எல்லையில்லாத் தொல்லை!

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே கட்டுப்பாட்டு எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதில் இதுநாள்வரை இந்திய ராணுவத்தினர்தான் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர்.
Updated on
2 min read

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே கட்டுப்பாட்டு எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதில் இதுநாள்வரை இந்திய ராணுவத்தினர்தான் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாள்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திலும் இந்திய வீரர்கள் இருவர் கொடூரமான முறையில், முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். வழக்கம்போல பாகிஸ்தான், "இதை எங்கள் ராணுவம் செய்யவில்லை' என்று கூறியுள்ளது.

இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்பதை விசாரிக்க, ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் இந்தியா, பாகிஸ்தான் போர்ப்படை நோக்கர்கள் குழுவைக் கொண்டு விசாரிக்கலாம் என்று பாகிஸ்தான் கூறிய ஆலோசனையை இந்தியா நிராகரித்துவிட்டது.

காஷ்மீர் பிரச்னையில் எப்படியும் சர்வதேசத் தலையீட்டை ஏற்படுத்துவது என்பதுதான் பாகிஸ்தானின் குறிக்கோள். ஆனால், இந்தப் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்ற விரும்பவில்லை என்பது இந்திய அரசின் பெருந்தன்மை.

இத்தகைய அத்துமீறல்கள், தாக்குதல்களைப் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கக் காரணம், பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்றி அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் உள்ளே நுழைந்து குட்டையை மேலும் குழப்பச் செய்ய வேண்டும் என்பதுதான். தனக்குக் கிடைக்காத காஷ்மீர் பகுதியில் அன்னிய சக்திகள் ஆதிக்கம் செலுத்தினாலும் பரவாயில்லை, இந்தியாவுக்கு அங்கே உரிமை இருக்கக்கூடாது என்பதுதான் பாகிஸ்தானின் எண்ணம். அதனால்தான், நல்லுறவு ஏற்படும் சாத்தியங்கள் வரும்போதெல்லாம் இத்தகைய அசிங்கங்கள் எல்லையில் நடைபெறுவது சகஜமாக இருக்கிறது.

கார்கில் பகுதியில் இரு தரப்பும் படைகளை விலக்கிக்கொள்ளலாம் என்று அண்மையில் பாகிஸ்தான் ஒரு கோரிக்கையை முன் வைத்தது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து கார்கில் செல்லும் பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டு, முப்பதுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இறந்தனர். ஆகவே, இரு தரப்பும் ராணுவத்தை விலக்கிக்கொள்ளலாம் என்று இந்தியாவுக்கு ஆலோசனை சொன்னார்கள். அதை இந்திய அரசு ஏற்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், பாகிஸ்தான் சொல்வது எதையும் கேட்கக்கூடாது என்கின்ற எண்ணம் அல்ல. நாம் இருவரும் இல்லாத இடத்தில் தீவிரவாதிகள் வந்து நிற்கலாம் என்ற ஏற்புடைய அச்சம்தான் காரணம். இதை இந்தியா வெளிப்படையாகச் சொல்லவும் செய்தது.

இப்போது பூஞ்ச் பகுதியில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திலும், இந்தச் செயலை வேறு யாராவது செய்திருக்கலாம் என்ற கருத்தையும் பாகிஸ்தான் முன்வைக்கிறது. அதாவது தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என்று பொருள். அப்படியானால் இந்த எல்லையில் தீவிரவாதிகள் வரும் நிலைக்கு யார் காரணம்? பாகிஸ்தான் அரசுதானே?

சில மாதங்களுக்கு முன்பு எல்லைப் பகுதியில், மூன்று கம்பி வேலிகளுக்கு அடியில் ஒரு நீண்ட சுரங்கப்பாதை இருப்பதை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். ஏணிகளுடன் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை வழியாக எத்தனைத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்பதைக் கணக்கிடவே முடியாது. இருப்பினும் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல், சுரங்கப்பாதையை மூடியது இந்திய ராணுவம்.

இந்திய எல்லையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. பூஞ்ச் சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பது இந்திய அரசுக்கு உறுதிபடத் தெரியும். பாகிஸ்தான் ராணுவம்தான் இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டது என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினாலும், இந்த விவகாரத்தை மேலும்மேலும் பெரிதாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்தான், வெறும் கண்டிப்புடன் இந்திய அரசு முடித்துக்கொண்டிருக்கிறது.

இந்த ஆதாரங்களை வெளிப்படுத்தினாலோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்தியா பாகிஸ்தான் போர்ப்படை நோக்கர்கள் குழுவைக் கொண்டு, பாகிஸ்தான்தான் இந்தக் கொடுஞ்செயலைச் செய்தது என்று அம்பலப்படுத்தினாலோ, அதனால் மீண்டும் இந்தியாவில் சில நகரங்களில் குண்டுகள் வெடிப்பது நடக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் துண்டிக்கப்படும். இப்போது இந்தியாவுக்கு வந்து சென்றுகொண்டிருக்கும் பாகிஸ்தான் அமைச்சர்கள் வருகை முற்றிலுமாக நின்றுவிடும். அப்படி ஒரு சூழலுக்காகத்தான் தீவிரவாத அமைப்புகள் பிணந்தின்னிக் கழுகுகள்போல காத்திருக்கின்றன.

எல்லையில் சில வீரர்களை நாம் அநியாயமாக இழந்தபோதிலும் பெருநலன் கருதி, பொதுநன்மை கருதி அமைதி காக்க வேண்டியிருக்கிறது. பாகிஸ்தானுடன் நாம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வதைவிட, பகைத்துக்கொள்ளாமல் சும்மா இருப்பதே மேலானது.

சிறையில் உள்ள இந்தியக் கைதிகளை பாகிஸ்தான் விடுவிக்காது. எல்லையில் தாக்குதல் நடத்தினால் நாங்கள் நடத்தவில்லை என்று சொல்லும். அல்லது நிரூபித்தால், இந்திய ராணுவ வீரர்கள் தூண்டினார்கள் என்றும்கூடப் பழி சொல்லும்.

பாகிஸ்தானுக்கு இந்தியாவுடனான வர்த்தகம் ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு பல ஆயிரம் கோடி பணத்தைச் சும்மாவே கொட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. குறைந்த மக்கள்தொகையும் சிறிய பரப்பும் உள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தரும் டாலர்கள், அவர்களது பட்ஜெட்டில் பாதியைச் சரிக்கட்டும். போதாக்குறைக்கு உதவச் சீனா தயாராகவே இருக்கிறது.

நமக்கு அப்படியல்ல. பாகிஸ்தானுடன், ஒரு கார்கில் போர்போல மற்றொன்று நடந்தாலும் பேரிழப்பு நமக்குத்தான். வெற்றி பெறுவோம் என்றாலும், அதனால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவும், உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். நமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்று எல்லையில் எல்லைமீறும் பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், நாம் எல்லை மீற வேண்டும் என்று பாகிஸ்தானை வழிநடத்துகிற தீவிரவாதிகளின் எண்ணத்தை நிறைவேற்ற முற்படுகிறது.

அண்டை நாட்டை அகற்றியா நிறுத்த முடியும்? இல்லை நாம்தான் விலகிப் போக முடியுமா? சகித்துக் கொள்வதுதான் ஒரே வழி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com