பி.வி. நரசிம்ம ராவ் நூற்றாண்டு: முன்னாள் பிரதமருக்கு நேரிட்ட அவமரியாதை, புறக்கணிப்பு

நாட்டின் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் நூற்றாண்டு விழா (பிறந்த நாள்) தொடங்குகிறது இன்று (28/06/2020). தெலங்கானா அரசு விழா எடுக்கிறது.
நரசிம்ம ராவுடன் மன்மோகன் சிங்
நரசிம்ம ராவுடன் மன்மோகன் சிங்

நாட்டின் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் நூற்றாண்டு விழா (பிறந்த நாள்) தொடங்குகிறது இன்று (28/06/2020). தெலங்கானா அரசு விழா எடுக்கிறது.

இந்தியாவில் புதிய பொருளாதராக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, தாராளமயமாக்கலுக்கு சிகப்புக் கம்பளம் விரித்தவர். நரசிம்ம ராவுக்குத்  துணையாக இருந்தவர் அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங். இந்த தாராளமயமாக்கல் கொள்கை, இந்திய மண்ணுக்கு உகந்ததா? இல்லையா? காலம்தான் சொல்ல வேண்டும்.

இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரவையில் பங்கேற்று, ஆட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிப் பணிகளில் அவருடன் மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் நரசிம்ம ராவ். தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பிரதமர். இவரின் மரணத்திற்கு பின் நேரிட்ட அவமானம் இன்றளவும் நினைவில் உள்ளது.

நரசிம்ம ராவ், டிசம்பர் 9, 2004 ஆம் ஆண்டு மாரடைப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணித்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமரான அவரது உடலை, மற்ற முன்னாள் பிரதமர்களைப் போலவே புது தில்லியில் நல்லடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் விரும்பினர். ஆனால், அந்தக் கோரிக்கை அன்றைக்கு ஏற்கப்படவில்லை. இத்தனைக்கும் மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் இராணுவ வண்டியில் கொண்டு செல்லப்பட்ட அவருடைய உடலைக்கூட அனுமதிக்காமல், காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நுழைய மறுக்கப்பட்டு அதன் கேட் பூட்டப்பட்டதால் வாசலிலேயே அவருடைய உடலுக்கு ஒப்புக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அவரது உடல் ஹைதராபாத் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு ஜூப்ளி மண்டபத்தில் இறுதிச்சடங்குக்கு முன் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அங்கேதான் அவரது உடல் அரசு மரியாதையோடு தகனம் செய்யப்பட்டது.

முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அங்கே அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அளித்த உறுதிமொழிகூட காற்றில் பறந்துவிட்டது.

இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக இருந்தாலும் ஏனோ ராஜீவ் காந்தியால் நரசிம்ம ராவ் புறக்கணிக்கப்பட்டார். ஆனால், ராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு பிரதமரான நரசிம்ம ராவோ ராஜீவிற்கு நெருக்கமான சகாக்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கினார்.

அரசியலில் என்னதான் களப்பணிகள் செய்தாலும், அதற்கான அங்கீகாரம் கிடைக்காதபோது தகுதியே தடை என்பது சரிதானே.

நரசிம்ம ராவ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். ஈழத்தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு ஆதரவாக, பிரதமரான இந்திரா காந்தியிடம், ஜி. பார்த்தசாரதியோடு இணைந்து ஈழத்தமிழர் நலனில் அக்கறையுடன் ஆலோசனைகளை எல்லாம் வழங்கியவர்.

1979, 80 என்று நினைவு. காங்கிரஸ் கட்சியின் சார்பில் சில முடிவுகளை இந்திரா காந்தி எடுத்தபோது, அந்த முடிவு உகந்ததல்ல என்று பழ. நெடுமாறன் தில்லியில் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி. சுவாமிநாதன், துளசி அய்யா வாண்டையார், அன்றைய எம்.எல்.சி. தம்பித்தோட்டம் சுந்தரேச தேவர் போன்றவர்களோடு
இந்திரா காந்தியைச் சந்தித்துக் கூறிவிட்டு தொடர்ந்து அதற்காக குரலெழுப்பிக் கொண்டிருந்தபோது, நெடுமாறனை சமாதானம் செய்ய நரசிம்ம ராவை சென்னைக்கு அனுப்பினார் இந்திரா காந்தி.

அப்போது நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த நரசிம்ம ராவைச் சந்திக்க பழ. நெடுமாறனோடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தூத்துக்குடி ஏ.பி.சி. வீரபாகுவுடன் சென்றபோது பழ. நெடுமாறனின் கருத்துகளை அமைதியாக நரசிம்ம ராவ் கேட்டுப் பல விளக்கங்களை அளித்து, காங்கிரசில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சரிபாதி வேட்பாளர்களை நெடுமாறனே முடிவு செய்யலாம் என்ற வாக்குறுதியை அளித்தார்.

தமிழ்நாடு காங்கிரசில் அப்போது நெடுமாறன், மூப்பனார் என்ற கோஷ்டிப் பிரச்னைகளும் இருந்தன. ஆனால், நெடுமாறனோ நரசிம்ம ராவிடம் எனக்கு 50% வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் உரிமையைக் கொடுத்தது நன்றிதான். ஆனால், எனக்கு அது முக்கியமல்ல. எதிர்கால அரசியல் நலன்களை மனதில் கொண்டு நான் சொல்லும் விஷயத்தை பரிசீலனை செய்யுங்கள் என்று தொடர்ந்து வாதிட்டார். இதைக் கண் முன்னால் இருந்து பார்த்தவன் என்ற நிலையில் இங்கே பதிவு செய்கின்றேன். அதன் பிறகு அரசியலில் என்னென்னவோ நடைபெற்றுவிட்டது.

பின்னர், 1984 இல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மருத்துவமனைக்கு ஒரு மாலைப் பொழுதில் 7 மணியளவில் நரசிம்ம ராவ் வந்தார்.

அப்போது, நெடுமாறன், பாரமலை, நான் எல்லாம் இருந்தோம். ஜெயலலிதா, சத்தியவாணி முத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், அன்றைய அமைச்சர்கள் கே.ஏ. கிருஷ்ணசாமி, எச். வி. ஹண்டே போன்றோரெல்லாம் இருந்தோம்.

சோர்வாக எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த நரசிம்ம ராவ், நெடுமாறனைப் பார்த்தவுடன் அருகே வந்து, "ஹவ் ஆர் யூ மிஸ்டர் நெடுமாறன்? ஆஃப்டர் ஏ லாங் டைம்" என்று கேட்டுவிட்டுத் தனக்கே உரித்தான இயல்பான சிரிப்போடு சென்றார்.

தனது புத்தகமான தி இன்சைடர் (The Insider) இல் ஆந்திர அரசியலைப் பற்றியும், மூத்த காங்கிரஸ் தலைவர்களான பிரகாசம், நீலம் சஞ்சீவரெட்டி, பிரம்மானந்த ரெட்டி, லட்சுமிகாந்தம்மாள், சென்னா ரெட்டி, வெங்கல் ராவ், தென்னட்டி விஸ்வநாதன் போன்ற பல தலைவர்களுடைய பாத்திரங்களை வைத்து ஒரு புதினமாக ஆங்கிலத்தில் படைத்து 1998 இல் வெளியிட்டுள்ளதைப் படிக்க சுவாரசியமாக இருக்கும்.

மிகவும் சிக்கலான காலகட்டங்கள் என்றபோதிலும் ஆட்சிக் காலம் முழுவதும் ஆண்டு முடித்தவர் நரசிம்ம ராவ். அவர் பிறந்த நூற்றாண்டு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com