வெளிமாநிலங்களில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உதவித் தொகையுடன் உயர்கல்வி கற்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், சமீப காலமாக இந்த கல்வி நிறுவனங்களில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அகில இந்திய நுழைவுத் தேர்வுளை எழுதுவதற்கு தமிழக மாணவர்கள் ஊக்குவிக்கப்படாதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
வெளிமாநிலங்களில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து மணிப்பூர் ஐஐஐடி இயக்குநர் கிருஷ்ணன் பாஸ்கர் கூறியதாவது:
ஒரு காலத்தில் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் முன்னணியில் இருந்தார்கள். யுபிஎஸ்சி தேர்வில்கூட தமிழக மாணவர்கள் முன்னணி இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனர். ஆனால், தற்போது தேசிய நுழைவுத் தேர்வுகளை எழுத தமிழக மாணவர்களிடையே தயக்கம் இருந்து வருகிறது.
மணிப்பூர் ஐஐஐடியில் 18 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் அதிகம்பேர் ஆந்திரம், தெலங்கானா, பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தெலுங்கு பேசக்கூடிய மாணவர்கள் 200 பேர் படிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் இருந்து 11 பேர் மட்டுமே படிக்கிறார்கள். மணிப்பூர் ஐஐஐடியில் படிப்பவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. வேலைக்கு செல்கிறபோது ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது.
தரவரிசையில் முன்னணியில் இல்லாத கல்லூரிகள், வளாக நேர்காணல் இல்லாத கல்லூரிகளில் படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்கிறார்கள். நல்ல நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் வேலை கிடைக்கிறது. ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற விழிப்புணர்வு தமிழக மாணவர்களுக்கு தேவை.
நுழைவுத் தேர்வு சுமையல்ல: தமிழக மாணவர்கள் அறிவுத்திறன் மிக்கவர்கள். தமிழர்கள் பொறியியல், மருத்துவம், கணிதம், இயற்பியல் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர்கள். நுண்ணறிவில் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. ஆனால், நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பேசப்படுகிறது. உலகம் முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் படிக்கச் செல்பவர்கள் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றே செல்கிறார்கள். நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கிறது.அதனால் பணம் செலவில்லாமல் படிக்க முடிகிறது. வெளிநாடுகளில் சென்று படிக்க ஊக்குவிக்கும் அளவுக்கு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்துவதில்லை.
ஆகவே, பள்ளி படிப்பின்போதே மாணவர்களிடையே வெளிமாநிலங்களில் உள்ள கல்வி வாய்ப்புகள் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். மாணவர்களின் மனநிலையிலும் மாற்றம் வரவேண்டும்.
அகில இந்திய அளவில் பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் என்ஐடி, ஐஐஐடி போன்ற நிறுவனங்களில் சேர்ந்துவிடலாம்.
மத்திய கல்வி நிறுவனங்கள்: மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் 31 என்ஐடி, 23 ஐஐடி, 25 ஐஐஐடி, 56 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 171 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதோடு, பிணையம் இல்லாத கல்விக் கடனுக்கும் ஏற்பாடு செய்துதரப்படுகிறது. மாணவர்கள் படிக்கும் நிறுவனத்தின் சேர்க்கை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் கொடுத்தால்போதும் அவர்களுக்கு 100 சதவீத கல்விக்கடன் வழங்கப்படுகிறது. ஏழ்மையான நிலையில் உள்ளவர்களும்கூட தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தில் ஏராளமான படிப்புகள் உள்ளன. பேஷன் டெக்னாலஜி, வடிவமைப்பு பொறியியல் ( டிசைன் என்ஜினியரிங்), டிசைன் திங்கிங் படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில்தான் 70 சதவீதத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ளன. பிசினஸ் அனாலிட்டிக், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) படிப்புக்கு இப்போது பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. ஏஐ மூலம் அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த மருத்துவர் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இப்போது ஏதோ ஒரு குக்கிராமத்தில் உள்ள மருத்துவர் பயன்படுத்த முடியும்.
குவாண்டம் தொழில்நுட்பம், தரவுகள் பாதுகாப்பு (டேட்டா செக்கியூரிட்டி) தொடர்பான படிப்புகளுக்கு நல்ல வரவேற்புள்ளது. முன்பெல்லாம் ஆயுதம் மூலம் தாக்கப்பட்டது. இப்போது தொழில்நுட்பத்தின் மூலம் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தி ஸ்தம்பிக்க வைக்கிறார்கள்.
மணிப்பூர் ஐஐஐடியில் இந்த ஆண்டு முதல் கணினி அறிவியல் மற்றும் குவாண்டம் தொழில்நுட்ப பாடப்பிரிவை தொடங்க உள்ளோம். மெக்கானிக்கல், வரலாறு படிப்பவர்களும்கூட கணினி அறிவியலை படிப்பது அவசியமாகும்.
மத்திய பல்கலைக்கழகங்களில்தான், சமீபத்திய தொழில்நுட்பங்கள் தொடர்பான படிப்புகள் உடனுக்குடன் தொடங்கப்படுகிறது. எனவே, வெளிமாநிலங்களில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் பயன்படுத்தும்பட்சத்தில் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
மொழியறிவு அவசியம்
ஒரு மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும்கூட மொழியின் மூலம் மட்டுமே தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். எனவே, தமிழக மாணவர்கள் உலக அளவில் போட்டி போட தாய்மொழியோடு ஆங்கிலப் புலமையும் பெறுவது அவசியம். அதேநேரத்தில் தேசிய அளவில் போட்டி போடுவதற்கு தமிழ், ஆங்கிலம் தவிர்த்து ஹிந்தி மொழியிலும் புலமை பெற்றிருக்க வேண்டும் என்றார்.
Summary
Higher education opportunities in other states! Why is the number of Tamils declining?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








