ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் சர்ச்சையானதன் பின்னணி! ஒரு சின்ன வரலாறு!!

பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்

பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது.

1999-இல் நிகழ்ந்த கார்கில் போரின் போதுதான், ரஃபேல் போன்ற அதி நவீன விமானங்களின் தேவையை இந்தியா உணர்ந்தது. 1999, மே தொடக்கத்தில், கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி நிலை கொண்டது. அப்போது, 1989-இல் பிரச்னையான போஃபர்ஸ் பீரங்கிகள்தான், இந்திய ராணுவத்திற்குப் பேருதவியாக இருந்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கார்கில் ஊடுருவலின்போது, 1999, மே 26- இல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக வான்வழித் தாக்குதலை இந்திய விமானப்படை தொடங்கியது.

ஆனால், அடுத்த நாளே, மிக்-21, மிக்-27 ஆகிய இரு போர் விமானங்களையும், அதற்கு அடுத்த நாள் எம்.ஐ.- 17 ரக ஹெலிகாப்டரையும் இந்திய விமானப்படை இழந்தது. அவை பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டன. கார்கிலில் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இருப்பினும் பாகிஸ்தான் ஊடுருவலில் இருந்து இந்தியப் பகுதிகளை நமது ராணுவம் 74 நாள்களில் மீட்டது. அப்போதுதான், ரஃபேல் போன்ற அதி நவீன போர் விமானங்களின் தேவையை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு உணர்ந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையைப் பலப்படுத்தும் நோக்கில் 126 அதி நவீன போர் விமானங்களை வாங்குவதற்கான பூர்வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


காங்கிரஸின் ஒப்பந்த முயற்சி: வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்குப் பிறகு 2004-14 வரை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்த விவகாரத்தில் மும்முரம் காட்டியது. 2007, ஆகஸ்ட் 28-இல் 126 போர் விமானங்களுக்கான முன்மொழிவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியிட்டது. இதன்படி, டஸால்ட் ஏவியேஷன், யூரோ ஃபைட்டர் உள்பட ஆறு சர்வதேச நிறுவனங்கள் மத்திய அரசிடம் கேட்பு விலையை முன்வைத்தன.

பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு டஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், யூரோஃபைட்டர் நிறுவனத்தின் டைஃபூன் வகைப் போர் விமானங்கள் உகந்தவையாக இருக்கும் என இந்திய விமானப்படை 2011-இல் தெரிவித்தது. இதில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் குறைந்த விலை கோரியிருந்ததால் அந்த நிறுவனத்துடன் 2012- இல் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டது. 

ரஃபேல் ஒப்பந்தம்: ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சொல்வது என்ன?

ரூ.54,000 கோடி மதிப்பில், 126 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் அதில், 18 விமானங்கள் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டுப் பறப்பதற்குத் தயாரான நிலையில் இந்தியாவிடம் அளிக்கப்படும் என்றும், எஞ்சியுள்ள 108 விமானங்கள், தொழில்நுட்பப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் (ஹெ.ஏ.எல்.) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டன. மேலும், விமானங்கள் தொடர்பாக மட்டுமே விவாதிக்கப்பட்டன. விமானத்தில் பொருத்தப்படும் ஆயுதங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை. அதனால், பேச்சுவார்த்தையின் போது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. 

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படவிருந்த 108 விமானங்களின் தரத்துக்கு டஸால்ட் நிறுவனம் பொறுப்பேற்க மறுத்தது. அதேசமயம், இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானங்களுக்காக டஸால்ட் நிறுவனம் சார்பில் மனித உழைப்பு 3 கோடி மணி நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தது . ஆனால், சுமார் 9 கோடி மணி நேரம் தேவைப்படும் என ஹெஏஎல் நிறுவனம் தெரிவித்தது. இதனால், டஸால்ட் - ஹெஏஎல் இடையே எழுந்த கருத்து முரண்பாடுகளால், ஜக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் 2014-ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.

பாஜக கூட்டணி ஆட்சியில் ரஃபேல் ஒப்பந்தம்: பின்னர் பாஜக கூட்டணி அரசு 2014-இல் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இந்த விமானக் கொள்முதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்புக் கவனம் செலுத்தினார். பிரான்ஸுக்கு 2015, ஏப்ரல் 15- இல் விஜயம் செய்த மோடி, அந்நாட்டுஅரசிடம் இருந்து, ஆயுதங்கள் பொருத்தப்பட்டு பறப்பதற்கு தயார் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாக அறிவித்தார். 

இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council)   
ஆலோசனைகளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் ரூ.12,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், விமானத்தின் விலை விவரங்களை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்திலும், கொள்முதல் நடவடிக்கைகளிலும் இந்திய தரப்பில் இருந்து எந்தவொரு தனியார் நிறுவனமும் சம்பந்தப்படவில்லை என்றும் இது முழுக்க முழுக்க அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம்

புதிய ஒப்பந்தத்தில் தொழில் நுட்பப் பரிமாற்றம் தொடர்பான ஷரத்துகள் இல்லை. ஆனால், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி, இந்த விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க இந்திய நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும். அந்த நிறுவனங்களை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமே தேர்ந்தெடுக்கலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் என மத்திய அரசு கூறியது. மேலும், அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் வகையில் இந்த விமானங்கள் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லக் கூடிய மிராஜ்- 2000 ரக விமானம் மிக விரைவில் சேவையில் இருந்து நீக்கப்படவுள்ள நிலையில் இந்த விமானத்தின் அவசியம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ஒப்பந்த சர்ச்சை: இந்த ரஃபேல் விமானங்களின் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் ரூ. 21,000 கோடிக்கான ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் வழங்கியது. இந்நிலையில், ஒப்பந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு சுமார் 10 நாள்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டதாகவும், இதற்கு மத்திய அரசு உதவியுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதற்கு, டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தாங்கள் விரும்பும் எந்த இந்திய நிறுவனங்களுக்கும் ஆர்டர்களை வழங்கலாம் என்பது ஒப்பந்தம்... அது அவர்களது உரிமை. இந்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை'' என்று மத்திய அரசு மறுத்தது.

எஸ்கேஐஎல் இன்ஃப்ரா ஸ்டிரக்சர் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக, 1997 ஆம் ஆண்டு பிபாவாவ் ஷிப்யார்டு (PIPAVAV SHIPYARD)  ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்திய கடற்படைக்கு போர்க் கப்பல்கள் உள்பட ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டது. இந்த நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் பங்குச் சந்தையில் 2009-இல் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் 17.66 சதவீதம் பங்குகள் ரிலையன்ஸ் நிறுவனத்தால் 2015, மார்ச் 5-இல் வாங்கப்பட்டது. 

படிப்படியாக இந்நிறுவனத்தின் 36.5 சதவீத பங்குகளை 2016, ஜனவரியில் ரிலையன்ஸ் வாங்கியது. இதைத் தொடர்ந்து, அனில் அம்பானி இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2016, மார்ச் 3-இல் பிபாவாவ் ஷிப்யார்டு நிறுவனம், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் அண்ட் என்ஜினீயரிங் எனப் பெயர் மாற்றப்பட்டது. 2017, செப்டம்பர் 6-இல் இந்த நிறுவனத்தின் பெயர் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் லிமிடெட் என மீண்டும் பெயர் மாற்றப்பட்டது. அந்த நிறுவனத்துடன்தான் இப்போது ரஃபேல் விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

126 போர் விமானங்களை ரூ.54,000 கோடியில் கொள்முதல் செய்ய காங்கிரஸ் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இப்போது, ரூ.60,000 கோடியில் 36 விமானங்களை மட்டுமே வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால், இதில் பெரும் ஊழல் உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதற்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்தது.

'காங்கிரஸ் ஆட்சியின் போது விமானங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட இருந்தன. அந்த விலை நிலவரம் விமானங்களின் விலைக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், புதிய ஒப்பந்தத்தில் அனைத்து நவீன போர்க் கருவிகளும் பொருத்தப்பட்டே புதிய விலை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, போர் கருவிகள் பொருத்தப்படாத விமானத்தின் விலையையும், போர்க் கருவிகள் பொருத்தப்பட்ட விமானத்தின் விலையையும் ஒப்பிடுவது தவறு' என மத்திய அரசு கூறுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரக் குழு அமைத்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது.

காங்கிரஸ் கிடுக்கிப்பிடியும் அரசின் பதிலும்
இந்த ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தை தவிர்க்கக் காரணம் என்ன என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்தியாவில் தயாரிப்பு என்று கூறிவிட்டு, வெளிநாட்டுத் தயாரிப்புகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது காங்கிரஸின் கேள்வி.

இனியாவது இந்திய அரசின் விமானம் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இருக்கும்போது, உதிரிபாகங்களைத் தயாரிக்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரூ.21,000 கோடிக்கான ஒப்பந்தம் ஏன் போடப்பட வேண்டும்? அதை இந்திய அரசு நிறுவனத்துக்கு ஏன் பெற்றுத்தரவில்லை என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வி. 

காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவிருந்த முந்தைய ஒப்பந்தத்தின்படி, 118 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட இருந்தன. இதனால், ஹெஏஎல் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால் புதிய ஒப்பந்தப்படி பறப்பதற்கு தயார் நிலையில் உள்ள விமானங்கள் கொள்முதல் செய்யப்படுவதால் ஹெஏஎல் நிறுவனத்தின் பங்களிப்புத் தேவை ஏற்படவில்லை' என்கிறது மத்திய அரசு. விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பிரான்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது என்றும் அதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசின் முடிவை இந்திய விமானப்படை தளபதியும் ஆதரித்திருக்கிறார்.

ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும்போது, உதிரிபாகங்களை எங்கள் அரசு நிறுவனங்கள் வழங்கும் என்று அரசு ஏன் நிபந்தனை விதிக்கவில்லை? மறைமுகமாக அனில் அம்பானிக்கு உதவுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தமா என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் ஐயப்பாடு. 

ரஃபேல் விமானத்தின் சிறப்பு என்ன?

பிரான்ஸ் நாட்டின் 'டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதி நவீன வசதிகளைக் கொண்ட போர் விமானமே ரஃபேல்! ரஃபேல் என்பதை 'நெருப்பின் வெடிப்பு' எனத் தமிழ்ப்படுத்தலாம். இந்த விமானத்தை வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் இலக்குகளை மிகத் துல்லியமாக கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்க முடியும். அதி நவீன ரேடார் வசதிகளைக் கொண்டஇந்த விமானத்தை அவ்வளவு எளிதாக சுட்டு வீழ்த்திவிட முடியாது. கடும் குளிர் நிலவும் காஷ்மீரின் லே' போன்ற மலை உச்சிகளில் அமைந்துள்ள விமான தளங்களில் இருந்துகூட இந்த விமானத்தை இயக்க முடியும். 

மேலும், இந்த விமானம் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் தொழில் நுட்பம் கொண்டது. குரல் வழி உத்தரவுகளைக் கொண்டே இதை இயக்கலாம் என்பன போன்ற பல நல்ல அம்சங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் போன்ற நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த விமானம் பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளது. 

மத்திய அரசு சறுக்கிய இடங்கள்..!

1 .ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறுகிறது. இது இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகளின் கூறும் குற்றச்சாட்டை வலுப்படுத்துவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், ரூ. 60,000 கோடி வரிப்பணம் தொடர்பாக கேள்வி கேட்கும் உரிமை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளுக்கு இல்லையா எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

2 .தேசப் பாதுகாப்பு கருதி ரஃபேல் விமானத்தின் முழுமையான விலை விவரத்தை வெளியிட முடியாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறும் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என சில பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

3 .ராணுவ தளவாட ஒப்பந்தங்கள் பெரும்பாலானவை ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலானவை. போஃபர்ஸ் பீரங்கி ஊழலுக்குப் பிறகு அனைத்து பிரம்மாண்ட ராணுவ ஒப்பந்தங்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வழக்கம் தற்போது உள்ளது. இந்நிலையில், வெளிப்படைத் தன்மையின்றி அவசர கதியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

4 .அனில் அம்பானி பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர். இவரது நிறுவனம் பல சர்ச்சைகளைச் சந்தித்ததாகும். பிரதமர் மோடியின் 2015, ஏப்ரல் பிரான்ஸ் விஜயத்தில் இவரும் பங்கு கொண்டார். இதுதான் சர்ச்சைக்கு முக்கியக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

5. 2005-இல் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்ட போது எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்தார்; அதேபோல, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை அழைத்து விளக்கம் அளிப்பது மத்திய அரசின் கடமை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கடந்து வந்த பாதை..

டிசம்பர், 2002 : ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான பாதுகாப்பு தளவாட கொள்முதல் நடைமுறைகள் தொடங்கின. 

ஆகஸ்ட், 2007: இந்த ஒப்பந்தத்தில் டஸால்ட் நிறுவனம் தனது டெண்டரை அளித்தது. அத்துடன் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் டெண்டர்களை அளித்தன.

செப்டம்பர், 2008: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமும், ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கியது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து இந்நிறுவனமும், டஸால்ட் நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.

ஜனவரி, 2012: ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்கான இந்திய பாதுகாப்புத் துறையின் டெண்டரில் பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

ஆகஸ்ட், 2014: ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான விவரங்களை அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி மக்களவையில் உறுதி செய்தார். ஒப்பந்தம் கையெழுத்தாகி 3 அல்லது 4 ஆண்டுகளில் 18 விமானங்கள் இந்தியாவிடம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல், 2015: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரெஞ்ச் அதிபரும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

செப்டம்பர் 2018 : ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தாங்களே தேர்வு செய்து கொண்டதாக பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய விமானக் கட்டுமான நிறுவனமான டஸால்ட் அவியேஷன் விளக்கம் அளித்தது.

செப்டம்பர் 2018: ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை சந்தித்து வழக்குப்பதிவு செய்யுமாறு கோரிக்கை வைத்தது.  

அக்டோபர் 10, 2018: ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் முதல் முறையாக உச்ச நீதிமன்றம் விசாரணையைத்தொடங்கியது. ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அக்டோபர்  31, 2018: ரஃபேல் போர் விமானங்களின் விலைப் பட்டியலை மூடி சீல் வைத்த உறையில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

நவம்பர் 12, 2018: ரஃபேல் போர் விமானங்களின் விலை உள்ளிட்ட முக்கிய தகவல் அடங்கிய ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

நவம்பர் 14, 2018: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

ரஃபேல் போர் விமானக் கொள்முதல்  நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொள்முதல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

ஜனவரி, 2019: ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், ரஃபேல் ஒப்பந்த நடைமுறையில் சந்தேகம் கொள்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் 2018 டிசம்பரில் தீர்ப்பளித்தது.

அதேசமயம், ரஃபேல் விமானத்தின் விலை, கொள்முதல் நடைமுறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

பிப்ரவரி, 2019: சீராய்வு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது. மறுஆய்வு மனுக்கள் மட்டுமன்றி, ரஃபேல் விலை, கொள்முதல் நடைமுறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்ததாக, அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மார்ச், 2019: ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் 

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியதாவது:ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்தை நடத்த அமைக்கப்பட்டிருந்த இந்திய பேச்சுவார்த்தைக் குழுவினரின் மாறுபட்ட கருத்துக்கள் அடங்கிய கோப்புகள் ஊடகங்களில் வெளியாகின.  இவை அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள். அனால் இவை பாதுகாப்புத் துறையில் இருந்து திருடப்பட்டுள்ளன. அவற்றைத் திருடியது தற்போது பணியில் உள்ளவர்களா அல்லது முன்னாள் ஊழியர்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

மார்ச் 8, 2019: ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை: கே.கே. வேணுகோபால்
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், "ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் திருடப்படவில்லை. அந்த ரகசிய ஆவணங்களின் நகல்களை மனுதாரர்கள் தங்களது மனுவில் இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதைத்தான் நீதிமன்றத்தில் தெரிவித்தேன்" என்றார்.
 

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரியுள்ள வழக்கில் மனுதாரர்கள் தாக்கல் செய்திருக்கும் ஆவணங்கள் தேசப் பாதுகாப்பு குறித்து முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அத்தகைய ஆவணங்களை நகலெடுத்து வெளியிட்டிருப்பது, திருட்டுக்கு சமமானது என்றும், அவற்றை கசியவிட்டதன் மூலமாக தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் இருந்து ரகசிய ஆவணங்கள் எடுக்கப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் 28-ஆம் தேதி உள் விசாரணை தொடங்கியிருப்பதாகவும், எந்தப் பகுதியில் ஆவணக் கசிவு நடைபெற்றது என்பதைக் கண்டறிவது மிக முக்கியமானது என்றும் உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 14, 2019: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், கசிந்த ஆவணங்களை தாக்கல் செய்தமைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் விஷயத்திற்கே முதலில் முடிவு எட்டப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஏப்ரல் 10, 2019: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான வழக்கில், மத்திய அரசு தெரிவித்த முதல்கட்ட ஆட்சேபங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரஃபேல் தொடர்பான புதிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை கூடாது என்கிற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வித ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என அதிரடியாக தெரிவித்தது. இது மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது.

மே 6, 2019: ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை திரித்துக் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

மே 9, 2019: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து தவறான கருத்து கூறியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். 

மே 10, 2019: ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது ஏன் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மனு மீதான இறுதிகட்ட வாதங்களை இரண்டு மணி நேரம் கேட்ட பிறகு, விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

விரைவில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com