மனித உரிமைகள் ஆணையத்திடம் நிர்பயா பெற்றோர் மனு: மத்திய, தில்லி அரசுகளுக்கு நோட்டீஸ்

டிசம்பர் 16 பலாத்காரக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறார் குற்றவாளி, டிசம்பர் மாதம் விடுதலையாக உள்ளதால், அவரால் சமுதாயத்துக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுவதை தடுக்க வேண்டும் என்று கூறி
மனித உரிமைகள் ஆணையத்திடம் நிர்பயா பெற்றோர் மனு: மத்திய, தில்லி அரசுகளுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

டிசம்பர் 16 பலாத்காரக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறார் குற்றவாளி, டிசம்பர் மாதம் விடுதலையாக உள்ளதால், அவரால் சமுதாயத்துக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுவதை தடுக்க வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய, தில்லி அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா பெற்றோர் தாக்கல் செய்த மனுவில்,

2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் படுபாதக செயல்களை செய்த சிறார் குற்றவாளி வரும் டிசம்பர் மாதம் விடுதலையாக உள்ளார்.

சிறார் குற்றவாளி என்பதால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து வரும் டிசம்பர் மாதம் விடுதலையாவது குறித்து தாங்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும், தங்களது மகளுக்கு நேரிட்ட துயரத்தில் மிகப் பயங்கரமான தவறுகளை இழைத்தவர் விடுதலையானால், அவரால் இந்த சமுதாயத்துக்கும், தனி மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். இதுபோன்றவர்களை தொடர்ந்து கண்காணிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும். அப்போதுதான், இதுபோன்றவர்களால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இதுபோன்றவர்கள், குற்றம் இழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற மிகத் தவறான சிறார்களை விடுதலை செய்யும் போது, அவர்கள் மீண்டும் மோசமான தவறுகளில் ஈடுபட்டு, அதனால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கவும், சட்டத்தில் வழிவகை செய்யுமாறு பரிந்துரைக்கவும் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் சொர்னா (பாலியல் பலாத்காரக் குற்றவாளிகள் பதிவுசெய்தல் மற்றும் கண்காணிக்கும் சட்டம்) சட்டத்தைப் போன்ற ஒன்றை கொண்டு வந்து அதனை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம்,  மிக மோசமான சம்பவம் நடந்து, படுகொலை செய்யப்பட்ட மகளின் எந்தவொரு பெற்றோருக்கும் இதுபோன்ற ஒரு அச்சம் ஏற்படுவது இயற்கையான விஷயம் தான். இந்த அச்சத்தை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com