ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட வாஜ்பாய்
1999ம் ஆண்டு 13 மாதங்கள் வாஜ்பாயி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி நடத்தி வந்த நிலையில், மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
1999ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் பாஜக கூட்டணி 269 வாக்குகளைப் பெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் 270 வாக்குகளைப் பெற்றது. வாக்கெடுப்பின் நிறைவில் முடிவை அறிவித்த அவைத் தலைவர் ஜி.எம்.சி. பாலயோகி, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாஜ்பாயி தோற்கடிக்கப்பட்டார் என்று அறிவித்தார்.
மிகவும் தளர்ந்த நடையோடு மக்களவை வளாகத்தை விட்டு வெளியேறி தனது அறைக்குச் சென்றார். அவரது பின்னால் சென்ற அவரது உதவியாளர் கூறுகையில், அந்த அறைக்குள் நான் நுழைந்தபோது, ஏற்கனவே ஏராளமான மூத்த தலைவர்கள் அந்த அறையில் நிரம்பியிருந்தனர். அங்கே கண்ணீர் விட்டு அழுத வாஜ்பாய், வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்திலா தோல்வி அடைந்தேன் என்று கேட்டார். அப்போது அவரது கண்களில் இருந்து திரண்ட கண்ணீர் முகத்தில் உருண்டோடியது.
அவருக்கு நிகராக, மூத்த தலைவர்கள் அத்வானி, பிரமோத் மகாஜன் ஆகியோரும் கவலையில் இருந்தனர். அதுதான் முதலும் கடைசியுமாக, உடைந்து போயிருந்த வாஜ்பாயை நான் பார்த்தது என்று கூறி முடித்திருந்தார்.