தில்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் அளவுக்கு தயாளு அம்மாளின் உடல்நிலை தகுதியாக உள்ளதா? என்பதைப் பரிசோதித்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன்னிலையில் தயாளு அம்மாள் சார்பில் அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி "தயாளு அம்மாளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும்.
மருத்துவர்கள் குழுவை அனுப்பி அவரது உடல்நிலையை பரிசோதிக்கவும் நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை' என்று கூறினார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அனுராக் கன்னா, "நீதிமன்றத்தில் ஆஜராக தயாளு அம்மாள் விலக்கு கோருவதைத்தான் சிபிஐ ஆட்சேபிக்கிறது. மருத்துவர் குழுவை அனுப்பி அவரை பரிசோதிக்க எங்களுக்கு ஆட்சேபம் இல்லை' என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ""தயாளு அம்மாளின் உடல்நிலையை, மத்திய அரசு மருத்துவமனைகளின் மருத்துவர் குழு பரிசோதிப்பதே சரியாக இருக்கும்.
அந்த வகையில், அவரைப் பரிசோதனை செய்ய மூன்று பேர் அடங்கிய மருத்துவர் குழுவை நியமிக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
அந்த மருத்துவர் குழு சென்னை சென்று தயாளு அம்மாளின் உடல்நிலையைப் பரிசோதிக்க வேண்டும். அதன் அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
மருத்துவர் குழு சென்னை சென்று வருவதற்கான செலவை சிபிஐ ஏற்க வேண்டும். அக்குழு சென்னையில் தங்கும் நாள்களில் தேவையான உதவிகளை மாநில அரசு செய்து தர வேண்டும்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் தயாளு அம்மாளைச் சேர்த்து பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கலாம்'' என்று உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







