என்ன துணிச்சல் உங்களுக்கு? உலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்

பருவநிலை பிரச்னை குறித்த விழிப்புணர்வு - இளம் தலைமுறையினரை உலகத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டனர்
என்ன துணிச்சல் உங்களுக்கு? உலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்
Published on
Updated on
3 min read

உலகத் தலைவர்களிடம் இளம் சூழலியல் ஆர்வலரான கிரேடா துன்பர்க்  (Greta Thunberg) கேட்கும் கேள்வி இதுதான் 'உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? நீங்கள் என் குழந்தைப் பருவக் கனவுகளைத் திருடிவிட்டீர்கள்'

மெல்லிய குரலில் ஆரம்பித்த அவரது உரை, காகிதத்தில் எழுதி வைத்திருந்ததைப் படிக்க படிக்க ஓங்கி ஒலித்து கோபத்திலும், உணர்ச்சிக் கொந்தளிப்புமாக மாறியது. அவர் பேசுவது தனக்காக இல்லை, தன் நாட்டுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்காகவும்தான் என்று அந்தக் குரலின் நடுக்கம் உணர்த்தியது. இந்தப் பெரிய முன்னெடுப்பை இளம் வயதில் எடுத்துள்ள கிரேடா துன்பர்க் யார்? அவருக்கு என்ன வேண்டும்? 

பருவநிலை மாற்றத்திற்காக பள்ளி செல்வதில்லை! கிரேடாவின் புதிய இயக்கம்

பதினாறு வயதான கிரேடா துன்பர்க் ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆவார். பருவநிலை மாற்றங்களால் உலகில் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து தனது தொடர் பேச்சுக்களாலும் போராட்டங்களாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் Climate Activist என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். 'பருவநிலை நெருக்கடிகளுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு அரசியல்வாதிகள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

2018–2019 ஆண்டின் தொடக்கத்தில், எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய புவி வெப்பமடைதலிலிருந்து ஏற்படும் அபாயங்களைக் குறைக்க எதிர் நடவடிக்கை எடுக்கக் கோரி, கிரேடா துன்பர்க், பள்ளிக்குச் செல்லாமல் தினமும் ஸ்வீடிஷ் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடத் தொடங்கினார். உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பலர் கிரேடாவிற்கு ஆதரவு தெரிவித்ததுடன் அவரது போராட்டத்தில் இணைந்தனர்.

முதன்முறையாக ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு, தனது 15-ஆவது வயதில், ​​ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தினார். அதுதான் பருவநிலை மாற்றத்திற்காக பள்ளிக்கு செல்லப் போவதில்லை (school climate strike movement) என்ற இயக்கம். கிரேடாவின் இந்த இயக்கம் விரைவில் பரவத் தொடங்கி அனேக மாணவர்கள் தங்கள் சமூகங்களில் இதேபோன்ற ( Fridays for Future (FFF) போராட்டங்களை நடத்த வித்திட்டது. கிரேடாவின் இந்த இயக்கம் இணையம் மூலம் பரவி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. 

தன்னிடம் இருந்து தொடக்கம்!

அதன் பின், உலக அரங்கில் சூழலியல் குறித்து பல்வேறு கூட்டங்களில் உரையாற்றத் தொடங்கினார். எந்தவொரு தொடக்கமும் தன்னிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கிரேடா,  இதை தனது பெற்றோரிடமும் வலியுறுத்தினார். பாடகியாக இருந்த தன் அம்மாவிடம் காற்று மாசு பற்றி விரிவாகக் கூறி, கரிமில வாயு அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனால் அவரது தாயார் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்வதில்லை என்று முடிவெடுத்தார். கிரேடா துன்பர்க்கும் பெரும்பாலும் கப்பலில்தான் பயணிக்கிறார். அவசரக்கால நிகழ்வுகளுக்காக மட்டுமே விமானம் ஏறுகிறார் இந்த இளம் போராளி. தங்களது செல்ல மகளுக்காக கிரேடாவின் பெற்றோர் இறைச்சி சாப்பிடுவதைத் முற்றிலும் தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் 2.5 லட்ச மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ள கிரேடா தன்பர்க்கிற்கு அழைப்பு வந்தது. அவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதில் உரையாற்றியது, 'படிப்பை விட்டுவிட்டு வீதியில் இறங்கி நாங்கள் போராடுவது மற்றவர்கள் எங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு எங்கள் முயற்சிகளை பாராட்டுவதற்காக அல்ல. உலக நாடுகளின் தலைவர்கள் பருவ நிலை மாற்றம் குறித்து வலுவான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். ஏனெனில் நமது அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலம் தேவைப்படுகிறது. எங்கள் இயக்கத்தைப் பார்த்து அஞ்சுவோர்க்கும் நாங்கள் கூறுவது ஒன்றுதான், இது வெறும் தொடக்கம்தான். நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி மாற்றம் ஏற்படப் போவது உறுதி' என்று ஆணித்தரமாக தன் கருத்துக்களை முன்வைத்தார். 

தன் கருத்துக்களை நேரடியாகவும், அப்பட்டமாகவும், உண்மையாகவும் ஆணித்தரமாக வெளிப்படுத்தியதால் அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் அதிக வரவேற்பு கிடைக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் போது சூழலியல் குறித்தும் பருவநிலை நெருக்கடி குறித்தும் உலக அளவில் எழுந்துள்ள சீர்கேடுகளை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பது குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தொடர் போராட்டங்களின் பலனாக மே 2019-ல், டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் சிறந்த போராளியாக இடம்பெற்றார். டைம் பத்திரிகை கிரேடாவை 'அடுத்த தலைமுறை தலைவர்' என்று பெருமைப்படுத்தியது. மேலும், இளைஞர்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கிரேடா துன்பர்கை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள் என்றும் குறிப்பிட்டது.

கிரேடா துன்பர்க் மற்றும் அவரது இயக்கம் குறித்து, 'மேக் தி வேர்ல்ட் கிரேடா அகெய்ன்' என்ற 30 நிமிட ஆவணப் படம் எடுக்கப்பட்டது. சில ஊடகங்கள் உலக அரங்கில் கிரேடா ஏற்படுத்திய தாக்கத்தை 'கிரேடா துன்பர்க் விளைவு' என்று வர்ணித்துள்ளன.

ஐ.நா மாநாட்டில் ஆவேச உரை நிகழ்த்திய கிரேடா துன்பர்க்

ஐநாவின் இளைஞர் பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். ஐநாவின் பருவநிலை மாநாட்டிலும் கலந்து கொண்டார். 12 மாதங்களுக்கு முன்பு இவர் தொடங்கிய தனிப் போராட்டம் தற்போது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போது, உலகத் தலைவர்களிடம் அவர் சரமாரியாக கேள்விகளை முன்வைத்தார்.

இளைய சமுதாயம் உங்களை (உலகத் தலைவர்கள்) உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. வளி மண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளைய தலைமுறையினரை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். சுற்றுச்சூழல் சீர்கெட்டு கொண்டிருக்கிறது. மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன துணிச்சல்? என்று ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ஆவேசமாக எழுப்பியுள்ள கேள்வி இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல!

க்ரேடாவின் கேள்விகள்

'நாங்கள் (இளைஞர்கள்) உங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்போம்' என ஐ.நா-வில், கிரேடா தன் உரையைத் ஆரம்பித்தார். 'இங்கு நடப்பவை அனைத்தும் தவறு. நான் இங்கே இருக்கக் கூடாது. இந்தக் கடலின் மறுமுனையில் இருக்கும் எனது பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அங்கிருக்க இயலவில்லை. இளைஞர்களை நம்பித்தான் எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது பால்யத்தைக் களவாடிவிட்டீர்கள். ஆனாலும், நான் அதிர்ஷ்டசாலிதான்.

மக்கள் துயரப்படுகிறார்கள், மரித்துப் போகிறார்கள். சூழலியல் முற்றிலும் உருக்குலைந்துவிட்டது. பேரழிவின் தொடக்கத்தில் நாம் உள்ளோம். ஆனால், நீங்களோ பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனைக் கதைகளையே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?

நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். உங்களது இந்த துரோகத்தை இளைஞர்கள் புரிந்துக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். எதிர்கால தலைமுறையினரின் விழிகள் உங்கள் மீதுதான் உள்ளன. எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால், நான் இப்போது சொல்கிறேன், 'நாங்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்'. என்று உணர்ச்சிபொங்க தனது உரையை முடித்தார். 

கிரேடா ஒவ்வொரு வரிகளையும் கூறும்போது அவரது விழிகளில் எந்நேரமும் உருப்பெற்றிருந்த கண்ணீர் வழிந்தோடிவிடும் நிலையில் இருந்தது. அவரது குரலில் தென்பட்ட கோபம் இளைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோபம் எனலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரேட்டாவைப் பற்றி தனது ட்விட்டரில் ‘கிரேட்டா துன்பர்க் 'அற்புதமான சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். இந்த இளம் பெண்ணைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்று தன் கருத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com