

தில்லியில் இன்று ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதை முன்னிட்டு போக்குவரத்தை சீரமைக்க சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடைபெற உள்ள உலக கலாசார விழாவில் பங்கேற்க வருவோரின் வாகனங்களால், தில்லி முக்கிய பகுதிகள் இன்று முதல் 3 நாட்களுக்கு கடுமையான வாகன நெரிசலை சந்திக்கவிருக்கிறது.
தில்லியின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக தில்லி போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
அதில், தெற்கு தில்லியின் ரிங் ரோடு, நொய்டா லிங் ரோடு, என்எச் 24, அக்ஷர்தாம், மயூர் விகார், ஆஷ்ரம் சௌக், அரபிந்தோ மார்க், மஹிபால்புர் சௌக், மேஹ்ரௌலி - குர்கான் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அதிக நெரிசல் ஏற்படும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
1,700 அதிகாரிகள் உலக கலாசார விழாவிற்கான போக்குவரத்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உலக கலாசார விழாவில் 25 ஆயிரம் வெளிநாட்டினர் உட்பட 35 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் விழாவில் பங்கேற்க 2 லட்சம் பேர் யமுனை நதிக்கரையில் குவிவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு வருவோர் பொதுப் போக்குவரத்தான பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துமாறும், அவர்கள் விரைவாக வீடு திரும்புமாறும், அறிவுறுத்தியதாக போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஷரத் அகர்வால் கூறினார்.
மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடுகளையும் போக்குவரத்துக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.