

வியாபாரம் என்றால் நஷ்டம் வரதான் செய்யும் என தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் முன்னாள் பிரமதர் தேவே கௌடா.
வங்கிகளிடம் ரூ. 9000 கோடி அளவுக்கு கடன் வாங்கிய மல்லையா வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் நாட்டில் பெரும்பாலானோர் அவருக்கு எதிரான விமர்சனங்களை தொடுத்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் தேவே கௌட அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
''விஜய் மல்லையா கர்நாடக மண்ணின் மைந்தன். மேலும், அவர் புகழ்பெற்ற குடும்பத்தை சேர்ந்தவர். வியாபாரத்தில் சில நேரங்களில் தவறுகள் நிகழலாம்'' என செய்தியாளர்களிடம் பேசிய கௌட கூறினார்.
மேலும், சர்வதேச அளவில் வியாபாரம் செய்யும் ஒருவரை குறிவைப்பது சரியல்ல என்றார்
மல்லையா தவிர 60 பெரிய மனிதர்கள் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை. ஆனால், மல்லையா மட்டுமே ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதாலே ஊடகங்கள் அவரை விமர்சிக்கின்றன. இல்லையென்றால் யாரும் அவரை கண்டு கொள்ள மாட்டார்கள் என்றார் முன்னாள் பிரதமர்.
மல்லையா வெளிநாடு சென்றது குறித்து கருத்து தெரிவித்த கௌட, அவர் மண்ணின் மைந்தன். அவர் நாட்டைவிட்டு ஓடி ஒளியவில்லை. அவரது டுவிட்டர் பதிவின்படி கட்டாயம் திரும்பி வருவார் என்றார்.
தேவே கௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உதவியாலே மல்லையா கடந்த 2001 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.