திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

தமிழக தடகள வீராங்கனை சாந்தியின் பட்டயப் படிப்புக்கு மத்திய அரசு உதவி

தமிழக தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜனுக்கு பட்டயப் படிப்பு படிப்பதற்காக, தேசிய விளையாட்டு வீரர்கள் நல நிதியில் இருந்து ரூ. 60,500 வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Updated On :12 ஜூலை 2013, 12:03 am

தமிழக தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜனுக்கு பட்டயப் படிப்பு படிப்பதற்காக, தேசிய விளையாட்டு வீரர்கள் நல நிதியில் இருந்து ரூ. 60,500 வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை கூறியது:

கத்தார் நாட்டில் உள்ள தோஹாவில் 2006-இல் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். சில காரணங்களால் அப்பதக்கம் பின்னர் பறிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, செங்கல் சூளையில் தினக்கூலியாக சாந்தி வேலை செய்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

தற்போது அவர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெங்களூர் மையத்தில் உள்ள தேசிய விளையாட்டுக் கல்வி நிறுவனத்தில் பயிற்சியாளர் தொடர்பான பட்டய படிப்பு பயில விண்ணப்பம் செய்துள்ளார்.

அவரது ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு கல்வி கற்கும் காலத்தில் தங்குமிடம், விளையாட்டுப் பயிற்சிக்குத் தேவைப்படும் பொருள்கள் உள்ளிட்ட செலவினத்தை எதிர்கொள்வதற்காக தேசிய விளையாட்டு வீரர்கள் நல நிதியில் இருந்து ரூ. 60,500 வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார் ஜிதேந்திர சிங்.

புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி, தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் சாம்பியனாக திகழ்ந்தார்.

2005, 2006-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு தேசிய, மாநில, சர்வதேச தடகளப் போட்டிகளில் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்தார்.

2006 டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆனால், அதன் பிறகு அவருக்கு நடத்தப்பட்ட பாலின சோதனையில், ஆண் தன்மை இருப்பதாகக் கூறி வெள்ளிப் பதக்கத்தை பறிப்பதாக ஆசிய விளையாட்டு வாரியம் கூறியது.

அதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி, தனது கிராமத்திலேயே செங்கல் சூளையில் வேலை பார்த்தார். பின்னர் அவருக்கு தாற்காலிகப் பயிற்சியாளர் பணியை தமிழக அரசு வழங்கியது. அவருக்கு மாதம் ரூ. 5,000 மட்டும் சம்பளமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், முறைப்படி பயிற்சியாளர் ஆவதற்காக பெங்களூர் மையத்தில் உள்ள தேசிய விளையாட்டுக் கல்வி நிறுவனத்தில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள சாந்திக்கு நிதியுதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.