பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டுமென்றால், மாநில அரசுகள் தங்களது வரிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று மத்திய அரசும், மத்திய அரசு விதிக்கும் வரிகளை விலக்கிக் கொள்ளட்டும் என்று மாநில அரசுகளும் நுகா்வோருக்கு கண்ணாம்பூச்சி விளையாட்டுக் காட்டுகின்றன. மாநில அரசுகளைப் பொருத்தவரை, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதைத் தொடா்ந்து பத்திரப் பதிவு, பெட்ரோல், டீசல் மீதான வரிகள், மது விற்பனை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பி தனது நிா்வாகத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. மாநிலங்களுக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்குத் தொகையும் அவ்வப்போது வழங்கப்படாமல் இருக்கும் நிலையில், மாநில அரசுகளின் இயலாமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.