

தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை பாதுகாக்கும் வகையில் தில்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐயைக் கொணடு 'தோல்விகரமான சோதனை' நடத்திய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
தில்லி பேரவையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தில்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை செய்த டிசம்பர் 15 ஆம் தேதியை கருப்பு நாள் என வர்ணித்த கேஜரிவால், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சௌகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மீதும் இதேபோல சிபிஐ நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தில்லி முதன்மைச் செயலர் ராஜேந்திர குமாருக்கு நற்சான்றிதழ் வழங்கிய கேஜரிவால், கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ராஜேந்திரகுமார் மனதளவில் துன்புறுத்தப்பட்டார் என்றார். மேலும், கடந்த 8 நாள்களாக சிபிஐ அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் எவ்வித குற்றத்தையும் காணவில்லை.
மோடியின் வெளிநாட்டு பயணத்தை குறிப்பிட்ட கேஜரிவால், பிரமதர் எப்போதெல்லாம் வெளிநாடு செல்கிறாரோ அப்போதெல்லாம் தில்லி அமைதியாக இருக்கிறது. அவர் தில்லியில் இருக்கும் போது ஏதாவது பிரச்னை ஏற்படுகிறது என்றார்.
சிபிஐயை தவறாகப் பயன்படுத்தி தில்லி தலைமைச் செயலகத்தில் 'தோல்விகரமான சோதனை' நடத்திய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றார் .
சிபிஐயை பயன்படுத்தி எந்த முதல்வர் அலுவலகத்திலிருந்தும் கோப்புகளை எடுத்துச் செல்லலாம் என்ற நிலை உருவானால் இந்திய கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஆபத்து நேரிடும் என்றார்.
தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைத்து இன்று நடைபெற்ற சிறப்பு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.