எம்.கே. தியாகராஜ பாகவதர் ஒரு சரித்திரம்!

தமிழ்த் திரைப்படத் துறையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தவர், பொதுவாழ்க்கையில் சிறந்த மனிதராக வாழ்ந்து காட்டியவர் தியாகராஜ பாகவதர்.
எம்.கே.தியாகராஜ பாகவதர்
எம்.கே.தியாகராஜ பாகவதர்

தமிழ்த் திரைப்படத் துறையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தவர், பொதுவாழ்க்கையில் சிறந்த மனிதராக வாழ்ந்து காட்டியவர் தியாகராஜ பாகவதர். தமிழகத்தில் மகாத்மா காந்திக்கு அடுத்து அதிகக் கூட்டம் கூடியது இந்த புனிதருக்குத் தான். அவர் பிறந்த நாள் மார்ச் 1.

திரையில் மட்டும் அல்ல, பொது வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டாராக விளங்கிய இவரது வரலாற்றை இளைய தலைமுறையினர் படித்தால், சினிமா, அரசியல், பொது வாழ்க்கை பற்றிய தெளிவு கிடைக்கும். 

சுருக்கமாக எம்.கே.டி. என அழைக்கப்படும் தியாகராஜ பாகவதர் மார்ச் 1, 1910 ஆம் ஆண்டு மாயவரத்தில் பிறந்தவர். இவர்களது பெற்றோர் மாயவரம் கிருஷ்ணமூர்த்திஆச்சாரி - மாணிக்கத்தம்மாள் ஆவார்.

1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய இவர்,  14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார், அதில் 6 படங்கள் இமாலய வெற்றிப் படங்களாக வலம் வந்தவை.

1944 இல் வெளிவந்த இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ், சென்னை பிராட்வே திரையரங்கில் மூன்று ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது.  மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியப் படம் என்ற சரித்திரமும் படைத்தது.

அன்றைய காலகட்டத்தில் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக் கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக் கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சி பெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க பல செல்வந்தர்கள் மதுரை டாக்கிஸ் என்ற குழு அமைத்து படமெடுக்க முன்வந்தனர். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றிபெற்றதனால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம் என்று பெயர் பெற்று இன்று வரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.

ஏழிசை மன்னர் எனப் போற்றப்படுவர், மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரான இவர் 41/2 கட்டை சுருதியில் அருமையாக பாடக்கூடியவர். தியாகராஜ பாகவதரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தனர். அனைவருக்கும் புரியும்படி எளியத் தமிழில் பாடினார். இவரின் திரைப்பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாடலெழுதும் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன், இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராய் இருந்தார். பாபநாசம் சிவன் இயற்றிய பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன.

இவரின் குரல் வளத்தை உணர்த்தும் ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.  தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில் இவருடைய இசைக் கச்சேரி நடந்தது. இரவு நேரம், அப்போது  அங்கிருக்கும் மாவு மில் சங்கு  வழக்கம் போல ஒலித்தது. பாகவதர் அந்த இடையூரைப் பொருட்படுத்தவில்லை, மாறாக அந்த சங்கொலிக்கு ஈடுகொடுத்து தன குரலை உயர்த்தி கணீரென்று தம் கட்டி பாடினார். அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து அது முடியும் வரை பாடினார். மக்களின் கவனம் முழுவதும் அசையாமல் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.

புகழின் உச்சத்தில் இருந்த அவரின் வாழ்க்கை சில சதிகளுக்குள்ளும் சிக்கிக் கொண்டது. சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரப்பரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக ஆத்ம தோழரான என்.எஸ்.கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டார். 4 வருடம் சிறைத் தண்டனையும் பெற்றார்.

லண்டன் கவுன்சிலில் இருந்த பிரபல வழக்குரைஞர் வேலூர் எத்திராஜ் முதலியார் இவர்களின் வழக்கின் தன்மையை ஆராய்ந்தார். சாட்சிகளின் குளறுபடிகளை அறிந்தார். எனவே, இவர்கள் இருவருக்காகவும் தானாக முன்வந்து ஆர்வத்துடன் வாதாடினார். தண்டனை காலத்திலேய இவரின் வழக்கு மறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு வருட சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். விடுதலையானாலும்,  இந்த குற்ற பாதிப்பு அவரின் நெஞ்சை, வாழ்க்கையை, சினிமா உச்சத்தை பொளாதார ரீதியாக பாதித்தது. பாகவதர் சிறை செல்ல நேர்ந்தபோது 12 படங்களுக்கு முன்பணம் வாங்கி இருந்தார். படத் தயாரிப்பாளர்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பிக் கேட்டார்கள். அந்த சிரமமான நேரத்திலும் அந்தப் பணத்தை யெல்லாம் மிகுந்த சிரத்தையோடு திருப்பிக் கொடுத்தார்.

சிறை விடுதலைக்குப்பின்  முயற்சி செய்து, அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சிறைக்குப்பின் பலர் படமெடுக்க முன்வந்தாலும் பாகவதர் அவற்றை ஒதுக்கித் தள்ளினார். அவரின் கஷ்ட காலத்தில் உதவாத திரைப்படத்துறையை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தார்.

அதன்பின் சொந்தப் படங்கள் எடுத்து தோல்வியைத் தழுவினார். அதன் பின் மேடைக் கச்சேரிகளை மட்டும் பண்ணிக் கொண்டு வந்தார். அதிலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறமுடியவில்லை.

இவரின் ரசிகராகவும் நண்பராகவும் விளங்கிய முக்கூடல்த.பி சொக்கலால் பீடி அதிபர் ஹரிராம் சேட் இவருக்கு மிக உயர்ந்த பாண்டாக் கார் பரிசளித்தார், அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

இவரின் ரசிகராக வீட்டை விட்டு ஒடி வந்த கோபால், ரசிகரானப் பிறகு எம்.கே.டி கோபால் எனப் பெயர் மாற்றிக்கொண்டு எம்.கே.டி யின் ஆத்ம நண்பனாக மாறினார். ஒரு முறை எம்.கே.டி.-யின் வைர மோதிரம் கிணற்றில் விழுந்ததை அனைவரும் திடுக்கிட்டு நிற்கையில் அக்கிணற்றில் யாரும் எதிர்பாராத வகையில், உயிரைப் பற்றிக்கவலைப்படாமல் குதித்து அம்மோதிரத்தை கண்டுபிடித்துக் கொடுத்தார், அது முதல் ஆத்ம ரசிகனாகவும், நண்பனாகவும் எம்.கே.டி.யுடனே இருந்துவரலானார். பலருக்கு உதவி செய்வதில் பாகவதர் தயாள குணம் கொண்டவர். சேமிப்பு குணம் அற்றவர். படங்களில் இருந்து ஒய்வு பெற்ற சமயத்தில் தன்னையே நம்பி இருந்த பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலை உணர்ந்து, அவர் கேட்காமலேயே தான் சாப்பிடுவதற்கும், விருந்தினர்களை உபசரிக்கவும் பயன்படுத்தும் தங்கதட்டையே கொடுத்துதவியவர். தனது வழக்கை சிக்கலின்றி முடித்து வைத்த வழக்குரைஞர் எத்திராஜிக்கு ஒரு தங்கத்தட்டை அளித்து பெருமைப்படுத்தியவர்.

வழக்கறிஞர் எத்திராஜ் இந்த தங்கத் தட்டையும் தன்னிடமிருந்த பணத்தையும் வைத்து 1948ஆம் சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியை ஆரம்பித்தார்.

இப்படி உதவிய பாகவதர் குடும்பம் மிகப் பெரிய பொருளாதார இக்கட்டையும் சந்தித்தது. இன்றைய பல ஜாம்பவானகள் அனைவரும் வந்து காத்திருந்த அவரது வீட்டில் வறுமைத் தாண்டவமாடியது. பாகவதரின் கடைசி காலம் மிகவும் சோகமயமானது. வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மருத்துவத்திற்காகக்கூட யாருடைய தயவையும் அவர் நாடவில்லை. பல திரைக்கலைஞர்கள் விழா எடுத்து நிதி திரட்டும் ஆலோசனையைக் கூறியும் அதை ஏற்க மறுத்து விட்டார். சிவகாமி படத்தின் இறுதிக் காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார்.

நவம்பர் 1, 1959, ஈரல் நோயினால் பாதிப்படைந்தவராக சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.

பாகவதர் வாழ்க்கையில் சில நிகழ்வுகள்

பாகவதர் சிறுவனாக நாடக உலகத்தில் பிரவேசித்த காலத்தில் குருவாக இருந்தவர் நடராஜ வாத்தியார். பிற்காலத்தில் வாத்தியாரின் நலனுக்காக நாடகம் நடத்தி அதில் வந்த பணத்தை அப்படியே அவருக்குக் கொடுத்து உதவினார் பாகவதர் திருச்சி வானொலியில் நிரந்தர வித்வானாக இருந்த சமயம். அன்று அவர் கச்சேரிக்குத் தம்பூரா போட இருந்த கலைஞரை மாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். ஏனென்று தெரியாதபோதிலும் அவரை மாற்றினார்கள் வானொலி நிலையத்தார். அந்தக் கலைஞர் ஒரு காலத்தில் தனக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்த குரு. என்று பாகவதர் சொல்லித்தான் மற்றவர்களுக்குத் தெரிந்தது. வாழ்க்கைத்தரம் சரிந்து விட்ட நிலையில் குரு தம்பூரா போட வர நேர்ந்தது. அதை விரும்பாத பாகவதர் தனக்குக் கிடைத்த சன்மானத்தொகையை குருவுக்கே கொடுத்து விட்டார்.

ஒருமுறை நாகர்கோவிலில் என்.எஸ்.கே வீட்டில் புதுமனை புகுவிழாவில் பாகவதரின் கச்சேரி நடந்தது. என்.எஸ்.கே பாகவதருக்கு எல்லோர் முன்னிலையிலும் ஒரு வைர மோதிரம் வழங்கினார். அந்த மோதிரத்தை கச்சேரியில் சிறப்பாக வயலின் வாசித்த வயலின் வித்வானுக்கு அன்பளிப்பாக அளித்து விட்டார் பாகவதர். கலைஞர்களை கவுரவிக்கும் சிறந்த பண்பு பாகவதரிடம் இருந்தது.

ஒருமுறை கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள மண்டைக்காடு என்ற இடத்தில் பாகவதர் கச்சேரிக்கு ஏற்பாடாகி இருந்தது. கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் இலவசம் என்று அறிவித்திருந்த போதிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நிர்வாகிகள் கட்டணம் வசூலிக்கலாம் என பாகவதரை நிர்பந்தம் செய்தார்கள். ஆனால், இலவசமென்று அறிவித்துவிட்டு கட்டணம் வசூலிப்பது தவறு என்று தனக்கு வந்திருக்கக்கூடிய பல ஆயிரம் ரூபாய் வருமானத்தையும் லட்சியம் செய்யாமல் கூறினார்.

பாகவதர் திரை இசை உலகின் உச்சத்தில் இருந்தபோது தங்கத்தட்டில்தான் சாப்பிடுவாராம். ஒரு முறை கவிஞர் சுரதா அவர் இல்லத்திற்கு சாப்பிடச் சென்றபோது அவருக்கு வாழை இலை போட்டார்கள். ஆனால் பாகவதர், “அவர் என்னுடன் விருந்தாளியாக இருக்கும் வரை அவருக்கும் தங்கத் தாம்பாளத்தில் தான் உணவளிக்க வேண்டும்” எனக் கட்டளை இட்டார்.

பாகவதருக்கு செல்வந்தரான ஒரு முஸ்லீம் நண்பர் இருந்தார். அவரின் இரு மகன்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.  அந்த நண்பர் மகன்கள் பேரில் கோபங்கொண்டு தான் சம்பாதித்ததை எல்லாம் பாகவதர் பெயருக்கு எழுதிப் பதிவு செய்து விட்டார். ஆனால் அந்த நண்பர் ஆத்திரத்தால்தான் அப்படிச் செய்து விட்டாரென புரிந்து கொண்டு அந்த முஸ்லீம் நண்பரின் மகன்கள் இருவரையும் கூப்பிட்டு அறிவுரை கூறினார் பாகவதர். அந்தப் பெரியவர் மறைந்ததும் அவருடைய மகன்கள் பேரில் சொத்துக்களை சரி சமானமாகப் பிரித்து அவர்களுக்கே அளித்து விட்டார்.

அன்றைய கால கட்டத்தில் இவரின் கச்சேரிகளை காண மக்கள் மின்சாரக் கம்பத்தில் ஏறி நின்று கொண்டு கேட்டனர். அம்மாதிரி சமயத்திலே ஒரு சிறுவன் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்த்து உண்டு. பாகவதர் அச்சிறுவனின் குடும்பத்துக்கு பின் 5000 ரூபாய் நிதியுதவி அளித்தார். இது அன்றைய நாட்களில் மிக்பெரியத் தொகை.

ஒருமுறை திருச்சிக்கு காரில் பயணமான பொழுது இவரின் கார் புதுக்கோட்டை வழியாக தொடர் வண்டி பாதையைக் கடக்க முற்படுகையில் அளவுக்கதிமான கூட்டம் இவரின் காரை கடக்க விடாமல் சூழ்ந்து கொண்டது. ரயில் வண்டியின் கார்ட் இதையறிந்து வண்டியை நிறுத்திவிட்டு பாகவதரை பாட வற்புறுத்தினார். பாகவதர் வேறுவழியின்றி அங்கு பாடிய பிறகு தான் தொடர் வண்டி அங்கிருந்து நகர்ந்தது. தமிழகத்தில் மகாத்மா காந்திக்கு பிறகு அதிக அளவில் கூட்டம் கூடியது இவருக்குத் தான்.

1957-ல் பிரதமர் நேரு தமிழக முதல்வர் காமராஜருடன் திருச்சிக்கு வந்தபோது,  இவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து, எம்.பி.யாக தேர்தலுக்கு நியமிக்க கூறினார், தான் நடிகராக இருப்பதால் அதை ஏற்கும் தகுதி இல்லை என்று கூறி மறுத்துவிட்டார் பாகவதர்.

2 வது உலக யுத்த நிதிக்கு பாகவதர் உதவிய போது, அவரைப் பாராட்டிய கவர்னர் 3 கிராமங்களை பரிசாக வழங்கினார், ஆனால் அதை அப்படியே ஏழைகளுக்கு வழங்கினார் பாகவதர்.

இன்றைய சினிமா நட்சத்திரங்களையும், அரசியல்வாதிகளையும் பார்க்கும் இளைய தலைமுறையினர் பகாவதர் வாழ்க்கையை படித்தால்.. பொதுவாழ்கைக்கு போலிகள் வராது. 

[கட்டுரையாளர் - தமிழ் முழக்கப் பேரவை அமைப்பாளர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com