மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் அங்கமாக இருந்தாலும்கூடத் தங்களை அன்னியராகவே கருதுவதற்குக் காரணம் இருக்கிறது. அந்த மாநிலங்களைப் பற்றிய புரிதல் இந்தியாவில் ஏனைய பகுதிகளுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களது உணர்வுகளை இந்தியாவின் மற்ற பகுதிகளில் வாழ்பவர்கள் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. அதனால்தான் "இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?' என்று அவர்கள் இன்னமும் கேட்கின்ற நிலைமை தொடர்கிறது.
÷கடந்த இரண்டு வாரங்களாக மணிப்பூர் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. வன்முறையும், சூறையாடலும் தொடர்கின்றன. அதுபற்றி இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு எதுவுமே தெரியாது. நமது ஊடகங்களிலும் அதுபற்றிய தகவல்கள் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்படுவதில்லை.
÷வருகையாளர்கள், வாடகைக்குக் குடியிருப்போர், பிழைப்புத் தேடி வேலைக்கு வரும் தொழிலாளர்கள் ஆகியோரை முறைப்படுத்தும் மசோதாதான் பிரச்னைக்கு அடிப்படை. இதன்மூலம், வெளிமாநிலங்களிலிருந்து மணிப்பூரில் பிழைப்புத் தேடியோ, தொழில் தொடங்கவோ வருகின்றவர்களை அடையாளம் கண்டு அனுமதி வழங்குவது என்பதுதான் இந்த மசோதாவின் நோக்கம். பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் இந்த மசோதாவைத் திரும்பப் பெற்று விட்டிருக்கிறார். தடை உத்தரவையும் தளர்த்தி இருக்கிறார். ஆனாலும்கூட, போராட்டம் முடிவுக்கு வருவதாக இல்லை.
÷இந்த மசோதாவுக்குப் பதிலாக, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்ததுபோல, நுழைவு அனுமதி முறையை (இன்னர்லைன் பர்மிட்) நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் கோரிக்கை. இரண்டு வாரங்களுக்கு முன்னால், போராட்டத்தைக் கலைப்பதற்காக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் விளைவாக பள்ளி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.
÷மணிப்பூர் உள்ளூர்வாசிகளைவிட, வெளி மாநிலங்களில் இருந்து வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடக் கூடும் என்கிற அச்சம்தான், அந்த மாநில மக்களை நுழைவு அனுமதி முறையைக் கோர வைத்திருக்கிறது. 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மணிப்பூரில் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிமாநிலங்களில் இருந்து குடியேறி இருக்கும் கூலித் தொழிலாளர்கள் என்பதுதான் இந்த அச்சத்தின் அடிப்படை. மணிப்பூரின் பெரும்பான்மை இனத்தவரான மெய்த்தீன் பிரிவினரும், அங்கு குடியேறியவர்களும் ஒரே அளவில் இருப்பது தெரிந்ததும், மணிப்பூரில் மண்ணின் மைந்தர்களை அச்சம் தொற்றிக் கொண்டது.
÷இதேபோன்ற நிலைமைதான் திரிபுராவில் ஏற்பட்டிருக்கிறது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளி மாநிலத்தவரை அனுமதித்ததன் விளைவாக இப்போது திரிபுராவில் பூர்வ குடிகளும், மண்ணின் மைந்தர்களும் அங்கே சிறுபான்மையினராகி விட்டிருக்கிறார்கள். அதே நிலைமை மணிப்பூருக்கும் விரைவிலேயே ஏற்பட்டுவிடக் கூடும் என்று போராட்டக்காரர்கள் பயப்படுகிறார்கள்.
÷பிரிட்டிஷ் காலத்து நுழைவு அனுமதி முறை அல்லது இன்னர்லைன் பர்மிட் முறையின் மூலம், மாநிலத்துக்குள் நுழையும் பிற மாநிலத்தவர்கள் மட்டுமல்ல, வெளி மாநிலங்களிலிருந்து பொருள்களும், ஏன் முதலீடும் கூடக் கொண்டு வருவது கட்டுப்படுத்தப்படும். இன்னர்லைன் பர்மிட் முறை இருந்த காரணத்தால்தான் மணிப்பூர் எந்தவிதப் பொருளாதார, கட்டமைப்பு வசதிகளும் இல்லாத மாநிலமாக இன்றுவரை தொடர்கிறது.
÷மணிப்பூர் இந்தியாவின் எல்லை மாநிலம் என்கிற நிலைமை விரைவிலேயே மாறுகிற சூழல் காணப்படுகிறது. தென் கிழக்கு ஆசியாவுக்கான நுழைவு வாயிலாக உருவாகும் வாய்ப்பு மணிப்பூருக்கு உண்டு. மேற்கிலும், கிழக்கிலும் உள்ள வளர்ச்சி பெற்ற பொருளாதாரங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட இருக்கும் தருணத்தில், தங்களது எல்லைகளை அன்னியர்களுக்கு அடைத்து வைப்பது என்பது புத்திசாலித்தனமல்ல என்பதை அவர்களுக்கு யாரும் உணர்த்துவதாகத் தெரியவில்லை.
÷மிக முக்கியமான வியாபாரத் தலமாக மாறி, பொருளாதார முன்னேற்றம் காண வேண்டுமானால், மணிப்பூர் தனது எல்லைகளை வெளி மாநிலத்தவர்க்குத் திறந்து விடத்தான் வேண்டும். மண்ணின் மைந்தர்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் பாதுகாத்துக் கொள்வதுடன், முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்வதுதான் மணிப்பூரை, வடகிழக்கு மாநிலங்களிலேயே மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றக் கூடும்.
÷மத்திய அரசின் அணுகுமுறையிலும் கணிசமான மாற்றம் தேவை. கடந்த 15 ஆண்டுகளாக இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மத்திய அரசால் முடிவு காண முடியவில்லை என்பது எத்தனை பெரிய இழுக்கு. ராணுவச் சிறப்பதிகாரச் சட்டம் 1958 திரும்பப் பெறப்பட வேண்டும் என்கிற அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாத வரையில், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகள் என்று நாம் எப்படி உலக அரங்கில் வாதிட முடியும்?
÷அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் "இன்னர்லைன் பர்மிட்' முறை தொடருகையில், மணிப்பூரில் மட்டும் அதை அனுமதிக்க மத்திய அரசு மறுக்கும்போது, இந்தியாவுக்கு எதிரான உணர்வு அவர்களுக்கு ஏற்படுவதில் வியப்பென்ன இருக்கிறது? மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றால் அங்கே நிலவும் பதற்ற நிலை உடனடியாகத் தணிக்கப்பட வேண்டும். இதே நிலைமை தமிழகத்திலோ, குஜராத்திலோ காணப்பட்டால் மத்திய அரசு வாளாவிருக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.