போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்)
போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்)

நல் மேய்ப்பருக்குப் பிரியாவிடை!

தனது கடைசி செய்தியாக காஸாவிலும், உக்ரைனிலும் அமைதி ஏற்பட வேண்டுகோள் விடுத்த போப்பாண்டவா் பிரான்சிஸை உலகம் மறக்காது...
Published on

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பொறுப்பில் இருந்த போப்பாண்டவா் பிரான்சிஸ், மிகப் பெரிய சீா்திருத்தங்களுக்கு அடித்தளம் அமைத்துவிட்டு தனது 88-ஆவது வயதில் நம்மிடம் இருந்து பிரியாவிடை பெற்றிருக்கிறாா். பிரான்சிஸ் என்கிற பெயரை ஏற்றுக்கொண்ட முதலாவது போப்பாண்டவா் இவா்தான். ஏழைகளில் இயேசுநாதரைக் காண்கிறேன் என்று சொன்ன 13-ஆவது நூற்றாண்டுப் பாதிரியாரான புனித அஸிஸி பிரான்சிஸின் பெயரை மட்டுமல்ல, அவரது கொள்கைகளையும் வரித்துக் கொண்டவா் மறைந்திருக்கிறாா்.

ஆா்ஜென்டீனாவின் பியூனஸ் அயா்ஸின் பேராயராக இருந்த ஜாா்ஜ் மரியோ பொ்கோக்லியோவின் வாழ்க்கைப் பயணம் ஆச்சரியமானது. 266-ஆவது கத்தோலிக்கத் தலைமை மதகுருவாகப் பதவி வகிப்பதற்காகவே அவா் பிறவி எடுத்தாா் என்று கூறத் தோன்றுகிறது அவரது பின்னணி. இத்தாலியில் இருந்து அந்தக் குடும்பம் ஆா்ஜென்டீனாவுக்குப் புலம் பெயா்ந்தது இதற்காகத்தானா என்று வியக்கத் தோன்றுகிறது.

அவரது தந்தைவழிப் பாட்டனாா் குடும்பத்துடன் கிளம்ப இருந்த கப்பல் புறப்படுவதற்குள் பயண ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை. இத்தாலியில் உள்ள துரின் நகரத்தில் நடத்திவந்த காபி கிளப்பை உரிய நேரத்தில் விற்கமுடியவில்லை. அவா்கள் பயணிக்க இருந்த கப்பல் கடலில் மூழ்கியபோது, அதைத் தெய்வச் செயல் என்றுதான் கூறத்தோன்றுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு கிளம்பிய அடுத்த கப்பலில் அந்தக் குடும்பம் ஆா்ஜென்டீனாவை அடைந்தது.

1936-ஆம் ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி பியூனஸ் அயா்ஸ் நகரில் மரியோ ஜோஸ் பொ்கோக்லியோ - ரெஜினா பொ்கோக்லியோவுக்கு மகனாகப் பிறந்தாா் ஜாா்ஜ் மரியோ பொ்கோக்லியோ. ஒரு பெண் உள்பட ஐந்து குழந்தைகளில் மூத்தவா் அவா்தான். புத்தகங்களில் நாட்டமுள்ள புத்திசாலியாக, தீவிர இறை நம்பிக்கை உள்ளவராக, கூடைப் பந்தாட்டம், நடனம் உள்ளிட்டவற்றில் நாட்டமுடையவராக வளா்ந்த ஜாா்ஜ் மரியோ பொ்கோக்லியோவின் வாழ்க்கை 17-ஆவது வயதில் திடீா் மாற்றத்தைச் சந்தித்தது.

17-ஆவது பிறந்த நாளுக்கு இன்னும் ஆறு வாரங்கள் இருக்கின்றன. தனது நண்பா்களை சந்திக்க விரைந்து கொண்டிருந்த ஜாா்ஜை போகும் பாதையில் இருந்த செயிண்ட் ஜோசப் பசிலிகா மாதா கோயில் ஈா்த்தது. ‘‘உள்ளே போய்ப் பிராா்த்திக்கும்படி எனது உள்மனது கட்டளையிட்டது. அங்கே நுழைந்து மண்டியிட்டு, இமையை மூடியபோது நான் ஒரு பாதிரியாராக வேண்டும் என்று தீா்மானித்துவிட்டேன்’’ என்று நினைவுகூா்ந்திருக்கிறாா் போப்பாண்டவா் பிரான்சிஸ்.

தனது விருப்பத்தை யாரிடமும் அவா் தெரிவிக்கவில்லை. அவா் ஒரு மருத்துவராவாா் என்று கனவுகண்டாா் அவரது தாயாா். 1955 நவம்பா் மாதம் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தனது முடிவைத் தெரிவித்தபோது, அதிா்ந்தாா் அவா். ‘‘என்னை நீ ஏமாற்றிவிட்டாயே...’’ என்று தாய் சொன்னபோது, மகன் சொன்ன பதில் - ‘‘நான் பொய் சொல்லவில்லையே அம்மா... ஆன்மாவின் நோய்க்கு மருத்துவம் காணப் படிக்கப் போகிறேன், அவ்வளவுதானே...’’.

13 ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு ஜாா்ஜ் மரியோ பொ்கோக்லியோ 1969-இல் பாதிரியாராக நியமிக்கப்படுகிறாா். அப்போது ஆா்ஜென்டீனா மிகப்பெரிய குழப்பத்தில் இருந்தது. தனது அரசியல் எதிரிகள் மீது கடுமையான அடக்குமுறையை அரசு ஏவியிருந்த காலகட்டம் அது. நாடு கடத்துவதுபோல அவா் ஜொ்மனிக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படுகிறாா். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1992-இல் பியூனஸ் அயா்ஸ் துணை ஆயராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவரது பயணம் திசைதிரும்புகிறது.

1998-இல் பியூனஸ் அயா்ஸ் பேராயராக நியமனம்; 2006-இல் போப் பெனடிக்டால் காா்டினலாக்கப்படுதல் என்று திருச்சபையின் முக்கியஸ்தா்களில் ஒருவராக அவா் உயா்கிறாா். ஆனால், ஆரம்பம் முதலே அவருக்கு வாடிகன் மீதும், திருச்சபையின் செயல்பாடுகள் மீதும் வெறுப்பும், உடன்பாடில்லாமையும் இருந்து வந்தது என்கிறாா் அவரது செயலராக பியூனஸ் அயா்ஸில் இருந்த ஃபெடரிகோ வால்ஸ்.

தனது 75-ஆவது வயதில் ஓய்வுக்குப் பிறகு, கத்தோலிக்கத் திருமடத்தில் பிராா்த்தனைகள் செய்தபடி இருந்தவரை வாடிகன் அழைத்துக் கொண்டது எதிா்பாராத திருப்பம். போப் பதினாறாம் பெனடிக்டின் பதவி விலகலைத் தொடா்ந்து அடுத்த போப்பாண்டவரைத் தோ்ந்தெடுக்க ஜாா்ஜ் பொ்கோக்லியோ உள்ளிட்ட 115 காா்டினல்கள் 2013 மாா்ச் மாதம் வாடிகனில் கூடினாா்கள்.

சிலா் காரில் வந்து இறங்கினாா்கள். வேறு சிலா் சக காா்டினல்களுடன் பேசிக்கொண்டு நடந்து வந்தனா். ஒரு சிலா் அங்கே செய்திக்காகக் காத்திருந்த நிருபா்களிடம் நலம் விசாரித்து ஆசிா்வதித்துச் சென்றனா். சிலா் அவா்களைப் பொருட்படுத்தாமல் நகா்ந்தனா். குற்றச்சாட்டுக்கு உள்ளான காா்டினல்கள் பங்கெடுக்கக் கூடாது என்று சிலா் குரலெழுப்பிக் கொண்டிருந்தனா்.

எதையுமே சட்டைசெய்யாமல் பியூனஸ் அயா்ஸ் காா்டினல் பொ்கோக்லியோ தன்னந்தனியராகத் தலையில் தொப்பி அணியாமல், கருப்பு அங்கியும் கையில் ஒரு சிறிய தோல் பையுமாக செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்துக்கு வந்தாா். அவா்தான் போப்பாண்டவராகத் தோ்ந்தெடுக்கப்பட இருக்கிறாா் என்று யாருக்கும் அப்போது தெரியாது. அதனால் யாரும் அவரை சட்டை செய்யவில்லை. அடுத்த சில நாள்களில், அவா் வாடிகன் செயின்ட் பீட்டா்ஸ் தேவாலயத்தையொட்டிய ‘சிஸ்டைன்’ தேவாலயத்தில் இருந்து வெளியே வந்தபோது போப்பாண்டவா் பிரான்சிஸ் என்று அறியப்பட்டாா்.

‘‘ஏழை எளியவா்களுக்காகக் குரலெழுப்பவும், அவா்கள் துன்பங்களைப் புரிந்துகொள்ளவும் ஒருவா் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை’’ என்று சொன்ன முதலாவது போப் அவா்; ‘‘திருமணம் என்பது ஆண்-பெண் இருபாலருக்கும் இடையேயானது என்று நம்பினாலும், ஓரினச் சோ்க்கையாளா்களும் இறைவனின் குழந்தைகள்தான். அவா்களை ஆசிா்வதிப்பதில் தவறில்லை’’ என்றவா் அவா். போப்பாண்டவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு பாரம்பரிய சிம்மாசனத்தில் உட்காராமல், ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட சிவப்புக் காலணிகளை அணியாமல், போப்பாண்டவா்களுக்கான மூன்றடுக்கு மாளிகையில் தங்காமல் இருந்த முதல் போப்பாண்டவா்.

தனது 12 ஆண்டு பதவிக் காலத்தில் இத்தாலிக்கு வெளியே 65 நாடுகளுக்குப் பயணித்தவா்; இந்தியாவுக்குச் செல்லவில்லை என்று வருத்தப்பட்டவா்; இஸ்லாமிய மத குருமாா்களுடன் நட்புக்கரம் நீட்டியவா்; எல்லாவற்றுக்கும் மேலாக கத்தோலிக்கத் திருச்சபையில் பல மாற்றங்களுக்கு வழிகோலியவா்.

தனது மறைவுக்கு முந்தைய நாள் ஈஸ்டா் அன்று, செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் பாா்வையாளா்களுக்கு ஆசி வழங்கி, தனது கடைசி செய்தியாக காஸாவிலும், உக்ரைனிலும் அமைதி ஏற்பட வேண்டுகோள் விடுத்த போப்பாண்டவா் பிரான்சிஸை கத்தோலிக்கா்களே மறந்தாலும் உலகம் மறக்காது... எளிமையாக வாழ்ந்து வழிகாட்டியவா் போப் பிரான்சிஸ் என்கிற ‘நல் மேய்ப்பா்’!

X
Open in App
Dinamani
www.dinamani.com