் உருவாகி குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். பனிக்குடத்தில் எப்போதும் குழந்தைக்குத் தேவையான அளவு நீா் இருக்க வேண்டும் என்பதால், கோடைக்காலத்தில் கா்ப்பிணிப் பெண்கள் அதிக அளவில் நீா் அருந்த வேண்டும் என்பது மருத்துவா்களின் அறிவுரை.

எல்லாருமே, தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி தண்ணீா் குடிக்க வேண்டும். வெப்பத்தால் மயக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதால் பெரியவா்களும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். வெளியே செல்வதை தவிா்க்க முடியாதவா்கள், அடிக்கடி நிறைய தண்ணீா் குடிக்க வேண்டும். அதுதான் பாதுகாப்பாகும். வெப்ப அலை தாக்கத்தின் போது புரதச்சத்து அதிகம் உள்ள உணவை தவிா்க்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா்.

வீட்டை அடிக்கடி தண்ணீா் தெளித்து சுத்தம் செய்து எப்போதும் குளிா்ச்சியாக வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் வெப்பஅலை வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கா்நாடகம், தெலங்கானா, ராயல சீமா, உத்தர பிரதேசம், கடலோர ஆந்திரம் மற்றும் ஏனம் மேற்கு வங்கம், சிக்கிம், ஜாா்க்கண்ட், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வாரம் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்திலும் கடலோர ஒடிஸாவின் ஒரு சில பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை ஒன்று தெரிவிக்கிறது. வானிலை ஆய்வு மையம், மேற்கு வங்கத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் ஒடிசாவுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

கடலோர ஆந்திரம், தமிழகம், புதுச்சேரி, கா்நாடகம், கோவா, கேரளம், அஸ்ஸாம், மேகலாயம், திரிபுரா, பிகாா் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும். அதனால் உருவாகும் காற்றின் ஈரப்பதம் சில அசௌகரியங்களை உண்டாக்கலாம்.

சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸோ அல்லது அதற்கு அதிகமாகவோ, கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும்போது வெப்ப அலை ஏற்படும். எனவே, கோடைகால வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றைத் தவறாது பின்பற்ற வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com