ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தில்லி மாணவி பாலியல் வழக்கு: தண்டனை நாளை அறிவிப்பு

தில்லியில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த துணை மருத்துவ மாணவி வழக்கில் குற்றவாளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) தண்டனை அறிவிக்கப்படும் என்று விரைவு நீதிமன்றம் தெரிவித்தது.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 7:28 pm

தில்லியில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த துணை மருத்துவ மாணவி வழக்கில் குற்றவாளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) தண்டனை அறிவிக்கப்படும் என்று விரைவு நீதிமன்றம் தெரிவித்தது.

தெற்கு தில்லியில் உள்ள சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கு, கடந்த ஜனவரி 3 முதல் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விசாரிக்கப்பட்டது. அதன் முடிவில், நீதிபதி யோகேஷ் கன்னா, "குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் தாகுர், பவன் குப்தா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, நால்வரும் குற்றவாளிகள்' என்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். அவர்களின் தண்டனை விவரம் புதன்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, விரைவு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நால்வரும் புதன்கிழமை காலை 11 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். தண்டனை அறிவிக்கும் முன்பு, தீர்ப்பு தொடர்பான வாதங்களை முன்வைக்க போலீஸ் தரப்புக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்களுக்கும் நீதிபதி யோகேஷ் கன்னா அனுமதியளித்தார்.

போலீஸ் தரப்பு வாதம்: அதைத் தொடர்ந்து, தில்லி போலீஸ் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் தயான் கிருஷ்ணன் முன்வைத்த வாதம்:

"அப்பாவிப் பெண்ணை மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு நால்வரும் ஆளாக்கியுள்ளனர். அதன் விளைவால் அப்பெண் உயிரிழந்தார். ஒட்டுமொத்த தேசமும் இந்த வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. பாலியல் கொடுமையில் ஈடுபட நினைப்போருக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனை பாடமாக விளங்க வேண்டும்.

அரிதிலும் அரிதான பாலியல் சம்பவமாக துணை மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கருத வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும்' என்று அவர் வாதிட்டார்.

குற்றவாளிகள் தரப்பு கோரிக்கை: பவன் குப்தாவின் வழக்குரைஞர் விவேக் சர்மா "எனது கட்சிக்காருக்கு 19 வயதுதான் ஆகிறது. சம்பவம் நடைபெற்ற பேருந்தில் அவர் குடிபோதையில் இருந்ததாக போலீஸ் தரப்பு கூறுவதால், அதில் நடந்த தவறுக்கு அவரைப் பொறுப்பாக்க முடியாது. மேலும், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், நன்னடத்தையுடன் இருந்து வருகிறார். அவரது வயது, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கருணை காட்ட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது போலீஸ் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் தயான் கிருஷ்ணன் குறுக்கிட்டுப் பேசினார்.

"கொல்கத்தாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புக் காவலாளியால் 14 வயது சிறுமி கொடூரமாகப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த வழக்கில் 10 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு அக் காவலாளிக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அதே முன்மாதிரியை இந்த வழக்கிலும் பின்பற்ற வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.

தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு: முகேஷ் சிங் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.கே. சிங் "பாலியல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் பேருந்தை எனது கட்சிக்காரர் ஓட்டினார் என்பதைத் தவிர அவர் வேறு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. எனது கட்சிக்காரருக்கு எதிரான சாட்சியங்களை தில்லி போலீஸ் ஜோடித்துள்ளது. சமூகத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலைமை, உணர்ச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கக் கூடாது. ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் சிங்கின் சகோதரர் ராம் சிங்கை அவர்களின் குடும்பம் இழந்துவிட்டது' என்று வாதிட்டார்.

பவன் குப்தா, அக்ஷய் தாகுரின் வழக்குரைஞர்களும் "அரசியல் காரணங்களால் இந்த வழக்கை போலீஸ் ஒருதலைப்பட்சமாக அணுகியுள்ளது' என்றனர்.

ஆனால், அவர்களின் வாதத்தை நீதிபதி யோகேஷ் கன்னா நிராகரித்தார். மேலும், "குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை அறிவிப்பு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது' என்று அவர் கூறினார்.

உள்துறை அமைச்சருக்கு எதிரான மனு நிராகரிப்பு

பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸýக்கு உத்தரவிடக் கோரி குற்றவாளி முகேஷ் சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைவு நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.

இது தொடர்பாக முகேஷ் சிங்கின் வழக்குரைஞர் ஏ.கே. சிங் தாக்கல் செய்த மனுவில், "வழக்குக்கு வெளியில் உள்ளவர், "இந்த தண்டனைதான் விதிக்கப்படும்' என எவ்வாறு கூற முடியும்? எனவே சுஷீல் குமார் ஷிண்டே மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸýக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதி யோகேஷ் கன்னா, "இந்த வழக்கில் சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படும். மத்திய அமைச்சர் (சுஷீல் குமார் ஷிண்டே) தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து. எனவே மனுவை விசாரிக்க முடியாது' என்றார். அதைத் தொடர்ந்து, மனுவை வழக்குரைஞர் ஏ.கே. சிங் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.