உங்களுக்கே தெரியாமல் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுதா? ஆஸ்டியோபோராஸிஸ் நோயாக இருக்கலாம்!

உலக சுகாதார நிறுவனம் அக்டாபர் 20-ம் தேதியை உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினமாக அறிவித்துள்ள நிலையில்
உங்களுக்கே தெரியாமல் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுதா? ஆஸ்டியோபோராஸிஸ் நோயாக இருக்கலாம்!

உலக சுகாதார நிறுவனம் அக்டாபர் 20-ம் தேதியை உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினமாக அறிவித்துள்ள நிலையில் இன்று உலகம் முழுவதும் உலக எலும்புப்புரை தினம்  கடைபிடிக்கப் படுகிறது.  மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லி நோய் ‘எலும்பரிப்பு நோய்’ எனப்படும் ஆஸ்டியோபோராசிஸ் நோயாகும்.  நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 50 சதவீதம் பெண்கள், இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுகின்றவர் வரிசையில் உள்ளனர். 

எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியாவதில்லை. எலும்புப்புரை நோயை கண்டறிதல், தடுத்தல், சிகிச்சையளித்தல் ஆகியவற்றிற்காக இந்நாள் அர்ப்பணிக்கப் படுகிறது.  தங்கள் எலும்புகளையும் தசைகளையும் பாதுகாக்க மக்களையும், தங்கள் சமுதாய மக்களின் எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார அதிகாரிகளையும் மருத்துவர்களையும் ஊக்கப்படுத்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது

தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன். விழக்கூட இல்ல, லேசா சாஞ்சுட்டேன். பாம் தேய்ச்சுட்டுப் படுத்துடலாம்னு பார்த்தா, வலி தாங்க முடியல. ஹாஸ்பிடல் போனா, ‘கால் எலும்பு உடைஞ்சுடுச்சு’னு சொன்னாங்க. ‘சும்மா ஸ்லிப் ஆகி விழுந்ததுக்கு எலும்பு உடைஞ்சுருச்சா?’னு அதிர்ச்சியா கேட்டா, ‘கீழ விழக்கூட வேணாம்… தும்மும் போது கூட எலும்பு முறிஞ்சுடலாமாம் ஆஸ்டியோபோரோசிஸ் வந்தவங்களுக்கு.

பொதுவாக, ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும். எலும்புத் திசுக்கள் சிதைடைவது எலும்புப்புரை நோயின் இயல்பு. எலும்புகள் உடையும் தன்மையும் பலவீனமும் அடையும்.  இது முதுகெலும்பு, இடுப்பெலும்பு, மணிக்கட்டு ஆகிய எலும்புகள் முறிவடையும் நிலை ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேல் ஆண்களை விட பெண்களுக்கு எலும்புப்புரை நோய் உண்டாகும் ஆபத்து அதிகம். இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவை ஏற்படுத்துவதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும். இந்நோயில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதனால், இது குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கலாம்.

எலும்புகள்  அரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும் போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளை விட எலும்பு அரிப்பு’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்பு திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.  இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப் படுகின்றனர். ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.

உடலில் வைட்டமின் டி நார்மல் லெவல் 30-க்கு மேல் இருக்க வேண்டும். இதில் குறைபாடு ஏற்படும்போது, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் உண்டாகிறது. 30 வயதுக்கு மேல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். 40 வயதுக்கு மேல் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாட்டால் சிலருக்கு எலும்புத் தேய்மானம் தீவிரமடைந்து, எலும்பு மிகவும் பலவீனமாகி, சிறு அடி பட்டாலும், ஏன்… உட்கார்ந்து எழும்போது கூட நொறுங்கி விடக் கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். இது தண்டுவடத்தைத்தான் அதிகமாக பாதிக்கும். அடுத்ததாக, இரண்டு இடுப்பு மூட்டுகளும் இதன் இலக்கு. சோர்வு, களைப்பு, சதை வலி ஏற்படுத்தும், எலும்பு வலிகளைத் தரும் இந்நோயை ‘சைலன்ட் கில்லர்’ என்று அழைப்பதுண்டு. அந்தளவுக்கு, நாம் அறியாமலேயே நம்மைத் தாக்கும்.

‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் எலும்பு நுண்துளை நோய்தான், இன்று 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகமாகத் தாக்கி, நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது. ஆண்களைவிட, பெண்களையே அதிகமாக இந்நோய் குறிவைத்து தாக்குவதேன்; இதன் விளைவுகள் என்ன; நோயை எப்படிக் கண்டறியலாம்; சிகிச்சை முறைகள் எப்படி; இதை சரிப்படுத்தும் உணவுமுறை, உடற்பயிற்சிகள் என்னென்ன. மேலும் ஜாதக ரீதியாக இந்த நோய் வருவதற்கான கிரக நிலை என்ன என்பதையும் பார்ப்போம்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன? பெண்களுக்கு ஏன் அதிக பாதிப்பு?

பெண்களைப் பொறுத்தவரை, எலும்புகளின் உறுதிக்கு அவர்களின் பாலின ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் பங்கு இன்றியமையாதது. ஆனால், 40 வயதுக்கு மேல் அல்லது மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் போதும், அந்த நிலையை அடையும் போதும் இந்த ஹார்மோன் சுரப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்து, பிறகு நின்றுவிடும். இதனால், எலும்புக்கான சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே, அவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எளிதில் இலக்காகிறார்கள். இது முதன்மைக் காரணம். இதே போலவே மெனோபாஸ் கட்டத்துக்கு முன்பாகவே அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர்களுக்கும் இந்த ஹார்மோன் சுரப்பு நிற்பதால், அவர்களுக்கும் எலும்புத் தேய்மானம் ஏற்படலாம்.

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக் கூடிய வைட்டமின்-டி, வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஆண்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும். ஆனால், வீட்டுக்குள்ளே முடங்கும் பெண்களுக்கு அந்த அளவுக்குக் கிடைப்பதில்லை. அதனாலும் இந்த நோய் வரலாம். குழந்தைக்குப் பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு கால்சியம் சத்து இருமடங்காகத் தேவைப்படும். இதை ஈடுகட்டும் அளவுக்கு கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால், கால்சிய குறைபாடும் ஏற்படும். இப்படி கால்சியம் சத்துக் குறைவதற்கான சூழ்நிலைகள், ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இருப்பதால், அவர்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது. அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

காப்பாற்றும் காலை வெயில்:

குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரை பெண்கள் உடற்பயிற்சி செய்வதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வைட்டமின்-டி சத்துள்ள உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக  தினமும் அதிகாலை 15 நிமிடங்கள் வெயிலில் இருப்பது நல்லது. 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்றால், இந்த சத்துக்கான மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். மது மற்றும் புகைப்பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். எலும்பின் திறத்தன்மையை அறிந்து கொள்ளும் பரிசோதனையை மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு தடவை செய்து கொள்ள வேண்டும்” 

உணவே மருந்து:

கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானது என்று அனைவரும் அறிவார்கள். ஆனால், இதய துடிப்புக்கும், தசை வலுவுக்கும், ரத்தக் கொதிப்பு சீராக இருக்கவும், ரத்த நாளங்களில் புண் ஏற்படாமல் தடுக்கவும் கால்சியம் தேவை என்பது பலரும் அறியாதது. பெண்களுக்கு மாதவிடாய் துவக்கம் முதல், முடியும் வரை கூடுதல் தேவையுள்ள மிக முக்கிய உணவுக் கூறு, கால்சியம். தைராய்டு குறைவு இருந்தாலோ, பாரா தைராய்டு இருந்தாலோ, கால்சியக் குறைவும், அதைத் தொடரும் முதுகு மற்றும் மூட்டு வலிகளும் வரலாம்.

பொதுவாக நாற்பது வயதிற்கு மேல்தான் முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என் சொல்வார்கள். நாம் அனைவரும் அறிந்தது போலே எலும்புக்கு வலு சேர்ப்பது கால்சியம் என்னும் தாதுச்சத்து தான். உடலில் கால்சியம் அளவு குறையும் போது, எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் ஏற்படும். கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும் என்று பெரும்பாலான மக்கள் அறிவர். 

உணவில் பனீர் சேர்க்கை:

பனீரில் செய்த உணவு வகைகளில் கால்சியம், மெக்னீஷியம், ப்ளோரைட், பொட்டாஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்து நிறைந்து இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் பலமாகவும் உதவுவதாக அறிவியல் செய்திகள் கூறுகின்றன. காலுஷியம் எனும் சுண்ணாம்பு சத்தோடு மெக்னீஷியம், பொட்டாஷியம் ப்ளோரைட் போன்றவை சரி விகிதத்தில் இருந்தால்தான் உறுதியான எலும்புகள் அமையும் என்பது கூடுதலு தகவலாகும்.

தாம்பூலம் எனும் வெற்றிலை பாக்கு:

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் எலும்புகளையும்  வலுப்படுத்துகிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இப்போது வயதானவர்களுக்கு இருக்கக் கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510
Email: astrosundararajan@gmail.com
Web: www.astrosundararajan.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com