/

"மத்திய அரசு எதிர்க்க வேண்டும்'

அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் இந்தியக் குடிமக்களைக் கண்காணிப்பதை மத்திய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :12 ஜூன் 2013, 12:34 am IST

அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் இந்தியக் குடிமக்களைக் கண்காணிப்பதை மத்திய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியர்களின் இணையதளங்களில் இருந்து அமெரிக்கா தகவல்களைத் திருடுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்தன. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் நடவடிக்கை, இந்தியக் குடிமக்களின் உரிமைகளை மீறிய செயலாகும். இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு உடனடியாக எதிர்ப்புத தெரிவிக்க வேண்டும். மேலும், இணைய தள நிர்வாக நடைமுறைகளை மாற்றவும், மற்ற நாடுகளின் இறையாண்மையையும் அவற்றின் குடிமக்களின் உரிமைகளையும் அமெரிக்க உளவு அமைப்புகள் மீறாமல் இருப்பதை உறுதிசெய்யவும் உடனடியாக முன்முயற்சி எடுக்கப்பட இந்தியா வலியுறுத்த வேண்டும்.

மைக்ரோசாஃப்ட், கூகுள், யாஹூ, ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களின் உதவியோடு அமெரிக்கா உளவுத்தகவல் சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமின்றி, உலகெங்கும் இந்நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்தும் மக்களுக்கு இவற்றைப் பொறுப்புடையதாக்கவும் மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்ற வேண்டும். இப்படிப்பட்ட உளவுத்தகவல் சேகரிப்பின் முக்கிய இலக்காக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனா, ரஷியா ஆகிய நாடுகளை விட அமெரிக்காவின் கண்காணிப்புப் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. எனவே மத்திய அரசு இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.