சொல்லப் போனால்... அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெறும் அணி மாற்றங்கள் பற்றி...


சட்டப்பேரவைத் தேர்தலோ, மக்களவைத் தேர்தலோ, பொதுவாக தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைத்ததும்தான், எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சிக்குச் சென்று ஐக்கியமாவார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும்பாலும் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள்தான் எதிர்க்கட்சிகளுக்குத் தாவுவார்கள்.
நேர்மாறாக இப்போது எதிர்க்கட்சிகளில் இருந்தவர்களில் பலர், குறிப்பாக அதிமுகவினர், ஆளும் திமுகவில் தொடர்ந்து சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்த தேமுதிகவும் ஆளும் கூட்டணிக்குச் சென்றுவிட்டிருக்கிறது.
அது எப்படி முடியும்? என்று பலரும் நம்பத் தயாராக இல்லாத நிலையிலும் துணிந்து திமுகவில் இணைந்திருக்கிறார் மூன்று முறை முதல்வராக இருந்தவரான, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்.
பன்னீர்செல்வத்துக்கும் வேறு வழியில்லை என்றுதான் கூற வேண்டும். அவரும்தான் என்னதான் செய்வார்? அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு நாலாண்டுகளுக்கும் மேலாகின்றன. ஒற்றுமை, ஒற்றுமை, ஒன்றுபட்ட அதிமுக என்று சொல்லிக்கொண்டேதான் இருந்தார். அவரை வழிநடத்துவதாகக் கூறப்பட்ட பாரதிய ஜனதா கட்சியும்கூட அதிமுகவினர் அனைவரையும் ஒன்றிணையுங்கள் என்றுதான் அறிவுறுத்தியதாகக் கூறினார்கள்.
ஆனால், ‘முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா, நடக்கவே நடக்காது’ என்ற – பன்னீர்செல்வத்துடனும் செங்கோட்டையனுடனும் இணைந்து தோன்றிய - அமமுக அமைப்பாளர் டிடிவி தினகரனைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமியோ பன்னீர்செல்வத்தையும் சசிகலாவையும் கூடவே கூடாது என்று கூறிவிட்டார்.
ஒருகட்டத்தில் இவையெல்லாம் அவர்களின் உள்கட்சிப் பிரச்சினை என்று கழற்றிக் கொண்டதுடன், பன்னீர்செல்வம் பற்றியும் பாரதிய ஜனதா கவலைப்படாமல் கைவிட்டுவிட்ட நிலை.
அதிமுகவில் இடமில்லை என்றாகிவிட்ட நிலையில், தனியொரு கட்சி நடத்த வேண்டும் ( ஆனால், உடனிருந்தவர்கள் எல்லாரும் வெளியேறிக் கொண்டேயிருக்கிறார்கள்), அப்போது த.வெ.க.வுடன் கூட்டணி பற்றி யோசிக்கலாம். பாரதிய ஜனதா கட்சியில் சேரலாம்; அல்லது திமுகவில் சேரலாம்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லிக் கொண்டிருக்க சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பதைப் போல நேராக அறிவாலயத்துக்கே சென்றுவிட்டார் ஓ. பன்னீர்செல்வம் – சொன்னதைச் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம் என நினைத்திருக்கலாம். தாய்க் கழகம், தளபதியின் ஆட்சி சிறப்பு, அதிமுக இனி அவ்வளவுதான் என்று முடிவு செய்து அறிவித்துவிட்டார்.
ஏற்கெனவே பன்னீர்செல்வத்துடன் இருந்த ஆர். வைத்தியலிங்கம், பி.எச். மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் எல்லாரும் திமுகவினராகிவிட்டார்கள். தற்போது பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து இணைந்தவர்களுக்குக் குறிப்பிட்ட தொகுதிகள் ஒதுக்கப்படலாம், உதயசூரியன் சின்னத்தில், திமுக வேட்பாளர்களாகத்தான் போட்டியிடப் போகிறார்கள்; இழப்பு எதுவுமில்லை.
பாரதிய ஜனதா கட்சியில் இணையாமல் திமுகவில் இணைந்ததன் மூலம், தொடக்கத்தில் சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தொடர்ந்து, திராவிடக் கொள்கையைப் பேசிக்கொண்டே, ஒரு மரியாதையான அரசியலைச் செய்ய முடியும் என்று ஓ. பன்னீர்செல்வம் கருதுவதாக அவருடைய ஆதரவு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதே கருத்தைத்தான், “ஓபிஎஸ், பாஜக போன்ற கட்சிகளில் சேராமல் மீண்டும் ஒரு திராவிட பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது அவர் மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது. பாஜகவோடு நெருக்கமாக இருக்கிறார்... பாஜக சொல்படி செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் எல்லாம் அவர் மீது இருந்தன. ஆனால் இன்று அவர் எடுத்திருக்கும் முடிவு.. அவர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் வழி வந்தவர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
ஏற்கெனவே, அதிமுகவிலிருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, எஸ். ரகுபதி, பி.கே. சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், டி.எம். செல்வகணபதி, போன்றோரெல்லாம் தந்தை மு. கருணாநிதி காலத்திலும் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, டாக்டர் வி.எஸ். விஜய், அன்வர்ராஜா, நிலோபர் கபில், கார்த்திக் தொண்டமான் போன்றோர் தனயன் ஸ்டாலின் காலத்திலும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். இவர்களில் பெரும்பாலோர் செல்வாக்குடனும் அதிகார மையங்களாகவும் திகழ்கின்றனர்.
திமுகவைப் பொருத்தவரை சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணி என்ற மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கத் தேவையான காய்களை எல்லாம் நகர்த்துகிறார்கள். கொஞ்சம் கொஞ்சம்தான் என்றாலும்கூட எத்தகைய வாய்ப்பையும் எதிர்த்தரப்பினருக்கு விட்டுவைப்பதில்லை எனத் திமுக திட்டமிடுவதாகத் தெரிகிறது.
(கடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியில் சுயேச்சை சின்னமான பலா பழத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 3.42 லட்சம் வாக்குகளுடன் இரண்டாமிடம் பெற்றார் ஓ.பி.எஸ். திமுக வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில் அதிமுகவின் பி. ஜெயபெருமாள் 99 ஆயிரம் வாக்குகளே பெற்றார். நாம் தமிழர் கட்சியின் ஜெயபால் சந்திரபிரபா பெற்ற வாக்குகள் – 97 ஆயிரம்).
பன்னீர்செல்வத்தின் இணைப்பு மூலம் தென் மாவட்டங்களில் அவருக்கு என்று இருக்கக் கூடிய வாக்குகளில், அது எவ்வளவாக இருந்தாலும் கிடைப்பது நல்லது என்றும், அதிமுகவுக்குள்ளேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அல்லது அதிருப்தியாளர்களின் வாக்குகளையும் தங்கள் கூட்டணியால் பெற முடியும் என்றும் திமுக கருதுகிறது.
(முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடந்தவற்றையெல்லாம் வெளியே சொல்லலாம்; நீட் தேர்வு போன்ற, நினைவிருந்த வரை ஜெயலலிதா எதிர்த்துக் கொண்டிருந்த திட்டங்களுக்கு, பின்னால் ஏற்பட்ட அதிமுக அரசு எவ்வாறு ஒப்புதல் அளித்தது? எத்தகைய நெருக்குதல்கள் தரப்பட்டன என்பது பற்றியெல்லாம் தேர்தல் நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஒருவேளை சொல்லலாம்; குறைந்தபட்சம் சொல்லிவிடக் கூடும் என்ற அச்சத்தை எதிர்த்தரப்பினருக்கு ஏற்படுத்த முடியும்).
மத்திய மாவட்டத் தொகுதிகளிலும் எதிர் அணிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கொடுப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக பிற தொகுதிகளில் திமுகவுக்குக் கூடுதலாக எத்தனை ஆயிரம் வாக்குகள் கிடைத்தாலும் நல்லதே. மாறாக, எத்தனை ஆயிரம் அல்லது நூறு வாக்குகள் குறைய விடுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி – அதிமுக கூட்டணிக்கு நல்லதல்ல.
ஏற்கெனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிய கம்யூ., இந்திய கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என... கூடுதலாக தேமுதிகவும் சேர்ந்திருக்கிறது. அதிமுகவின் ஓ.பி.எஸ். அணியினர் இணைந்தேவிட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை, பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றி – தோல்வியை மிகக் குறைவான – சில ஆயிரங்கள், சில நேரங்களில் சில நூறுகள் என - வாக்குகளே தீர்மானிக்கும்.
நிலைமை இவ்வாறிருக்க, கொஞ்சம் வாக்குகள் என்றாலும் இனி கூட்டணிகளுக்குள் கட்சிகளையும் நபர்களையும் கொண்டுவந்துவிட வேண்டும் என்றே திமுக கூட்டணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முனைப்புக் காட்டத் தொடங்கியிருக்கின்றன.
எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து கிடப்பதை முழுவதுமாகத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது திமுக.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு எதிராக அவருடைய மனைவி சங்கீதா தொடுத்துள்ள விவாகரத்து வழக்கும், மனுவில் அவர் தெரிவித்திருக்கும் விஷயங்களும் தேர்தலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உடனடியாக மதிப்பிட முடியாது.
தவிர, சசிகலாவும் தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார். என்ன செய்யப் போகிறார்? யாருடன் அணி சேரத் திட்டமிடுகிறார் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 1950-களில் தேர்தல் போட்டியென்பது காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்கள் என்ற இரு துருவங்களாக இருந்தது. அடுத்தடுத்த காலகட்டங்களில் திமுகவின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினால் 1960களில் காங்கிரஸ் – திமுக என்றானது; கூட்டணிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் தேடின.
அதுவே பின்னர், எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கவும் காமராஜர் மறைவுக்குப் பின் காங்கிரஸ் வலுவிழக்கவுமாக 1970-களில் திமுக – அதிமுக என்று இருமுனைப்பட்டுவிட, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸும்கூட சேர்ந்து கூட்டணிக் கட்சிகளிலொன்றாகிவிட்டது.
இப்போது திமுக கூட்டணி இருக்கிறது. அதிமுக கூட்டணியா? அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியா? என்று பெரிய விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்கிறார்கள் பாரதிய ஜனதா தலைவர்கள். அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 30 பேர் வரை எம்எல்ஏக்களாக சட்டமன்றம் செல்வார்கள்; வாய்ப்பு இருந்தால் அமைச்சர்களாவோம் என்று தெரிவித்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
இன்றைக்குச் சொன்னால் யாராலும் நம்ப முடியாத பேரதிசயம் ஒன்று, 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிகழ்ந்தது!
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் இணைப்பதற்கான முயற்சிகளை மத்தியில் அமைச்சராக இருந்த பிஜு பட்நாயக் (ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தை) முன்னெடுத்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் திமுக தலைவர் மு. கருணாநிதியும் நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினர். தமிழ்நாட்டில் முதன்மையான அரசியல் கட்சிகளாகத் திகழ்ந்த இரு பெரிய திராவிட கட்சிகளும் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சில நாள்களிலேயே தில்லியில் காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்திக்கும் திமுக தலைவர் மு. கருணாநிதிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களவைத் தேர்தலுக்காக இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதென முடிவானது – புதுவை உள்பட காங்கிரஸுக்கு 23 தொகுதிகள், திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு 17 தொகுதிகள்.
என்ன காரணத்தாலோ இணைப்பு முயற்சி தடைப்பட்டுவிட, அத்துடன் திமுக – அதிமுக இணைப்பு எண்ணங்களும் முடிவுக்கு வந்துவிட்டன. ஒருவேளை இணைந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் திசைமாறி, மீண்டும் திமுக, காங்கிரஸ் என போட்டி இரு முனைப்பட்டிருக்கலாம்.
இப்போது இன்னும் யார் யாரெல்லாம் எந்தெந்தக் கட்சிகளில் இணையப் போகிறார்கள்? த.வெ.க. கூட்டணி அமைக்குமா, தனித்தே போட்டியிடுமா? பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியெல்லாம் என்ன செய்யப் போகிறார்கள்? ஒருவேளை வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா?
அது சரி, எது நடந்தாலும் அரசியலில் எல்லாம் சாதாரணம்தானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...