ஒளரங்காபாத் ஆயுதக் கடத்தல் வழக்கு: அபு ஜுண்டால் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை

ஒளரங்காபாத் ஆயுதக் கடத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி அபு ஜுண்டால் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒளரங்காபாத் ஆயுதக் கடத்தல் வழக்கு: அபு ஜுண்டால் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை
Updated on
1 min read

மும்பை: ஒளரங்காபாத் ஆயுதக் கடத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி அபு ஜுண்டால் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 குற்றவாளிகளுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மகாராஷ்டிர மாநில திட்டமிடப்பட்ட கொடுங் குற்றங்கள் தடுப்பு (எம்சிஓசிஏ) நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, ஒளரங்காபாத் ஆயுதக் கடத்தல் வழக்கில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி அபு ஜுண்டால் உள்பட 12 பேர் குற்றவாளிகள் என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 8 பேரை வழக்கிலிருந்து விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒளரங்கபாத் அருகே உள்ள சந்த்வாட் - மன்மாட் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற இரு வாகனங்களை மகாராஷ்டிர போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அதில் ஒரு வாகனத்தை மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி அபு ஜுண்டால் ஓட்டி வந்ததாகத் தெரிகிறது. சோதனையில் அந்த வாகனங்களில் 30 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து, 10 ஏகே-47 ரக துப்பாக்கிகள், 3,200 தோட்டாக்கள் உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அவற்றைக் கைப்பற்றிய போலீஸார், இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்தனர். இதனிடையே, போலீஸாரிடம் சிக்காமல் அபு ஜுண்டால் அப்போது தப்பியோடி விட்டதாகவும், அதன் பிறகு சவூதி அரேபியாவில் அவர் தலைமறைவாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அபு ஜுண்டாலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு நடுவே ஒளரங்காபாத் ஆயுதக் கடத்தல் தொடர்பான வழக்கு, மகாராஷ்டிர மாநில திட்டமிடப்பட்ட கொடுங்குற்றங்கள் தடுப்பு (எம்சிஓசிஏ) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அதன் இறுதிகட்ட வாதம் முடிந்து கடந்த வாரம் வழக்கின் தீர்ப்பை எம்சிஓசிஏ நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகாந்த் அனேகர் வெளியிட்டார். அபு ஜுண்டால் உள்பட 12 பேர், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா ஆகியோரைக் கொல்ல சதித் தீட்டம் தீட்டியிருந்ததும் ஊர்ஜிதமாகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஆயுதக் கடத்தில் வழக்கில் அபு ஜுண்டால் உள்பட 12 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com