ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

100 ஆண்டுகள் வாழ விருப்பமா? 8 எளிய கட்டளைகள்

யாருக்குத்தான் நீண்ட காலம் வாழ ஆசை இருக்காது?

News image
Updated On :23 டிசம்பர் 2019, 7:42 am

தினமணி

யாருக்குத்தான் நீண்ட காலம் வாழ ஆசை இருக்காது? நீண்ட காலம் வாழ்வதற்கான நேரடியான சூட்சுமத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், மக்கள் முந்தைய காலத்தை விட தற்போது நீண்ட காலம் வாழ்கின்றனர். பலர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். நீண்ட ஆயுளையும், சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் பெறுவதற்கான வழி, உங்களை உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் நன்றாக கவனித்துக் கொள்வதுதான். உங்கள் நல்வாழ்வைப் பாதுகாக்க கற்றுக் கொண்டால், உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். அதுவே உங்களை நீண்ட காலம் வாழ்வதற்கும் வழி வகுக்கும்.ஆரோக்கியமாக இருக்க மிக மிக எளிமையான விஷயங்களை கடைப்பிடித்தால் போதும். உடல் மனம் மற்றும் புத்தி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், அதற்கேற்ப ஆயுசும் கூடும். 

  1. அதிகாலையில் எழுந்திருங்கள். மூச்சுப் பயிற்சி அல்லது தியானம் செய்வது நலம். இல்லையெனில் யோகா அல்லது உடற்பயிற்சி செய்யலாம். ஒன்றுமே செய்ய இயலவில்லையென்றாலும் காலாற சிறிது தூரம் தினமும் நடப்பது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் அளிக்கும். 
  2. பசிக்கும்போது மட்டும் மிதமாக சாப்பிட வேண்டும். வயிறு நிறைய சாப்பிடக் கூடாது. போதுமான அளவு உட்கொள்ளுதல் நலம்.
  3. தண்ணீர் அல்லது நீச்சத்து அதிகமுள்ள காய்கறி மற்றும் பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். நச்சுத்தன்மை உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
  4. இரவு 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். முடியவில்லையென்றால் பால் மற்றும் பழம் சாப்பிட்டு இரவு உணவை முடித்துக் கொள்ளலாம். புகைப் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருந்தால் விட்டுவிடுவது நல்லது. ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் மருத்துவரை சந்தித்து உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 
  5. இரவு நேரம் மசாலா பொருட்களால் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது, குறிப்பாக மாமிசம் சாப்பிடவே கூடாது. அது செரிமானம் ஆகாமல் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
  6. இரவு ஒரே நேரத்தில் படுத்து காலை ஒரே நேரத்தில் விழித்தல் அவசியம். அதாவது தினமும் 10 மணிக்கு தூங்கி காலை 5 மணிக்கு எழுந்தால், அதே நேர வரையறையை கடைப்பிடிப்பது நல்லது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு நல்ல உறக்கம் தேவை. 
  7. காலை ஏழுந்தவுடன் கொஞ்சம் வெந்நீரில் சீரகம் போட்டு குடித்தால் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.
  8. என்றாவது ஒரு நாள், ஒரு வேளை இரவு உணவு உட்கொள்ளாமல் உறங்கி எழுந்தால், அது விரதம் இருப்பதற்கு ஒப்பாகும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.  மாதம் ஒரு முறை நாள் முழுவதும் விரதம் இருப்பதும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.