தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் வரும்' என்று மத்திய தகவல் ஆணையம் கூறியுள்ளதால் மட்டுமே இந்திய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வந்துவிடாது. ஆனாலும் இந்த அறிவிப்பு நிச்சயமாக ஒரு கடிவாளமாக இருக்கும்.
அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இதற்கு மாறுபடும் கருத்தைச் சொல்லத் தொடங்கிவிட்டார். "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் நடைமுறைக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது அவசியம் என்று கருதுகிறேன். விரும்பியபடி செயல்பட அனுமதிக்க இயலாது' என்று அவர் கூறியுள்ள இந்த முரண்குரல், இனி காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்களால் மட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளின் இரண்டாம்நிலைத் தலைவர்களாலும் எதிரொலிக்கப்படும்.
"இந்த அரசியல் கட்சிகளுக்காக அரசின் பணம் செலவிடப்படுகிறது. இவற்றுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆகவே இவை பொதுநிறுவனங்களைப் போன்று மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளன" என்று மத்திய தகவல் ஆணையம் கூறியுள்ள கருத்து, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்போது, பாராட்டப்படும்போது, அரசியல் கட்சிகள் மட்டுமே ஏன் முணுமுணுக்கின்றன? தங்கள் குட்டு வெளிப்படுகிறதே என்கின்ற ஆற்றாமைதான் இதற்குக் காரணம்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா மட்டுமல்லாமல் தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என்கிற பாகுபாடே இல்லாமல் எல்லாப் பெரிய கட்சிகளுக்கும் பல தொழிலதிபர்கள் பல கோடி ரூபாய் நிதியளிக்கிறார்கள். இந்த விவரம் அந்த நிறுவனங்களால் ஆண்டு அறிக்கையில் பங்குதாரர்களுக்குக் கணக்கு காட்டப்படுகிறது. ஆனால் அந்தப் பணத்தைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டும் இது குறித்துப் பேச மறுக்கின்றன. அவர்கள் கொடுத்த தொகையின் அளவு தெரிந்தால், இதற்கு ஆதாயமாக அந்த நிறுவனங்கள் அடைந்த எதிர்பலன்கள் என்ன என்பதை மக்களும் எதிர்க்கட்சிகளும் கண்டறிந்துவிடுவார்கள் என்று அச்சம் கொள்கின்றன அரசியல் கட்சிகள்.
பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டிலிருந்து நன்கொடை வந்து சேர்கிறது. டௌ கெமிக்கல்ஸ், வேதாந்தா, மால்கோ என பல்வேறு நிறுவனங்களிலிருந்து வெளிப்படையாக வந்து சேரும் பணம் 25 விழுக்காடு மட்டுமே. ரூ.20,000-க்கு குறைவான நன்கொடை கொடுத்தவர்கள் விவரத்தை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், பெருவாரியான பணத்தைத் தொண்டர்கள் கொடுத்ததாக "பொய்க்கணக்கு' காட்டுகின்றனர்.
தேர்தல் நிதி என்ற பெயரில், மாவட்டந்தோறும் சில கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்ததாகக் கணக்கு காட்டப்படுகிறது. மாவட்டந்தோறும் தலைவருக்கு, அவரது வயது எண்ணிக்கைக்கு ஏற்ப தங்கக்காசு மாலை அணிவிப்பதும்கூட, தொண்டர்களின் பணம் அல்ல. இத்தகைய நிதியளிப்பு விழாக்கள் பெரும்பாலும் ஊழல் செய்து பயனடைந்தவர்கள் தலைவருக்கு நடத்தும் "காணிக்கை மேளா'. அல்லது அரசியல் கட்சிகள் தங்களுக்கு நன்கொடையாகக் கிடைக்கும் கருப்புப் பணத்தைக் கணக்கில் கொண்டுவரும் "வெள்ளை விழா'!
அண்மையில், ஒரு எதிர்க்கட்சி, இலக்கு நிர்ணயித்து தேர்தல் நிதி வசூலித்தபோது, அதற்கு எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பணம் கொடுத்தது மட்டுமல்லாமல், அதிகாரிகள் சிலரும் அவரவர் சக்திக்கும் சாமர்த்தியத்திற்கும் ஏற்ப நன்கொடை அளிப்பார்கள் என்றால், அவர்கள் அந்தக் கட்சியால் எந்த அளவுக்குப் பயன் அடைந்திருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
சில தொழிலதிபர்களும், கல்வியாளர்களும் தங்களுக்கென ஒரு கட்சியை வைத்துக்கொள்வது, அரசியலில் இறங்கவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ அல்ல. வருமானத்துக்கு மீறிய சொத்துகளுக்கான பாதுகாப்புப் பெட்டகமாக அரசியல் கட்சியைப் பயன்படுத்துகின்றனர். கட்சி நிதி என்கிற பெயரில் கருப்புப் பணத்தைக் கணக்குக் காட்ட, அறக்கட்டளைகளைவிட அரசியல் கட்சி வசதியாக இருப்பதுதான் காரணம்.
அரசியல் கட்சிகள், அரசுத் துறை நிறுவனங்களைப் போன்று மக்களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல என்று மத்திய அமைச்சர் நாராயண சாமி கூறுவது மேம்போக்கான பார்வைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் சற்று விரிவாகவும் ஆழமாகவும் சிந்தித்தால், எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் வரிப்பணத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றன. இவர்கள் கட்சிப்பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை அரசின் தணிக்கைக்கு உள்படுத்த மறுக்கிறார்கள். அப்படியானால் இவர்களுக்கு வருமான வரி விலக்கு ஏன்?
தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அவருக்காகத் தேர்தல் ஆணையம் செலவிடும் மக்கள் வரிப்பணம் மிகமிக அதிகம். இவர்கள் செலுத்தும் டெபாசிட் தொகைக்கும் அரசு செய்யும் செலவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உள்ளது. ஆகவேதான், தேர்தல் செலவுக் கணக்கை கேட்கவும், தவறான கணக்கைக் காட்டினால் தகுதிநீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.
இனிமேல் நன்கொடைகளை நேரடியாக வாங்க மாட்டார்கள். தேர்தலில் எந்தெந்தச் செலவை எந்தெந்த நிறுவனங்கள் ஏற்க வேண்டும், தங்கள் தொண்டருக்கு எவ்வளவு தொகை தர வேண்டும், வாக்காளருக்குப் பணம் தர எத்தனை வார்டுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நன்கொடை தருவோருக்கு அரசியல் கட்சிகள் பட்டியல் போட்டு பிரித்துக் கொடுக்கும். "பயனாளிகளுக்கு நேரடி மானியம்' திட்டம்போல!
அரசியல் கட்சிகளை மட்டுமல்ல, வரி விலக்கு பெறும் அனைத்து அறநிலை/ அறக்கட்டளை/ டிரஸ்ட்/ சொசைட்டி/ திருப்பணிக்குழு ஆகிய எல்லாவற்றின் கணக்குகளையும் தகவல்பெறும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். அதிலும் ஓட்டை கண்டுபிடிப்பார்கள். ஏமாற்றுவார்கள். ஏமாற்றப்படும். ஆனால், கடிவாளம் நிச்சயம் தேவை.
பூனைக்கு மணி கட்ட மத்தியத் தகவல் ஆணையம் முடிவெடுத்திருக்கிறது. நமது பாராட்டுகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.