எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் 16ஆவது மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்கிற நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அவசர கதியில் பல முடிவுகளை எடுக்கவும், அறிவிப்புகளைச் செய்யவும் முற்படுவது வியப்பளிக்கவில்லை. ஆட்சியாளர்கள் தங்களது பதவிக்காலம் முடியும் தருவாயில் அவசர அவசரமாகக் கோப்புகளில் கையெழுத்திடுவதும், தேர்தலை கருத்தில் கொண்டு சில அறிவிப்புகளையும், முடிவுகளையும் எடுப்பதும் புதிதொன்றுமில்லை. ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியிடப்படலாம் என்கிற நிலையில், அவசரச் சட்டத்தின் மூலம் மசோதாக்களை நிறைவேற்ற ஓர் அரசு முற்படுமேயானால் அது கண்டனத்துக்குரியது.
சில முக்கியமான கடைசிநேர முடிவுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தேர்தல் பிரசாரத்திற்கு மிகவும் உதவும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. புதிதாக 54 கேந்திரீய வித்யாலயாக்களைத் தொடங்குவது, தில்லி மாநகரத்தில் ஆறு வழிச் சுற்றுப்பாதை அமைப்பது, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்துவது, சுகாதாரம், சுற்றுலா, நீர் மேலாண்மை, மனிதவள மேம்பாடு, விவசாயம் போன்ற துறைகள் தொடர்பான பல புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது என்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக பல திட்டங்களும், கோரிக்கைகளும் காத்துக் கிடக்
கின்றன. இவைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்குவதில் யாருக்கும் எதிர்ப்பு இருக்க முடியாது.
பிரச்னை அதுவல்ல. ராகுல் காந்தியின் ஆதரவு பெற்ற மசோதாக்கள் என்று கருதப்படும் ஊழலுக்கு எதிரான சில மசோதாக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படாமல், 15ஆவது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் முடிவுக்கு வந்து விட்டது. ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் எதிரான இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஐந்தாண்டு அவப்பெயரை அகற்றிவிட முடியும் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
லஞ்சம் கொடுப்பது - பெறுவது தடுப்பு மசோதா, பொது விநியோக கொள்முதல் வெளிப்படைத்தன்மை மசோதா, நீதித்துறை பொறுப்புணர்வு மசோதா, குறித்த நேரத்தில் சேவை மற்றும் பொருள்கள் தொடர்பான மசோதா போன்ற மசோதாக்களை 15ஆவது மக்களவை நிறைவேற்றவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டுவிட்ட இந்த மசோதாக்களை தேர்தல் நெருங்கும் நேரம் வரை அரசு நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, இப்போது அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்ற முயலுமேயானால் அதைவிடப் பெரிய அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அவசரச் சட்டம் இயற்றி சில சட்டங்களைப் பிறப்பிப்பதும், ஆறு மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதும் புதியதொன்றுமல்ல. ஆனால், மக்களவைக் கூட்டத் தொடர் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த மக்க
ளவைத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரமும் வெளியிடப்படலாம் என்கிற நிலையில், அவசரச் சட்டத்தின் மூலம் மசோதாக்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க அரசு நினைப்பது தார்மிக ரீதியாக மட்டுமல்ல, அரசியல் சட்ட ரீதியாகவும் சரியல்ல.
இந்த மசோதாக்கள் அவசரச் சட்டம் மூலம் சட்டமாக்கப்பட்டால், ஆறு மாதத்திற்குள் அடுத்து அமைய இருக்கும் அரசால் 16ஆவது மக்களவையின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். அந்த அரசு ஒப்புதல் தராவிட்டால், ஊழலுக்கு எதிராக தாங்கள் கொண்டுவந்த சில நல்ல சட்டங்களை இவர்கள் நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்கள் என்று அரசியல் ஆதாயம் தேடலாம் என்கிற வக்கிரத்தின் விளைவுதான், மன்மோகன் சிங் அரசின் இந்த அவசரச் சட்ட முயற்சி.
இந்தச் சட்டத்தை முதலிலேயே கொண்டுவந்திருந்தால், அது தங்களது அரசுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்பதால் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது திடீர் ஞானோதயத்தால் அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்ற முற்பட்டிருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இந்தச் சட்டங்களை ராகுல் காந்தியின் ஊழலுக்கு எதிரான முனைப்பின் வெளிப்பாடாகக் காட்டி, கடந்த ஐந்தாண்டு கால "ஊழல் சாதனை'யை மூடிமறைக்க முற்படுகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
காங்கிரஸ் கட்சிக்கும், அரசுக்கும் இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதில் உண்மையாகவே அக்கறை இருக்குமேயானால், அடுத்த மக்களவையில் இந்த மசோதாக்களை கொண்டுவர வேண்டுமே தவிர, அவசரச் சட்டம் இயற்ற முற்படுவது அரசியல் மோசடியாகத்தான் இருக்கும். அதற்குக் குடியரசுத் தலைவர் துணை போக மாட்டார் என்று நம்புவோமாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.