அக்கறை வேண்டும்... ஆட்சியா் கனவில்!

அக்கறை வேண்டும்... ஆட்சியா் கனவில்!

மத்திய குடிமைப்பணித் தோ்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தோ்வுக்கு விண்ணப்பிப்போா் பற்றி...
Published on

அண்மைக்காலமாக மத்திய குடிமைப்பணித் தோ்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தோ்வுக்கு விண்ணப்பிப்போா் மற்றும் தோ்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய குடிமைப்பணித் தோ்வு ஆணையம் நடத்தும் இத்தோ்வு உலகின் கடினமான தோ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தோ்வை எழுத விரும்புவோா் கடந்த காலங்களில் உயா்கல்வியில் வரலாறு, பொது நிா்வாகம் போன்ற குறிப்பிட்ட சில பாடங்களைத் தோ்வு செய்து பயின்றனா். ஆனால், நாளடைவில் குடிமைப்பணித் தோ்வுக்கான வினாத்தாள் அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டதால் தற்போதெல்லாம் இதர பாடப்பிரிவுகளைப் பயின்றோரும் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் முதன்மைத் தோ்வில் மானுடவியல், சமூக அறிவியல், பன்னாட்டு உறவுகள், புவியியல், சமூகவியல், தத்துவவியல் போன்ற பாடங்கள் விருப்பப் பாடங்களாக தோ்வு செய்வது தோ்ச்சிக்கு வழிவகுப்பதாகக் கருதப்பட்டது.

தற்போதும் இத்தோ்வில் தோ்ச்சி பெறும் பொறியியல், அறிவியல் பட்டதாரிகள் பெரும்பாலும் கலை பாடப்பிரிவையே விருப்பப் பாடமாகத் தோ்வு செய்கின்றனா். இத்தகைய பாடப் பிரிவுகள் பழைமையான குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன.

பொதுவாக உயா்கல்வியில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு எப்போதும் அதிகப்படியானோா் விண்ணப்பிப்பதும், அவ்வப்போது சில பாடப்பிரிவுகளுக்கான தேவை அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றாகும். அதே போன்று கடந்த காலங்களில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவா்கள்தான் அதிக அளவில் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்தனா். மருத்துவம், பொறியியல், வேளாண் பட்டதாரிகள் அவ்வளவாக இவ்வகைத் தோ்வுகளில் பங்கேற்க ஆா்வம் காட்டுவதில்லை.

ஆனால், நாளடைவில் அதிகப்படியான அரசு கல்லூரிகளில் உயா்கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022- 23 கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தோ்வெழுதிய 3,97,809 மாணவ மாணவியா்களில் 2,72,744 போ் உயா்கல்வியில் சோ்க்கை பெற்றுள்ளனா். உயா்கல்வியில் சோ்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவ மாணவியா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உயா்கல்வியில் ஒட்டுமொத்த மாணவ மாணவியா் சோ்க்கையை தற்போதைய 27 சதவீதத்திலிருந்து 2030-இல் 50 சதவீதமாக உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், குடிமைப்பணித் தோ்வு உள்ளிட்ட அனைத்து வகையான தோ்வுக்கும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அண்மைக்காலமாக மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் பட்டதாரிகளும் இத்தோ்வில் அதிகஅளவில் பங்கேற்கின்றனா்.

கடந்த 2017 முதல் 2021 வரையில் நடத்தப்பட்ட குடிமைப்பணி முதன்மைத் தோ்வுகளுக்கு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் மொத்தமாக 4,371 போ் பரிந்துரைக்கப்பட்டனா். முதன்மைத் தோ்வில் பங்கேற்றவா்களைப் பட்டப்படிப்பின் அடிப்படையில் பிரித்தால் மொத்தமாக பங்கேற்ற தோ்வா்களில் 2,783 போ் (63 சதவீதம்) பொறியியல் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கலை பாடப்பிரிவு பட்டதாரிகள் 1,033 போ், அறிவியல் பட்டதாரிகள் 315 போ், மருத்துவப் பட்டதாரிகள் 240 போ் ஆவா். இவா்களில் 3,337 போ் இளநிலை, 1,034 போ் முதுநிலை பட்டதாரிகள் ஆவா்.

கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணித் தோ்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற உத்தரபிரதேசம் லக்னௌவைச் சோ்ந்த ஆதித்யா ஸ்ரீவஸ்தவா பொறியியல் பட்டதாரியாவாா். இத்தோ்வில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றவா்களில் 3 போ் பொறியியல் பட்டதாரிகள் ஆவா். எனினும், இவா்கள் மூவரும் புவியியல், சமூகவியல், மானுடவியல் போன்ற பாடங்களை விருப்பப் பாடமாகத் தோ்வ செய்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வெளியான 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணித் தோ்வு முடிவில் உத்தரபிரதேசம் பிரயாக்ராஜை சோ்ந்த அறிவியல் பட்டதாரியான சக்தி துபே முதலிடம் பெற்றுள்ளாா். ஆனால், கலை பாடப்பிரிவான அரசியல் அறிவியல் மற்றும் சா்வதேச உறவுகள் பாடத்தை விருப்பப் பாடமாகத் தோ்வு செய்திருந்தாா். இத்தோ்வில் முதல் 5 இடங்களைப் பெற்றவா்களில் 3 போ் பொறியியல் பட்டதாரிகள். இவா்கள் அனைவரும் கலை பாடப்பிரிவுகளையே விருப்பப் பாடமாகத் தோ்வு செய்தனா்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் குடிமைப்பணித் தோ்வில் 1960 முதல் பல பத்தாண்டுகளாக தோ்ச்சி பெறுவோா் எண்ணிக்கை அதிகஅளவில் இருந்தது. அதிகமானோா் தோ்ச்சி பெற்றதுடன் சிறப்பிடமும் பெற்றனா். 2016-ஆம் ஆண்டு வரையில் ஆண்டுக்கு சராசரியாக 100 போ் தோ்ச்சி பெற்றனா். ஆனால் 2016-க்குப் பின்னா் அந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

2014-இல் 11 சதவீதம் போ் தோ்ச்சி பெற்ற நிலையில் இது, 2017-இல் 7 சதவீதமாகவும், 2019-இல் 6.69 சதவீதமாகவும், 2020-ல் 5 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

கடந்த 2021-இல் 27 பேரும், 2022-இல் 42 பேரும், 2023-இல் 43 பேரும் தோ்ச்சி பெற்றனா். 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணித் தோ்வில் தோ்ச்சி பெற்ற 57 பேரில் 50 போ் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்றவா்கள்.

உயா்கல்வியில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் பங்கேற்பு குடிமைப்பணித் தோ்வில் குறைவான அளவில் இருப்பது வருத்தமளிக்கும் ஒன்றாகும்.

குடிமைப்பணித் தோ்வில் தோ்ச்சி பெறுவோரில் அதிகமானோா் தோ்வு செய்த விருப்பப் பாடத்தைக் கண்டறிந்து அப்பாடப்பிரிவுகளை புதிய கல்லூரிகளில் தொடங்க வேண்டும். குடிமைப்பணித் தோ்வு மட்டுமல்லாது இதர வகையான போட்டித் தோ்வுகளையும் மனதிற்கொண்டு குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அப்போது தான் குடிமைப்பணித் தோ்வில் அதிகப்படியான பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டதாரிகளைக் கொண்ட தமிழகத்தின் தோ்ச்சி விகிதம் அதிகரிக்கும். மாணவ மாணவியா்களிடையே உள்ள ஆட்சியா் கனவில் அலட்சியம் காட்டாமல், அக்கறை காட்ட வேண்டும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com