

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் மாநிலங்களவை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவும் அண்மையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, கார்த்தி சிதம்பரம் லண்டன், துபை, பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட 14 நாடுகளில் பல லட்சும் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆங்கில நாளேடு பயோனியர் செய்தி வெளியிட்டது.
இந்த செய்தியின் அடிப்படையில் சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
நாடாளுமன்றம் இன்று கூடியதும், மாநிலங்களவையில் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அவர்கள் அவையை நடத்தி கொண்டிருந்த துணைத் தலைவர் குரியனின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களையும் எழுப்பினர்.
அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வழியில்லை என்று கூறிய குரியன், அவையை மூன்று முறை ஒத்திவைத்தார். அதிமுகவினரின் போராட்டத்தால் இறுதியில் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.