அதிகரிக்கிறது எதிர்பார்ப்பு!

பதினாறாவது மக்களவையின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்துக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை, பதவி ஏற்றிருக்கும் நரேந்திர மோடி அரசின் செயல்திட்டங்களையும், அணுகுமுறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
Updated on
2 min read

பதினாறாவது மக்களவையின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்துக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை, பதவி ஏற்றிருக்கும் நரேந்திர மோடி அரசின் செயல்திட்டங்களையும், அணுகுமுறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தேசத்தின் உண்மையான பொருளாதார நிலையையும், அதை அரசு எப்படி எதிர்கொள்ள இருக்கிறது என்பதையும் அது தெளிவுபடுத்துகிறது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தொலைநோக்குப் பார்வையுடனும், தெளிவான செயல்திட்டங்களுடனும் ஓர் அரசின் அணுகுமுறை குடியரசுத் தலைவரின் உரை மூலம் வெளிப்பட்டது என்றுதான் கூறவேண்டும்.

ஏழை, பணக்காரர், இளைஞர்கள், முதியவர்கள், விவசாயிகள் தொழில் துறையினர், மாத ஊதியம் பெறுவோர், தகவல் தொழில்நுட்பத்தினர் என்று எல்லா தரப்பு மக்களின் பிரச்னைகளும் அரசின் கவனத்தை ஈர்த்திருப்பதை அந்த உரை தெளிவுபடுத்தியது. விவாதத்திற்கு வழிகோலும் விஷயங்கள் எதுவுமே தொடப்படாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் வளமான இந்தியாவை நோக்கி இந்த அரசு தேசத்தை இட்டுச் செல்லும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது உரை.

இந்தியாவில் பெருவாரியான மக்களின் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது உணவுப் பொருள்களின் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு. இதை உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற வெற்று கோஷங்களால் எதிர்கொள்ளாமல், பொது விநியோக முறையை சீரமைத்து வலுப்படுத்துவது, உணவு தானிய உற்பத்தியை அதிகரித்து, முறையான பாதுகாப்பும், வீணாகாமல் தடுப்பதற்கான முன்னேற்

பாடும் உறுதி செய்யப்படுவது ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்ள அரசு திட்டமிட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய அம்சம்.

தமிழகம், கேரளம் போன்று வெற்றிகரமாக பொது விநியோக முறையை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களைப் போல இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பொது விநியோக முறையை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் வலுப்படுத்தும் நரேந்திர மோடி அரசின் முயற்சி வெற்றி பெற்றால் உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படும். உணவு

தானியப் பொருள்களும், கெட்டுப் போகும் விளைபொருள்களும் காலதாமதமின்றி இந்தியாவின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் விவசாய ரயில் இணைப்புத் திட்டம் ஒன்றை முன்வைத்திருப்பது பாராட்டுக்குரிய அம்சம்.

"குறைந்தபட்ச அரசுத் தலையீடு, அதிகரித்த நிர்வாகச் செயல்பாடு' என்கிற புதிய அணுகுமுறையை அரசு முன்வைத்திருக்கிறது. இணையதளத்தின் மூலம் குடிமக்கள் அரசிடம் அனுமதி பெறும்

வசதியை அதிகரித்து, அனுமதி அளிப்பதற்கான காலக்கெடுவையும் நிர்ணயிப்பதன் மூலம், பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் காத்திருக்கத் தேவையில்லாத நிலைமையையும், லஞ்ச ஊழல் அற்ற

திறமையான நிர்வாகத்தையும் உறுதிப்படுத்த அரசு முனைப்புக்காட்டும் என்பது நல்லதொரு முயற்சி.

மாநில அரசுகளைத் தனது வளர்ச்சித் திட்டங்களில் உடனிணைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்று நரேந்திர மோடி அரசு கூறியிருப்பது இந்திய கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும். நடுவண் அரசு என்னதான் திட்டங்கள் தீட்டினாலும் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் அவை நிறைவேறாது என்பதை மாநில முதல்வராக இருந்த மோடி உணர்ந்து செயல்படுவதன் வெளிப்பாடுதான் இந்த "மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய அணி' என்கிற கண்ணோட்டம்.

முந்தைய மன்மோகன் சிங் அரசின் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடரப் போவதாகவும், வாஜ்பாயி அரசின் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் போல, வைர நாற்கர ரயில்வே திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாகவும் குடியரசுத் தலைவர் உரை தெரிவிக்கிறது. ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இருப்பதுபோல அதிவிரைவு ரயில்களைப் (புல்லட் ட்ரெயின்ஸ்), அந்த நாடுகளின் தொழில்நுட்ப உதவியுடன் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட இருப்பதாகத் தெரிவிக்கிறது உரை.

நல்ல பல வளர்ச்சித் திட்டங்களுடனும், செயல்திட்டங்களுடனும் நரேந்திர மோடி அரசு சுறுசுறுப்பாகக் களமிறங்கி இருப்பது ஆறுதலையும், எதிர்பார்ப்பையும் தருகிறது. கடந்த கால் நூற்றாண்டு காலக் கூட்டணி அரசுகள் போல, தனது தவறுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் கூட்டணிக் கட்சிகள் மீது பழி போட்டு பிரதமர் நரேந்திர மோடி தப்பித்துக் கொள்ள முடியாது. தனிப் பெரும்பான்மையுடன் அவரை அரியணையில் ஏற்றியிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்கிற பிரதமரின் பொறுப்புணர்ச்சி

குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதத்திற்கு அவர் ஆற்றிய நன்றி உரையில் வெளிப்படுகிறது.

நம்பிக்கைக்கு வித்திடுகிறது குடியரசுத் தலைவரின் உரை.

திட்டங்கள் செயல்பட்டால் இந்தியா ஒளிரும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com