/

ரூ. 4 கோடி விவகாரம்: நயினார் நாகேந்திரன் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு!

தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக கோரி நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

News image
நயினார் நாகேந்திரன்
Updated On :15 ஏப்ரல் 2024, 7:06 am

DIN

சென்னை - நெல்லை விரைவு ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித் துறையினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த வாரம் 6ம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னை - நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், பயணித்த மூவர், 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது.

விசாரணையில் பிடிபட்டவர்கள், புரசைவாக்கம் தனியார் விடுதியில் பணியாற்றும் பா.ஜ.க உறுப்பினர் சதீஷ், சகோதரர் நவீன், ஓட்டுநர் பெருமாள் என்பது தெரியவந்தது.

காவல்துறையினரின் விசாரணையில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக தான் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காவல்துறையினர் வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், நயினார் நாகேந்திரனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப் பதிவுக்கு பிறகு ஏப்ரல் 22-ஆம் தேதி விசாரணைக்காக தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.