தில்லியில் 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதால் கோபமடைந்த சீக்கியர்கள் தில்லியில் புதன்கிழமை சாலை மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதனால், திலக் நகர், சுபாஷ் நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
திலக் நகர் காவல் நிலையப் பகுதியில் இருந்து சீக்கியர்கள் ஊர்வலமாக கோஷமிட்டுச் சென்றனர்.
"நீதி வேண்டும்; கயவர்களைத் தூக்கிலிட வேண்டும்' என்று வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் முழக்கமிட்டனர்.
திலக் நகர், சுபாஷ் நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதியிலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தில்லி மெட்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆர்ப்பாட்டம் காரணமாக, நொய்டா சிட்டி சென்டர்-துவாரகா லைன் மெட்ரோ வழித்தடத்தில் மேற்கு தில்லியில் திலக் நகர், சுபாஷ் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில் மூடப்பட்டது.
பிற்பகல் சுமார் 12.45 மணியளவில், ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் ரயில் பாதையில் குதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் காரணமாக ரயிலை 10 நிமிடங்கள் நிறுத்த வேண்டியதாயிற்று என்றார் அவர். மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுவரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்.) செய்தித் தொடர்பாளர் ஹேமேந்திர சிங் கூறுகையில், "சுமார் 60 ஆர்ப்பாட்டக்காரர்கள் சுபாஷ் நகர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










