இதுவரை எந்தவொரு நாடும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றதில்லை என்பதால், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் மங்கள்யான் விண்கலம் செலுத்தப்படும் நிகழ்வை உலகமே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை ஏவியதன் மூலம் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்காக நமது விஞ்ஞானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
செவ்வாய் கிரகத்தைச் சுற்றி இப்போது அமெரிக்காவின் மார்ஸ் ஒடிஸி, எம்.ஆர்.ஓ. விண்கலங்களும், ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலமும் சுற்றி வருகின்றன. அமெரிக்காவின் ஆப்பர்ச்சூனிட்டி, மேவன் ஆகிய ரோவர்கள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்து வருகின்றன. இவற்றோடு இப்போது மங்கள்யானும் ஆய்வில் இணைந்துள்ளது.
ஆறு மாதம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்து வளி மண்டலத்தில் மீத்தேன் வாயு, நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு, கனிம வளம் தொடர்பான ஆய்வுகளை மங்கள்யான் மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக 5 கருவிகள் மங்கள்யானில் அனுப்பப்பட்டுள்ளன.
மங்கள்யானின் வெற்றியைக் கொண்டாடும் அதேநேரத்தில், அதிலுள்ள அறிவியல் கருவிகளின் எடை மொத்தம் 15 கிலோ மட்டுமே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
"கிராவிட்டி' என்ற ஹாலிவுட் திரைப்படத்துக்கான பட்ஜெட்டை (ரூ.600 கோடி) விட, மங்கள்யான் திட்டத்துக்கான செலவு (ரூ.450 கோடி) குறைவு. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல மேற்பரப்பை ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய மேவன் விண்கலத்துக்கான செலவோ 4,083 கோடி ரூபாய்.
இரண்டு விண்கலங்களின் நோக்கங்களும் வெவ்வேறானவை என்றாலும், திட்டச் செலவில்தான் எவ்வளவு வித்தியாசம்? இந்த வெற்றி இந்திய செயற்கைக்கோள்களின் மதிப்பை பலமடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
செவ்வாய் கிரகத்தை நோக்கி அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த மங்கள்யான் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அதற்குரிய பாதையில் செலுத்துவது என்பது எளிதான காரியமல்ல. ஆனாலும், அதைத் திட்டமிட்டு மிக நேர்த்தியாக நமது விஞ்ஞானிகள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
22 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு அருகில் விண்கலம் செல்லும்போது, இங்கிருந்து அடையாளக் குறிகள் (சிக்னல்) சென்று சேர 12 நிமிடம் வரை தாமதம் ஆகும். செவ்வாய் கிரகத்தையொட்டிய பாதையில் பயணிப்பதற்கு முன்பாக, விண்கலம் செவ்வாய் கிரகத்துக்குப் பின்புறம் செல்லும் என்பதால், அப்போது அதைத் தொடர்பு கொள்ளவும் முடியாது.
இந்தப் பிரச்னைகளை எல்லாம் முன்கூட்டியே அனுமானித்து, அவற்றைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் விண்கலத்தில் அமைத்திருந்தனர். கட்டளைகள் இல்லாமல் தானாகவே இயங்கவும், கட்டளைகளை முன்கூட்டியே பதிவு செய்துவைக்கவும் விண்கலத்தில் சிறிய கணினி பொருத்தப்பட்டிருந்தது.
புதன்கிழமை காலையில் விண்கலத்தில் உள்ள திரவ இயந்திர அமைப்பு (என்ஜின்) இயங்குவதற்கான கட்டளைகள் 10 நாள்களுக்கு முன்பே அனுப்பப்பட்டன.
அதோடு, இதுவரை அறியப்படாத விண்வெளிப் பிரதேசத்தில் விண்கலம் பயணிக்கும்போது, வழிதவறிவிடாமல் இருப்பதற்காகத் தொலைதூர நட்சத்திரக் கூட்டங்களை அடையாளமாக வைத்து சரியான வழியை அறிந்துகொள்ளும் திட்டமும் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்தது.
இஸ்ரோவின் சாதனைக்குப் பின்னால் இவ்வளவு தெளிவான திட்டமிடல் இருந்திருக்கிறது என்பது வியக்க வைக்கிறது.
செயற்கைக்கோளைக் கட்டமைப்பதில் இந்தியாவின் நிபுணத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை அனுப்பும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு
களைச் செலுத்துவதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தொழில்நுட்பத்தில் நாம் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.
அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களைத் தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. தொழில்நுட்பத்தை நாம் கைக் கொண்டால்தான் வேற்றுக்கிரகங்களுக்கான விண்கலங்கள், தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள், நிலவுக்கு மனிதனை அனுப்புவது போன்றவற்றில் நாம் வெற்றி பெற முடியும். இதில் நமது விஞ்ஞானிகள் இன்னும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், இந்தியா விண்வெளித் துறையில் வல்லரசாக மாற முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

