பரஸ்பர சண்டை பூசலை மறந்து முன்னேற்ற வேலையில் ஈடுபடுக - 73 ஆண்டுகளுக்கு முந்தைய, பிரதமர் நேருவின் உரை

நாடு விடுதலை பெற்ற நாளில், ஆக. 15, 1947, இரவு 8.30 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்காக முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆற்றிய  உரை... 
சுதந்திர தினத்தன்று நேரு பிரதம மந்திரி என்ற முறையில் விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார். கவர்னர் - ஜெனரல் பிரமாண பத்திரத்தை படிக்கிறார்.
சுதந்திர தினத்தன்று நேரு பிரதம மந்திரி என்ற முறையில் விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார். கவர்னர் - ஜெனரல் பிரமாண பத்திரத்தை படிக்கிறார்.

"_ சுதந்திரமும் சமாதானமும் இந்தியப் பண்பாடு. இதை உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் விளங்கச் செய்ய நாம் இந்தியாவில் நல்ல குடிமக்களாக இருத்தல் வேண்டும்.

_ பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மக்களுக்கிடையே சச்சரவுகளும் வன்முறைகளும் அகற்றப்பட வேண்டும்.

_ பொருளாதாரத்தில் மக்கள் முன்னேற்றம் பெற வேண்டும். அவர்கள் நல்ல வாழ்வைப் பெற வேண்டும்.

_ அனைத்து மக்களுக்கும் உண்ண உணவும் உடுத்த உடையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

_ விலைவாசி உயர்வும் பண வீக்கமும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்கள் மீதுள்ள சுமை குறைந்து வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

_ தொழில்களைப் பெருக்கி, நாட்டின் செல்வத்தை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.

_ பரஸ்பர சண்டை பூசலை மறந்து நாட்டின் முன்னேற்றத்துக்கான பணிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

_ நாட்டின் உற்பத்தியைப் பெருக்குவதே நம்முடைய முதல் வேலை.

_ நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்க வேண்டும். உணவு தானிய விளைச்சல் பெருக வேண்டும்.

_ இவற்றையெல்லாம் நிறைவேற்ற நாட்டில் அமைதியான சூழல் நிலவ வேண்டும்.

_ நாட்டை முன்னேற்றுவதில் அனைவரும் இணக்கமாகச் செயல்பட வேண்டும்."

சென்னையில் யானைகள், ஒட்டைகள் சகிதம் சுதந்திர தின ஊர்வலம். சென்னை மாதர் ஸ்தாபனத்தினர் இதை நடத்தினர்.
சென்னையில் யானைகள், ஒட்டைகள் சகிதம் சுதந்திர தின ஊர்வலம். சென்னை மாதர் ஸ்தாபனத்தினர் இதை நடத்தினர்.

இவை எல்லாமே எங்கேயோ மீண்டும் மீண்டும் கேட்டவையாகத் தோன்றும், ஆம், நம் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உரைகளாக அவ்வப்போது கேட்கிற, வாசிக்கிற வரிகள்தான் இவையெல்லாம்.

ஆனால், இவற்றைப் பேசியவர், நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. நாடு விடுதலை பெற்றபோது நள்ளிரவில் சுதந்திர தின உரையாற்றினார்  நேரு, புகழ்பெற்ற உரை அது.

பின்னர், விடுதலை பெற்ற நாளில், ஆக. 15, 1947, இரவு 8.30 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார் நேரு. அந்த உரையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள்தான் இவையனைத்தும்.

நாடு விடுதலை பெற்று, நாட்டு மக்களுக்காக ஜவாஹர்லால் நேரு உரையாற்றி, 73 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் இரு ஆண்டுகளில் விடுதலைப் பவழ விழா. 

இதோ நாட்டு மக்களுக்காக ஜவாஹர்லால் நேரு ஆற்றிய வானொலி உரை மீண்டும் (ஆகஸ்ட் 17, 18 தேதிகளிட்ட தினமணியில் முதல் பக்கத்தில் வெளியானவாறு):

"பரஸ்பர சண்டை பூசலை மறந்து முன்னேற்ற வேலையில் ஈடுபடுக"


தேச மக்களுக்கு முதல் இந்திய பிரதமர் நேரு வேண்டுகோள்


உற்பத்தியை பெருக்குவதே முதல் வேலை


சர்க்காரின் உடனடியான சுபிட்ச திட்டத்தை விளக்குகிறார் ஸ்ரீ. நேரு

புது தில்லி ஆகஸ்ட் 16: இந்தியாவின் முதல் பிரதம மந்திரி பண்டித ஜவஹர்லால் நேரு ஆகஸ்டு 15-ந் தேதி இரவு ரேடியோ மூலம் தமது தேச மக்களுக்குச் செய்த பிரசங்கத்தில் நமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தின் பொறுப்புகளை விளக்கினார். உற்பத்தியை பெருக்குவதில் பரஸ்பரம் ஒத்துழைத்து மக்களின் உணவு கஷ்டம், துணி கஷ்டத்தை போக்க வேண்டும் என்றார். அமைதியான சூழ்நிலையைப் பொறுத்தே சுபிட்ச திட்டம் இருப்பதால் பரஸ்பரம் சண்டையையும் தகராறுகளையும் விட்டொழிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

நேரு பிரசங்கத்தின் முழு விவரம்: இந்திய பிரதம மந்திரி பண்டித ஜவாஹர்லால் நேரு 15-ந்தேதி இரவு 8-30 மணிக்கு அ. இ. ரேடியோவில் பேசியதாவது: -

பல வருஷங்களாக இந்தியாவுக்காகவும் இந்தியாவின் சுதந்திர லட்சியத்துக்காகவும் பல வருஷங்கள் சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. முதல் தடவையாக உத்யோக முறையில் இந்திய மக்களின் முதல் சேவகன் என்ற அந்தஸ்தில் உங்களுக்கு நான் இப்போது பிரசங்கம் செய்கிறேன். இந்திய மக்களின் க்ஷேமத்துக்காக சேவை செய்ய நான் அர்ப்பணம் செய்து கொண்டுள்ளேன். உங்களுடைய சம்மதத்துடனேயே நான் இந்தப் பதவியை வகிக்கிறேன். உங்களுக்கு என்னிடம் நம்பிக்கையிருக்கும் வரைதான் நான் இப்பதவியில் இருக்க முடியும்.

நாம் இன்று சுதந்தர மக்கள். நாம் இன்று பூர்ண ராஜாங்க உரிமை பெற்றுள்ளோம். பழைமையின் பளுவிலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம்; வெளி உலகத்தை நாம் தெளிவுள்ள கண்களுடன் நோக்குகிறோம்; எதிர் காலத்தை நம்பிக்கையுடன் நோக்குகிறோம்.

அயலாரின் ஆதிக்க சுமை நீங்கிவிட்டது. ஆனால் சுதந்தரத்துடன் நமக்கு பொறுப்புகளும் பாரங்களும் வருகின்றன. நாம் சுதந்தரமடைந்து விட்டோமென்பதை உணர்ந்து தன்னடக்கமாகவும் கட்டுப்பாடாகவும் இருந்தால்தான் அந்த பொறுப்புகளை ஏற்க முடியும். அந்த சுதந்தரத்தை விரிவுபடுத்தி காப்பாற்ற உறுதிகொள்ள வேண்டும்.

டில்லி செங்கோட்டையில் பண்டித நேரு தேசியக் கொடி ஏற்றும்போது எடுத்த படம். இந்த வைபவத்துக்கு சுமார் இரண்டரை லக்ஷம் ஜனங்கள் வந்திருந்தனர். இந்திய தேசிய ராணுவத்தினரும் இதில் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 16-ந் தேதி இவ்வைபவம் நடந்தது.
டில்லி செங்கோட்டையில் பண்டித நேரு தேசியக் கொடி ஏற்றும்போது எடுத்த படம். இந்த வைபவத்துக்கு சுமார் இரண்டரை லக்ஷம் ஜனங்கள் வந்திருந்தனர். இந்திய தேசிய ராணுவத்தினரும் இதில் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 16-ந் தேதி இவ்வைபவம் நடந்தது.

நாம் எவ்வளவோ சாதித்துள்ளோம்; இன்னும் எவ்வளவோ சாதிக்கவேண்டியிருக்கிறது. நமது மாபெரும் தலைவர் கற்றுக் கொடுத்துள்ள சித்தாந்தங்களை பின்பற்றி உறுதியுடன் நமது முன்புள்ள புது வேலைகளையில் ஈடுபடுவோமாக. வழி காட்டி ஊக்கமளித்து பெருமுயற்சிகளில் நாம் அனுஷ்டிக்க வேண்டிய வழிகளை சுட்டிக் காட்ட மகாத்மா ஜி இப்பொழுது நம்மிடையே இருப்பது நமக்கு ஒரு பெரும் அதிர்ஷ்டம். நாம் அனுஷ்டிக்கும் முறை சரியாக இருந்தால்தான் நாம் அடையும் சாதனையும் சரியாக இருக்குமென்பதை காந்திஜி நமக்கு வெகு நாளைக்கு முன்பே கற்றுக் கொடுத்துள்ளார். வாழ்க்கையில் நாம் பெரிய லட்சியங்களைக் கொள்வதற்கு நாம் பெரிய மனிதர்களாயிருத்தல் வேண்டும். இதரர்களுக்கு சுதந்தரச் செய்தியையும் சமாதானச் செய்தியையும் கொடுப்பது இந்தியாவுக்கு தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு பண்பாடு. நமது அந்த பண்பாடு உலகத்தில் சோபிக்க வேண்டுமானால் பாரத தாயின் ஏற்ற புதல்வர்களாயிருத்தல் வேண்டும். கீ(கி)ழக்குப் பகுதியிலுள்ள இந்த தேசத்தில் இப்பொழுது பிறந்துள்ள சுதந்திரத்தை உலகம் முழுவதும் கவனித்துப் பார்த்து வருகிறது. இந்த சுதந்திரம் எவ்வகையில் வேலை செய்யப் போகிறதென்பதையும் ஆச்சர்யத்துடன் உலகம் கவனித்து வருகிறது.

நம்மை இழிவுபடுத்தி வருகிற, நம்மை அவலட்சணப்படுத்தி வருகிற, நமது -சுதந்திரத்தை கெடுத்து வருகிற உள்நாட்டு சச்சரவையும் பலாத்காரச் செயல்களையும் நிறுத்த வேண்டியதே நம்முடைய முதலாவது கடமையாகும். பொது ஜனங்களின் பொருளாதார பிரச்னைகளில் கவனம் செலுத்த முடியாதபடி, அவை செய்துவிடுகின்றன. பொது மக்களின் பொருளாதார முன்னேற்றம் சம்பந்தமான பிரச்னைகளை அவசரமாக கவனிக்க வேண்டும், அதில் முட்டுக்கட்டை போடவே கூடாது.

நமது வெகு கால அடிமைத்தனம், இரண்டாவது உலக யுத்தம், யுத்த பிற்கால விளைவுகள் காரணமாக பல ஜீவாதாரமான பிரச்னைகள் ஏற்பட்டுவிட்டன. இப்பொழுது நமது மக்களுக்கு போதுமான உணவும் துணியும் இதர அத்யாவசிய சாமான்களும் அகப்படுவதில்லை. சக்கர வட்டமாக பண வீக்கமும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. இப்பிரச்னைகளை நாம் திடீரென தீர்த்துவிட முடியாது. ஆனால் அப்பிரச்னைகளை தாமதப்படுத்தக்கூடாது. பாமர மக்கள் மீதுள்ள சுமை குறைந்து வாழ்க்கைதரம் உயரும் வகையில் நாம் விவேகமாக திட்டம் வகுக்க வேண்டும். நாம் யாருக்கும் கெடுதல் எண்ணவில்லை.

வெகு நாட்களாக அவதிப்பட்டுவரும் பாமர மக்களின் சமூகப் பிரதானம் பாமர மக்களின் நிலைமையை உயர்த்துவதில் இதர நலன்கள் குறுக்கிடக் கூடாது,

உளுத்துப்போன நில சம்பந்தமான குத்தகை முறைகளை மாற்ற வேண்டும். நமது தொழிற்சாலைகளை விரிவான அளவிலும் பிற தொழில்களுக்கு இடையூறு செய்யாத முறையிலும் பெருக்கவேண்டும். அதன் மூலமாக தேசத்தின் செல்வத்தை வளர்க்க வேண்டும். தேசிய வருமானம் அதிகரிக்கப்பட்டு அது நேர்மையாக விநியோகிக்கப்படும்.

உற்பத்தி பெருக வேண்டும்

எல்லாவற்றிலும்விட உற்பத்தியை அதிகப்படுத்துவதிலேயே அவசரமான கவனத்தை செலுத்த வேண்டும். உற்பத்திக்கு குந்தகம் ஏற்படுவதோ உற்பத்தியை குறைக்க முயற்சிப்பதோ தேசத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. அதனால் தொழிலாளர் வர்(க்)கத்துக்கே விசேஷமாக தீங்கு ஏற்படுகிறது. வெறும் உற்பத்தி பெருக்குமட்டிலும் போதாது. அதனால் ஒருசிலரிடமே பணம் குவிந்துவிடும். அது முன்னேற்றத்துக்கு ஒரு இடையூறாக இருக்கும்; இன்றைய நிலையில் அது தகராறை ஏற்படுத்தும்; அஸ்திரமான நிலையை நீடித்துவைக்கும். ஆகவே பிரச்னை தீர வேண்டுமானால் நேர்மையான முறையில் விநியோகம் நடைபெற வேண்டும்.

சென்னை துறைமுகத்தில்
சென்னை துறைமுகத்தில்

நதிகள் மூலமாக நீர்பாசான (நீர்ப்பாசன) வசதிகளை பெருக்க இந்திய சர்க்காரிடம் பல பெரிய திட்டங்கள் இருக்கின்றன. நதிகளின் வெள்ளத்தை கட்டுப்படுத்தி அணைகள் கட்டுதல், ரிஸர்வாயர்கள் நிர்மாணித்தல், மின்சார வசதிகளை பெருக்குதல் போன்ற திட்டங்கள் இருக்கின்றன. இது மூலமாக உணவு தான்ய உற்பத்தி அதிகமாகும். தொழிற்சாலைகள் பெருகும்; பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். எந்த சுபீட்ச (சுபிட்ச) திட்டத்துக்கும் இந்த திட்டங்கள் அடிப்படையானவை. பொது ஜனங்கள் வாழ்க்கை தரம் உயரும்பொருட்டு இத்திட்டங்களை துரிதமாக செய்து முடிக்க உத்தேசித்துள்ளோம்.

தகராறு செய்ய இது தருணமல்ல

இந்த திட்டங்கள் நிறைவேற வேண்டுமானால் அமைதியான சூழ்நிலை இருக்க வேண்டும். எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும்; இடைவிடாது பிரயாஸை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மகத்தான வேலைகளில் நமது கவனத்தை திருப்புவோமாக. சண்டையும் தகராறும் செய்ய இது தருணமல்ல. சண்டை போடவும் ஒரு சமயம் (நேரம்) இருக்கிறது. ஒத்துழைக்கவும் ஒரு சமயம் இருக்கிறது. வேலை செய்யவும் ஒரு சமயம் உண்டு; விளையாடவும் ஒரு சமயம் உண்டு. இது பரஸ்பரம் சண்டை போடவோ அல்லது விளையாடவோ சமயமல்ல. பரஸ்வரம் சண்டை போட்டால் அல்லது விளையாடிக் கொண்டிருந்தால் நாம் நமது தேசத்திடமும் தேச மக்களிடமும் நமது கடமையை செய்யத் தவறியவர்களாவோம். இது நாம் பரஸ்பரம் ஒத்துழைத்து கூடி வேலை செய்யும் சமயம். சரியான நல்லெண்ணத்துடன் வேலை செய்ய வேண்டும்.

சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு

சர்க்காரின் ராணுவ ஸிவில் உத்யோகஸ்தர்களுக்கு ஒரு வார்த்தை. சர்க்கார் வேறு நீங்கள் வேறு என்ற வித்யாஸம் இப்பொழுது மறைந்துவிட்டது. நாம் எல்லோரும் இப்பொழுது பாரதமாதாவின் சுதந்தரமான மக்கள். தேசத்தின் விடுதலையில் நாம் அனைவரும் ஒருமிக்க பெருமிதம் கொள்கிறோம். பாரதமாதாவுக்கு நாம் அனைவரும் வித்யாஸமின்றி ஒன்றுபட்டு சேவை செய்யவேண்டும். இந்தியாவிடம் நாம் எல்லோரும் பொதுவாக விஸ்வாசமாகயிருக்க வேண்டும். நம்முன்புள்ள சிரமமான எதிர்காலத்தில் உத்யோகஸ்தர்களும் நிபுணர்களும் முக்யமான பங்கை எடுத்துகொள்ளவேண்டியிருக்கும். தாய்நாட்டின் சேவையில் எங்கள் தோழர்களாக ஈடுபடும்படி அவர்களை அழைக்கிறோம்.

"ஜெய் ஹிந்த்"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com