

ஏலத்தில் எடுக்கப்பட்ட தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான கார் நாளை தில்லி அருகே எரிக்கப்படும் என இந்து தலைவர் சுவாமி சக்ரபாணி அறிவித்துள்ளார்.
பிரபல தலைமறைவு குற்றவாளி தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான பொருள்கள் கடந்த 9 ஆம் தேதி மும்பையில் ஏலம் விடப்பட்டது.
அப்போது அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பச்சை வர்ண 'ஹூண்டாய் அக்ஸண்ட்' காரை ரூ. 32,000 செலுத்தி, மும்பையைச் சேர்ந்த `அகில இந்தியா இந்து மகாசபா' என்ற அமைப்பு ஏலத்துக்கு எடுத்தது.
அந்த காரை, ஆம்புலன்ஸாக மாற்றி பயன்படுத்துவது என அதன் தலைவர் சக்ரபாணி முடிவு செய்திருந்தார். இதனிடையே சக்ரபாணிக்கு தாவூத் கூட்டாளிகளிடமிருந்து மிரட்டல் வந்தது.
அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது அந்த காரை பொதுமக்கள் முன்னிலையில் எரித்து விடுவது என சக்ரபாணி தீர்மானித்துள்ளார். இதையடுத்து அந்த கார் சில நாள்களுக்கு முன்பு மும்பையிலிருந்து தில்லி எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த கார் காசியாபாத் அருகே இந்திராபுரத்தில் பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணிக்குள் பொதுமக்கள் முன்னிலையில் எரிக்கப்படும் என்றார் சக்ரபாணி.
தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளின் மிரட்டல் குறித்து கேட்டதற்கு, எனக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. எனக்கு யாரிடமும் பயமில்லை இல்லை என்றார் சக்ரபாணி. எனினும், தாவூத் கூட்டாளிகளின் மிரட்டல் குறித்து அவர் கடந்த 11 ஆம் தேதி தில்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.