பிள்ளைகள் நன்றாகத் தூங்கவில்லையா? நரம்பியல் பிரச்னைகள் ஏற்படும் ஆபத்து!

தூக்கமின்மையால் சிறார்களுக்கு நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றன.
examStudents
examStudents
Published on
Updated on
1 min read

சிறார்களுக்கு தூக்கமின்மையால் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. அதற்காக மருத்துவ ஆலோசனையை நாடும் நிலையும் ஏற்படுகிறது.

இரவில் போதிய தூக்கமின்மை காரணமாக, பகலில் எப்போதும் தூங்கி வழிந்துகொண்டிருப்பதால், சிறார்களின் கல்வியும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கிறார்கள்.

அண்மைக்காலங்களில் சிறார்களுக்கு தூக்கமின்மை பிரச்னை அதிகரித்திருப்பதாகவும் அதன் தொடர்ச்சியாக உடல்நலப் பாதிப்புகளும் அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சராசரியாக 14 - 17 வயதுடைய சிறார்கள், குறைந்தபட்சம்ட 8 - 10 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும். ஆனால், பள்ளிப் பாடங்களின் அழுத்தம் அல்லது சமூக ஊடக செயல்பாடுகளில் ஆர்வம் அல்லது செல்போன் கேம்களுக்கு அடிமையாகி, அவர்கள் தங்களது தூக்கத்தைத் தொலைத்துவிடுகிறார்கள்.

examStudents
இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு ஏன்?

கரோனா பேரிடர் நிகழ்த்திச் சென்ற பல்வேறு கொடுந்துயரங்களில், சிறார்களின் வாழ்முறையையே புரட்டிப்போட்டிருப்பதுதான் மிகக் கொடூரமானது. ஏனெனில், நாட்டின் எதிர்காலமான இளம் தலைமுறையினருக்கு செல்ஃபோன் அடிக்ஷன் போன்ற தவறான பழக்க வழக்கங்களால், வெளியில் சென்று விளையாடுவது குறைந்து அவர்களுக்கு தற்போது வாழ்வே இருண்டுபோயிருக்கிறது.

அதன் காரணமாக தூக்கமின்மை ஏற்பட்டு அவர்களது நடத்தையும் மாறுகிறது. சிறார்களின் மனநிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம், எரிச்சல் போன்றவை ஏற்படும். இதனால் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் எப்போதும் மோதல், மன அழுத்தம் போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள்.

பாடம் படிக்கும்போதும் தேர்வுகளிலும் சின்ன சின்ன தவறுகளை செய்து, பாடத்திலும் கோட்டைவிடுகிறார்கள். மேலும், சமூகத்துடன் இணைந்துவாழவும் இயலாமல் போகிறது.

அண்மையில் இது தொடர்பாக வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையிலும் கூட, தூக்கத்தின் அவசியம் மற்றும் தூக்கமின்மையின் அபாயங்கள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. பெரியவர்கள் கட்டாயம் குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி, ஒரே குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு.

உறங்கும் வரை செல்போனை பார்த்துக்கொண்டேயிருப்பதும், தொலைக்காட்சியைப் பார்ப்பதும் தூக்கத்தை நேரடியாக பாதிக்கிறதாம். அப்படி தூக்கமின்மை என்னதான் செய்துவிடும் என்று கேட்பவர்களுக்கு இடிபோல இறங்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதுதான், தூக்கமின்மை நரம்பியல் பிரச்னைகளுக்கு காரணமாகிறது என்ற தகவல்.

அது மட்டுமா? தூக்கமின்மை காரணமாக ஏற்படும் நரம்பியல் பிரச்னைகள் மூளையை பாதிக்கும். அதனால் ஏற்படும் உணர்வுப்பூர்வ சிக்கல்கள், சிலரை தற்கொலைக்கு தூண்டுவது வரை கொண்டுசெல்கிறதாம். எனவே, பிள்ளைகள் ஏதோ ஒரு காரணத்தால் உறங்காமல் இருந்தால், அவர்களை உடனடியாக நல்வழிப்படுத்துங்கள். குறைந்தபட்ச உறக்கத்தை உறுதிசெய்துகொள்ளுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவர் உதவியை நாடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com