

நாட்டிலேயே முதன் முறையாக பொதுமக்களின் கட்டுமான தேவைகளுக்காக இலவசமாக மணல் வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கு சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 200 கோடிக்கு இழப்பு ஏற்படும்.
முதலமைச்சர் சந்திரபாபு தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் மூலம், ஆந்திர மாநில நீர்நிலைகளில் எடுக்கப்படும் மணல் வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்வது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்துவோர் மீது தடுப்புக் காவல் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
பல்வேறு இடங்களில் எடுக்கப்படும் மணல் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மணலை சேகரித்து வைக்கக் கூடாது. பள்ளங்களை மூடுவதற்கும் மணலை பயன்படுத்தக் கூடாது என அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவர் கூறினார்.
கட்டுமானத் துறையினர் மணலை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசு பணி செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு மணல் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் கட்டுமான செலவு கணிசமாக குறையும்.
அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, இதுகுறித்த விரிவான வழிகாட்டுதல்களை சுரங்க துறை வெளியிடும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.