உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ரயில்வே திட்டங்கள் அமல்படுத்தப்படாதது பற்றி மக்களவையில் எம்.பிக்.கள் புகார்

ரயில்வே திட்டங்கள் அமல்படுத்தப்படாதது குறித்து நாடாளுமன்றத்தில் பல்வேறு எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர்.

Updated On :11 மார்ச் 2013, 7:26 pm

ரயில்வே திட்டங்கள் அமல்படுத்தப்படாதது குறித்து நாடாளுமன்றத்தில் பல்வேறு எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர்.

மக்களவை திங்கள்கிழமை காலையில் கூடியதும், வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவைத் தலைவர் மீரா குமார் கூறுகையில், ""மிகவும் மக்களிடையே பிரபலமான தலைவரான சாவேஸ், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். நமக்கு வெனிசூலாவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. சாவேஸின் தலைமையின் கீழ் இரு நாடுகளிடையிலான உறவு மேலும் வலுப்பட்டது'' என்று தெரிவித்தார். சாவேஸýக்கு எம்.பி.க்கள் சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

ரயில்வே திட்டங்கள்: ÷இதையடுத்து, ரயில்வே பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடங்கியது. இதில் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்றுப் பேசினார். கிழக்கு-மேற்கு ரயில் சரக்குப் போக்குவரத்து இணைப்புத் திட்டம் தாம் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து 2009இல் விலகிய பிறகு கிடப்பில் போடப்பட்டதாக அவர் குறை கூறினார். ""ரயில்வேத் துறை வருவாய் ஈட்ட பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்குப் பதிலாக சரக்குக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. ரயில் கட்டண ஆணையம் அமைக்கப்படுவதை எதிர்ப்போம். ஏனெனில், ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் சதி இது'' என்று லாலு பிரசாத் குறிப்பிட்டார்.

சமாஜவாதிக் கட்சி எம்.பி. ரேவதி ரமண் சிங் பேசுகையில், அரசு சரக்குக் கட்டணங்களை உயர்த்த வேண்டும். புதிய திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக, நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை முடிக்க அரசு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இவ்விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பல்வேறு எம்.பி.க்களும், ""அடுத்தடுத்து வந்த ரயில்வே அமைச்சர்கள் பல திட்டங்களை அறிவிக்கின்றனர். ஆனால் அவை வருடக்கணக்கில் அமல்படுத்தப்படுவதில்லை'' என்று புகார் தெரிவித்தனர்.

வேளாண் விளைபொருள் ஏற்றுமதி: மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய வர்த்தகம் மந்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், ""வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதியில் வீழ்ச்சி காணப்படுகிறது. இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின்படி, பதப்படுத்தப்பட்ட வேளாண் விளைபொருள்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்துறைக்கு அரசு 5 சதவீத ஏற்றுமதி ஊக்கத்தொகை அளித்து வருகிறது. வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதியை அதிகரிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இத்துறையில் இந்தியா இப்போது இரண்டாமிடம் வகிக்கிறது. எனினும், வேளாண் விளைபொருள்களில் 35 சதவீதம் வீணாகி விடுகிறது. அன்னிய நேரடி முதலீடு வரும்போது, வேளாண் விளைபொருள்கள் கெடாமல் பாதுகாக்க வெளிநாட்டு நிறுவனங்கள் நிறைய குளிர்பதனக் கிடங்குகளையும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் திறக்கும்'' என்றார்.

கண்ணிவெடிகளைப் புதைக்கும் பாகிஸ்தான் : பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, மக்களவையில் எழுத்துமூலம் அளித்த ஒரு பதிலில், "இந்திய ராணுவ வீரர்களைக் கொல்வதற்காக பாகிஸ்தான் நமது பகுதியில் கண்ணிவெடிகளைப் புதைத்து வருவதை உளவுத்தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன. 2012 நவம்பர் 24-26ஆம் தேதிகளில் ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாட்டி பகுதியில் பாகிஸ்தான் சக்திகள் கண்ணிவெடிகளைப் புதைத்திருந்தது கண்டறியப்பட்டது' என்று தெரிவித்தார்.

அவர் அளித்த மற்றொரு பதிலில், "கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய விமானப் படையின் 29 போர் விமானங்கள் விபத்துகளில் சிக்கி நொறுங்கிவிட்டன. இவ்வாறு 12 மிக்-21 ரக விமானங்கள், எட்டு மிக்-27 ரக விமானங்கள், நான்கு சு-30எம்.கே. ரக விமானங்கள், 2 ஜாகுவார் விமானங்கள் மற்றும் 2 மிராஜ்-200 ரக விமானங்கள் மற்றும் ஒரு மிக் 29 விமானம் ஆகியவற்றை விமானப்படை இழந்துள்ளது. இந்த விபத்துகளில் 6 பைலட்களும், 6 பொதுமக்களும் உயிரிழந்தனர்' என்று குறிப்பிட்டார்.

ஏ.கே.அந்தோனி எழுத்துமூலம் அளித்த இன்னொரு பதிலில், ""அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கு இந்தியா ரூ.78,000 கோடிக்கும் அதிகமாகச் செலவழித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒட்டுமொத்தமாக 339 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்' என்று தெரிவித்தார்.

பாலியல் துன்புறுத்தல் மசோதா: பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தடுக்கும் மசோதாவில் சிறிய திருத்தங்களைச் செய்ய மக்களவை அனுமதித்தது. முன்னதாக, மக்களவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் மாநிலங்களவையில் கடந்த பிப்ரவரி மாதமும் இந்த மசோதா நிறைவேறியது. இதில் இந்தியக் குடியரசின் 63ஆவது ஆண்டு என்பதற்குப் பதில் 64ஆவது ஆண்டு என்ற திருத்தத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத், மக்களவையில் திங்கள்கிழமை கொண்டுவந்தார். இதற்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் தரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.